கண்மணி சில சமயங்களில் செல்வி வீட்டுக்கு சேர்ந்து படிக்க போகும் வழக்கம் இருந்தாலும் ,அன்று தன் வீட்டில் தங்கி படிப்பதாக தான் சொல்லி இருந்ததால் ,அவளை வீட்டில் விட்டு சென்றதாக அவள் தாய் முருவாயி கூற ,
அதையே ஆமோதித்தார் தந்தை வைரமுத்து ,கண்மணியின் அண்ணன் முருகன் அவளை தேடி ஊருக்குள் சென்று இருப்பதாகவும் கூறினர் .
இங்கே கண்ணன் வீட்டில் ,அவனும் அன்று காலையில் எந்த கூலி வேலையும் இல்லாததால் வீட்டில் தூங்கி கொண்டிருந்ததாக அறியப்பட்டது
இந்த இரண்டு விஷயங்களையும் சேர்த்து பார்க்க ...
இருவருமே காணாமல் போய் இருக்கிறார்கள் ...
இருவரையும் காலை பொழுதில் தான் கடைசியாக ஊர் மக்கள் பார்த்தது ...
இருவருமே வீடு தங்கி இருந்தனர் ...
ஆக இருவரும் சேர்ந்து ஊரை விட்டு ஓடி இருக்கலாம் ,என்ற அனுமானத்திற்கு போலீஸ் வந்தது .
செல்வியின் உயிர் தோழி ,காணாமல் போய் இருக்க ,அங்கே செல்வி தீ வைத்துக் கொண்டதிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது ...
இருப்பினும் கண்ணனையும் ,கண்மணியையும் சேர்த்து பார்த்ததாகவோ ,இல்லை அவர்களுக்குள் பழக்கம் இருக்கும் என்று சந்தேக படும்படி எந்த நிகழ்வும் எப்போதுமே இருந்தது இல்லை என்று ஊரே ஒன்று போல் கூறியது !
இருந்தும் சந்தேகத்தின் பேரில் துரிதமாக அவர்கள் இருவரின் புகைப்படங்களையும் சேகரித்து ,செக் போஸ்ட் ,பஸ் ஸ்டாண்ட் ,இன்னும் பிற பொது இடங்களில் காட்டி துப்பு கிடைக்கிறதா என்று பார்க்க அனுப்பி வைக்கப்பட்டது ...
மேலும் இரண்டு நாட்கள் நரக வேதனையில் கழிந்தது ,சம்மந்தப்பட்ட மூன்று குடும்பங்களுக்கும் ..
பெரும் மனசுமையும் ,தீராத துயரமும் ,எதற்கு இந்த முடிவை எடுத்தாள் என்ற குழப்புமுமாக , தவித்தனர் சின்னானும் ,தங்கமும் ..
தன் மகளுடன் கூடி விளையாடி வளர்ந்த ,எத்தனையோ பொழுதுகளில் தன் வீட்டில் அன்னமிட்ட ,அந்த இளம் குருத்து அப்படி ஒரு முடிவை தேடி கொண்டதும் ,கண்மணியின் பெற்றோர் மனதிலும் துயரத்தை எழுப்பியது .. கூடவே தன் மகளை காணாமலும் ,அவள் ஓடிப் போய் இருப்பாள் என்பதை நம்ப முடியாமலும் குழம்பி தவித்தனர்.
மேலும் இரண்டு நாள் ஓடி மறைய , போலீஸ் எதிர்பார்த்திருந்த துப்பு கிடைத்தது .
பக்கத்து டவுன் லாட்ஜில் ,சந்தேகத்துக்கு இடமான ஒரு இளம் ஜோடி தங்கி இருப்பதாக தகவல் வந்தது .
அதை உடனடியாக விசாரிக்க சென்ற போலீசிற்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது !
அங்கே ஜோடியாக தங்கி இருந்தவர்களில் ஒருவன் கண்ணன் என்ற போதும்,கூட தங்கி இருந்தது கண்மணி அல்ல செல்வி !
அப்போது கண்மணி எங்கே ...?
செல்வி இங்கிருக்க அங்கே இறந்தது யார் ....?
அத்தனை கேள்விகளுக்கும் விடை செல்வியிடம் இருந்தது .
கண்மணியின் வீட்டிற்கு போய் வந்த பொழுதுகளில் ,கண்ணனுக்கும் செல்விக்கும் காதல் மலர்ந்திருக்கிறது .
இருவரும் அதை வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைத்து வந்தனர் ...
அவ்வளவு ஏன் ,கண்மணிக்கே கூட தெரியாமல் மறைத்தனர் .
ஒரு கட்டத்தில் ஊரை விட்டு ஓடி போய் கல்யாணம் செய்து வாழ்வது ,என்று முடிவு செய்தனர் .
அவனுக்கு நிரந்தர வேலை இல்லாததால் ,பிழைப்புக்கு வழி பற்றி யோசித்த போது ,அவர்களுக்கு இந்த குயுக்தியான ஐடியா தோன்றியது ..
அதாவது கண்மணியை செல்வி வீட்டுக்கு வரவைத்து , காதில் ,கழுத்தில் போட்டுருக்கும் நகைகளை திருடிக் கொண்டு ,அவளையும் எரித்து விட்டால் ,இறந்தது செல்வி என நம்பி யாரும் தேட மாட்டார்கள் ..
கண்மணியும் ,கண்ணனும் ஓடி போய் விட்டதாக ஊர் நம்பும் ,
இவர்கள் அந்த நகை விற்ற காசில் உல்லாசமாக தங்கள் புது வாழ்வை தொடங்கலாம் என்று திட்டம் போட்டார்கள் .
அதன்படி மதியத்திற்கு மேல் அவளை வர வைத்து ,நைசாக பேசி நகையை கழட்டி எடுத்துக்கொண்டு அவள் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் ,அவளை அடித்து மயக்கம் அடைய செய்து ,பாத்ரூமிற்குள் கொண்டு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு அவர்கள் தப்பி ஓட ..
இங்கே தீயின் தாக்கத்தில் மயக்கம் லேசாய் தெளிந்த போதும் தன்னை காப்பாற்றி கொள்ள இயலவில்லை கண்மணியால் ....
போலீஸின் திறமையான விசாரணையில், அவர்கள் மாட்டி கொள்ள ..
ஊரே ஆத்து ஆத்து போனது ..
உயிர் தோழியை கொலை செய்வாளா ஒருத்தி என ..
செல்வியை போய் பார்க்கவோ ,மகள் என்று சொல்லவோ கூட மறுத்து விட்டனர் அவள் பெற்றோர் !
இங்கே அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்த கண்மணியின் அம்மாவிடம் ஒரு நிருபர் ''உங்க பொண்ணை ,உயிர் தோழியே கொன்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ''என்று கேட்ட போது
''அவளையும் எம்மகளா தான் நினைச்சேன் ''என்று கூறி விட்டு குலுங்கியது அந்த வெள்ளை உள்ளம்.
This is entry #114 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு
எழுத்தாளர் - சித்ரா
{kunena_discuss:1083}