ஜோதியின் அம்மா மேடையையும், என்னையும், திரையையும் மாறி மாறி சில நிமிடங்கள் பார்த்து, எழுந்து மேடையில் நின்றிருந்த ஜோதியின் அப்பாவை நோக்கி நடந்தார். மேடைப்படிகளில் ஏறினார். திடீரென்று நடையை நிறுத்தி, நின்று யோசித்து, திரும்பி வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். அவரின் கண்களில் கண்ணீர்.
பாவனாவின் அம்மா அவரைத் தேற்றி "ஏன் அழறீங்க, அப்போ மாதிரி இல்ல. இப்ப இருக்கற பொண்ணுங்க நம்மள விட்டு எங்கயும் போயிட மாட்டாங்க. ரொம்ப சாமர்த்தியம் அவங்களுக்கு, புரியாத புருஷனுக்கு பயந்து தன் சந்தோஷத்த தியாகம் பண்றதெல்லாம் இப்ப ஓல்ட் ஃபேஷன் (old fashion). கார்ல கூட நாங்க இதத்தான் பேசிகிட்டு வந்தோம். பாபிக்கு ஜோதின்னா அவ்ளோ உயிரு. அவ எங்க போனாலும் அவளை விட மாட்டா. கவல படாதீங்க." என்று கூறி தன் இரு கண்களை மூடித் திறந்தார்கள்.
ஜோதி அம்மாவுக்கு 'என்ன டா இது; இவங்களுக்கு என்ன தெரியும், எவ்ளோ தெரியுன்னு தெரியலையே' என்ற சந்தேகத்தில் "உங்க கிட்ட ஒன்னு கேக்கறேன். பாவனாவுக்கு ஏன் கல்யாணம் பண்ணல இன்னும் நீங்க' என்று கேட்டார்.
புன்னகையுடன் பாவனாவின் அம்மா "அதும்மா..என் பொண்ணும் கொஞ்சம் வித்தியாசமானவ. நம்மள மாதிரி கிடையாது. ஒரு வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்கு தெரிஞ்சதும் எங்களால இத ஒத்துக்க முடியல. கொஞ்ச டைம் கொடுத்தோம், படிச்சி, பேசி புரிஞ்சிக்கிட்டோம். ஆனா ஒத்துக்க முடியல இப்ப வரைக்கும். அவங்கப்பா அவ சந்தோஷம் தான் முக்கியன்னு சொல்லி, எனக்கும் அவரு சில விஷயங்கள சொல்லிக்கொடுத்து அவ போக்குல விடறதுன்னு முடிவு பண்ணோம். அவளுக்கு அழகு இருக்கு, படிப்பு இருக்கு, எதிர் காலம் இருக்கு, எத்தனையோ பையனுங்க அவள கட்டிக்க ரெடியா இருக்காங்க. அப்பறம் ஏன் அவ இந்த மாதிரி இருக்கணும். அவ வேணுமுன்னே பண்ணல. இயற்கைல நமக்கு தெரியாதது எத்தனையோ இருக்கும்மா. ஆனா நாம எல்லாந்தெறிஞ்சா மாதிரி நடந்துக்கறோம்." என்றார்கள்.
ஜோதியின் அம்மா அவர்களை கண்ணீரோடு பார்த்து "போன மாசந்தான் எங்களுக்கே தெரிஞ்சுது, எங்களுக்கும் ஒன்னும் புரியல. அசிங்கன்னு நெனச்சோமே தவிர, டைம் குடுக்கணுன்னு நாங்க..." என்றவரை (இடைமறித்த பாவனாவின் அம்மா) "மேல கூப்புட்றாங்கம்மா.." என்று மேடையை காட்டினார்கள்.
கெட்டி மேள நேரம் வந்ததால் ஜோதியின் அம்மா மேடைக்கு செல்ல எழுந்தார். என்னைக்கடந்து சென்றார். சில நொடிகளில் மறுபடி திரும்பி வந்து என் கட்டை அவிழ்த்து என்னையும் மேடைக்கு அழைத்து சென்றார். மேடையில் இருந்த அப்பா மேடைப்படிகள் அருகில் வந்து அம்மாவிடம் "லூசா நீ, நாயப்போய் மேடைக்கு கூட்டிட்டு வர்ற" என்றவரை, அம்மா "ஒன்னும் ஆவாது, யாரும் எதுவும், சொல்ல மாட்டாங்க..உங்க மேல கேஸ் போட மாட்டாங்க. நமக்கு எது புடிக்குமோ அத பண்ணுவோம். அவளுக்கு பிடிச்சா மாதிரி தான் அசிங்கம் பாத்து அவள வாழ விடல, பாபி அவ கூட இருந்தா என்னா உங்களுக்கு" என்று சொல்லி பதிலுக்கு காத்திறாமல் என்னை மணமேடையின் பின்புறம் சென்று ஜோதி மற்றும் பாவனாவிடம் விட்டார்கள். இருவரும் என்னைக்கொஞ்சிய காட்சியை அனைவரும் பொறாமையுடன் "நாய்க்கு வந்த வாழ்வ பாத்தியா" என்பது போல பார்த்தனர். நாளை காலை சில லட்சம் பேர் என்னை வாட்ஸாப்பில் பார்ப்பது நிச்சயம். கெட்டி மேளம் கொட்டியது. மாப்பிள்ளை தாலியை எடுத்து ஜோதியின் கழுத்தில் வைத்து முதல் முடிச்சு போட தடவும்போது, பாவனா தாலியை வாங்கி மூன்று முடிச்சுகள் போட்டாள்.
This is entry #107 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலை கதை – கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...
எழுத்தாளர் - யோகா பாலாஜி
{kunena_discuss:1083}