2017 போட்டி சிறுகதை 113 - யார் அதிர்ஷடசாலி? - அனிதா தேவராஜ்
This is entry #113 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை
எழுத்தாளர் - அனிதா தேவராஜ்
“இந்த கதையில் ஏதேனும் பிழை இருந்தால் என்னை மன்னியுங்கள்.”
சார்! சார்! இதுல ஒரு கையெழுத்து போடுங்க சார்… என்றால் அங்கு இரவு பணியில் இருந்த நர்ஸ்.
என்ன இது சிஸ்டர்?
சுகப்பிரசவம் ஆக வாய்ப்பு இல்லை சார்.... அதனால அறுவைச் சிகிச்சை பண்ணி தான் குழந்தையை வெளிய எடுக்கணும்.... சீக்கிரம் போடுங்க சார்.....
நடுங்கும் தன் கரங்களால் கையெழுத்து போட்டுக் கொடுத்தான் தன்யாவின் காதல் கணவன் விக்ரம்.
தன்யாவை அறுவைச் சிகிச்சை அறைக்கு அழைத்து செல்லும் முன் அவளைக் காணச் சென்றான் விக்ரம்.
ஐ லவ் யு தணுமா... இதற்கு மேல் என்ன சொல்வது என்று விக்ரமுக்கு தெரியவில்லை.... அவன் கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப்பார்த்தது. தன்யா அவனை அருகில் அழைத்து அவன் கண்ணீரை துடைத்துவிட்டாள்....
அவனுடைய கையை பிடித்து ஆறுதலாக பிடித்து அவனை பார்த்துப் புன்னகைத்துவிட்டு சென்றாள். விக்ரமுக்கு அந்த புன்னகை ஆயிரம் ஆறுதல் வார்த்தை சொல்லியதுப் போல இருந்தது.
அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.
விக்ரம் - தன்யா இருவரும் காதலித்து மணம்புரிந்தவர்கள். இருவீட்டாரும் அரைமனத்துடன் தான் சம்மதித்தார்கள். கல்யாணமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டது.
கல்யாணம் ஆன புதிதில் எல்லாரும் போல இவர்களும் மகிழுச்சியாக இருந்தார்கள்.
விக்ரம் எப்பொழுதும் தன் காதலை வார்த்தையாலும் பரிசு பொருள் கொடுத்தும் வெளிப்படுத்திக் கொண்டுஇருப்பான்... ஆனால் தன்யா அவனுடைய காதலுக்கு எல்லாம் தன் புன்னகையை பரிசளிப்பாள்...
தனுமா நான் உனக்கு எத்தனை முறை ஐ லவ் யு சொல்லிருக்கிறேன்... நீ ஒரு முறையாவது லவ் சொல்லேன் தனுமா என்று கொஞ்சுவான் விக்ரம்.
விக்ரம் சொன்னாதான் காதலா என்று சிரித்துவிட்டு ஓடிவிடுவாள்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாமியாரின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் ஆளானாள். தன்யா இந்த வீட்டிற்கு வந்த முதல் நாளிலிருந்து மாமியார் அவளிடம் ஏதும் பேசமாட்டார். விக்ரம் இருக்கும்பொழுது மட்டும் அவளிடம் பேசுவார். அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. விக்ரமிற்கு அப்பா இல்லை அவன் சிறுவயதிலே இறந்துவிட்டார். அதன்பிறகு விக்ரம் தான் அவர் உலகம் ஆகி போனான். அசலில் இருந்து தன் மகனுக்கு பெண் எடுத்தால் அவள் தன்னை மகனிடம் இருந்து பிரித்துவிடுவாள் அதுவே தன் அண்ணன் மகள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று நம்பினார். ஆனால் விக்ரம் தன்யாவை தவிர எவரையும் மணக்கமாட்டேன் என்றும் அவள் இல்லை என்றால் தன் வாழ்க்கையில் திருமணம் என்பதே இல்லை என்றும் உறுதியாக கூறிவிட்டான். இதனால் தன்யாவின் மீது வெறுப்புக்கொண்டார்.
தன்யாவும் தன் மாமியாரின் குணம் அறிந்து நடந்துகொண்டாள். தன் அன்பால் அவரை மாற்ற நினைத்தாள். அவர் இவளிடம் பேசாமலிருந்தாலும் இவள் வலிய சென்று பேசுவாள். இதை எதையும் விக்ரமிற்கு தெரியாமல் பார்த்துக்கொண்டாள். ஏனென்றால் விக்ரமிடம் சொன்னால் கண்டிப்பாக தன் அன்னையிடம் சென்று ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்பான். அதுவே உறவில் விரிசல் உண்டாக்கும் என்று எண்ணினாள்.
இப்பொழுது இரண்டு ஆண்டுகளாகியும் தன்யாவிற்கு குழந்தை இல்லையென்பதால் அவரின் கோபத்தை எல்லாம் தன்யாவின் மேல் நேரடியாக காட்டினார். எப்பொழுதும் தன்யாவை குறை கூற தொடங்கினார்.
தன்யாவின் தாய் அவளை காண வந்தார்.
சம்பந்தியம்மா எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கேன். நீங்க அப்புறம் வீட்ல எல்லாரும் நலமா?
ம்.... எல்லாரும் நல்லா இருக்கோம்....
அப்பொழுது அவள் மாமியாரின் தோழியும் அவரைக் காண வந்தார்.
லட்சுமி எப்படி இருக்க?
நல்லா இருக்கேன் பார்வதி. நீ எப்படி இருக்க? உட்கார்... என்ன சாப்பிடற?
நான் நல்லா இருக்கேன். ஒன்னும் வேணாம் லட்சுமி... என் பேரனுக்கு பெயர் சூட்டும் விழா நீ கண்டிப்பா வரனும். அப்படியே உன் மகனையும் மருமகளையும் கூட்டிட்டு வா.
நான் மட்டும் வரேன் பார்வதி. என் மருமகளுக்கு இன்னும் குழந்தை இல்லை. அதனால அவள கூப்பிடாத. நான் சொல்லறது உனக்கு புரியுதில்ல.
அப்பொழுது அவர்களுக்கு காஃபி கொண்டுவந்த தன்யாவின் காதுகளில் விழுந்தது.
தன் தாயைப் பார்த்தாள். அவர் அவளின் மாமியாரை அக்னி பார்வைப் பார்த்துகொண்டுஇருந்தார்.
அவரை தடுக்கும் முன் அவர் பொரிய ஆரம்பித்துவிட்டார்.
என்ன சம்பந்தி. இப்படி எல்லாம் தன்யா பற்றி பேசுகிறீர்கள். அவளுக்கு குழந்தை இல்லாததற்கு அவள் மட்டும் தான் காரணமா? ஏன் உங்க பிள்ளைகிட்ட கூட தான் குறை இருக்கலாம்.