2017 போட்டி சிறுகதை 114 - கண்ணே கலைமானே - சித்ரா
This is entry #114 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு
எழுத்தாளர் - சித்ரா
திகு திகுவென பற்றி எரிந்த தீயின் வெளிச்சமும் ,அதன் கூடவே கேட்ட அந்த தீன ஓலமும் ,அந்த ஊரையே திரட்டி அந்த வீட்டில் முன் நிற்க வைத்தது .
''பின் பக்கத்துலே தான் தீ எரியுது பாரு ,கொண்டா தண்ணிய ...''
''யாரும் கிட்ட போகாதீங்க விலகி நில்லுங்க ...''
''பக்கத்துல பரவ போகுது சட்டுன்னு அணைங்க ..''
'' யாரோ கொளுத்திகிட்டாப்புல இருக்கே ,அத பாருங்க ...''என்று ஆளுக்கொன்றை அவர் அவர் பேச ,
அந்த காட்சியும் ,பேச்சும் அந்த கூட்டத்தின் முன்னே நின்ன சின்னாவுக்கும் அவன் மனைவி தங்கத்துக்கும் ,பெரும் கிலியை ஏற்படுத்தியது ...
அது அவர்களது குடிசை ...
உள்ளே இருந்த அவனது மகள் ...
இவர்கள் இருவரும் கழனி வேலைக்கு சென்றுருக்க ,படிக்கவென்று வீட்டில் இருந்தது அவர்களுடைய ஒரே அருமை மகள் செல்வி ....
சின்னான் தெரு கதவை படார் என்று உடைத்து உள்ளே நுழைத்தான் ...
எரியும் தீயின் புகையால் சூழ்ந்த அந்த குடிசையில் ,முதலில் அவன் கண்ணுக்கு எதுவும் சரியாக தெரியவில்லை ..
எரிச்சலில் கண்களில் நீர் வழிய அவன் அடி மேல் அடி வைத்து போகும்போதே ,குடிசையின் பின்னே இருந்த குளியல் அறையின் தகர கதவு திறக்க ,முற்றிலும் கருகிய நிலையில் ,உயிருக்கு போராடிய அந்த கரிய உருவம் ,அங்கும் இங்கும் அலைந்து ,கடைசியில் துடிப்பும் ஓலமும் அடங்கி கீழே வீழ்ந்தது !
அவன் கூடவே நுழைந்த தங்கத்தின் குரல் உச்ச ஸ்தாயியில் ஒலிக்க ஆரம்பித்தது ...
''ஐயோ கண்ணு ,எங்கள வுட்டுட்டு போய்ட்டியா ....''
தரையில் விழுந்து புரளும் தங்கத்தை தாண்டி மெல்ல அந்த உருவத்தை நோக்கி போகிறான்....,கால்கள் பின்ன ..
திறந்திருந்த கதவின் வழியே இப்போது மொத்த சனமும் உள்ளே நுழைந்தது .
ஆனால் யாருக்கும் அருகே போக துணிவில்லை ...
ஒருவாறு அருகே போன சின்னானுக்கு ,அது தன் அருமை மகள்தான் என்று புரிகிறது ...
உரு தெரியாத அளவிற்கு கருகி இருந்த போதும் ......
பந்தாய் எழுந்த துக்கத்தை அடக்கியபடியே ,பக்கத்தில் இருந்த பாயை உருவி அதில் அவளை சுருட்டுகிறான் ....
எல்லாம் கன நேரத்தில் முடிந்து போயிற்று ...
செல்ல மகள் கரிக்கட்டையாய் ....
அதன் பின் ஊரின் தலையாரி ,ப்ரெசிடெண்ட் எல்லோரும் வந்து பார்த்தனர் ,இது இயற்கை மரணம் இல்லை என்பதால் போலீஸ்க்கு தெரிய படுத்தினர் .
போலீஸ் வந்தது ..
சடலத்தை போஸ்ட் மோர்ட்த்துக்கு அனுப்பி விட்டு விசாரணையை தொடங்கியது .
படித்துக் கொண்டிருந்த பெண் இந்த முடிவை சடாரென்று எடுத்து இருந்ததால் ,படிப்பில் இருந்தே ஆரம்பித்தது .
ஆனால் அங்கே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஏதும் விஷயம் இல்லை என்று விளங்கியது ...
ஓரளவிற்கு நன்றாக படிப்பவள் என்றும் ,ஆசிரியர்களுடனும் நல்ல உறவே இருந்தது என்பதும் விசாரணையில் தெரிய வர ,அங்கே பிரச்சனைக்கு வழி இல்லை என்று காட்டியது ..
அடுத்து அவள் நண்பர்கள் ,மற்றும் அவர்களுடனான அவள் பழக்கம் என்ற கோணத்தில் விசாரணையை நகர்த்தியது ..
அந்த சிறு கிராமத்தில் அந்த பகுதியில் இருந்ததே இருவது வீடுகள் தான் .
விவசாய கூலிகள் என்ற முறையில் அவர்கள் குடி இருப்பும் சிறு ஓலை குடிசைகள் தான் ..
மேட்டு தெரு எனும் பெயர் பெற்ற அந்த இடத்தில் பக்கத்துக்கு பத்து பத்து வீடாக எதிரும் புதிருமாக இருந்தது .
அதில் அவள் வயதை ஒத்தவர்கள் ,அவளுடன் அதே பள்ளியில் படிப்பவர்கள் என நால்வர் இருந்தனர் .
அதில் மூன்று பேரை போலீஸ் விசாரித்த போது , ஒரே பள்ளியில் படித்த போதும் அவர்கள் மூவரும் வேறு வகுப்பு என்றும் ,செல்வியுடன் உயிர் தோழியாய் இருந்ததும் ,அவள் கூடவே சேர்ந்து பள்ளிக்கு போவது ,வருவது என்று எல்லாமாய் இருந்தது கண்மணி என்பது தெரிய வந்தது .
கண்மணியின் வீட்டில் விசாரிக்க சென்றபோது அவளை காணவில்லை என்ற தகவல் கிடைத்தது ..
கண்மணியின் தாய் தந்தையும் விவசாய கூலிகள் என்பதால் ,அவர்களும் அன்று காலையில் வேலைக்கு சென்ற போது வீட்டில் கண்மணி படித்துக் கொண்டிருந்ததாகவும் ,வேலை முடித்து மாலையில் திரும்பி வந்து பார்த்தால் அவள் வீட்டில் இல்லை என்பதும் ,இந்த களேபாரத்தில் ,அவள் எங்காவது மிரண்டு போய் ,ஒளிந்து கொண்டிருக்கலாம் ,அவளை தேடிக் கொண்டிருக்கின்றோம் என்று பதில் வந்தது .
அந்த பதிலில் போலீஸ் சமாதானம் அடையவில்லை ..
அவள் வீட்டுக்கு திரும்பி வந்தால் உடனே தகவல் தெரிவிக்க சொல்லி விட்டு மேலும் அருகே இருந்தவர்களிடம் விசாரணையை தொடர்ந்தது ...
அப்போது கண்மணியின் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடியிருந்த கண்ணன் என்ற இளைஞனையும் காணவில்லை என்பது தெரிய வந்தது !
கண்ணன் பத்தாவது பெயில் ஆனதிலிருந்து படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு ,அவ்வப்போது கிடைக்கும் எடுபிடி வேலைகளை செய்து கொண்டு இருந்தவன் .
செல்வி சில சமயங்களில் கண்மணி வீடு தேடி வந்து சேர்ந்து படிப்பதுண்டு ..