பதிலுக்கு அடிப்பானா? திட்டுவானா? அம்மா வீட்டிற்கே போ என்று அனுப்பி விடுவானா?
அம்மா வீடு என்று இருந்தது இப்போது அண்ணி வீடு என்று மாறி போய் இருந்தது... அவளுடைய அம்மாவே அப்பாவின் மறைவிற்கு பின் அண்ணிக்கு பிடிக்கும் விதத்தில் நடந்து பழகி இருப்பது அவளுக்கு தெரியும்.
இப்போது என்ன செய்ய போகிறாள்?
ஆனாலும் உனக்கு இப்படி கை நீளக் கூடாது கீர்த்தி என தன்னை தானே திட்டிக் கொண்டவள், என்ன செய்வது என்று புரியாமல் குழம்புவதை தொடர்ந்தாள்.
செவ்வந்தி, கீதா இருவராலுமே தியாகுவை தடுக்க முடியாது என்று அவளுக்கு தெரியும்...!
எனவே அவன் எடுக்கும் எந்த முடிவிலும் மாற்றம் இருக்க போதில்லை... என்ன செய்வான்?
அது அவன் சொல்லாமல் தெரிய போவதில்லை...
தண்டனை என்ன என்று தெரிந்துக் கொள்ள காத்திருக்கும் சிறைக் கைதியை போல அவள் காத்திருக்க வேண்டியது தான்... வேறு வழியே இல்லை...
அன்றைய நாள் முழுவதுமே அவளுக்கு தடுமாற்றத்துடனே சென்றது. எப்போதும் செய்யும் வீட்டு வேலைகள் மட்டுமல்லாமல், அவள் ஆசையுடன் செய்யும் மற்றவற்றையும் அவளால் செய்ய முடியவில்லை.
பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது, உணவு வைப்பது, ரோஜா செடிகளுடன் பேசியபடி தண்ணீர் ஊற்றுவது... எதையும் அவளால் சரியாக செய்ய இயலவில்லை...
எறும்புகள் ஊர்ந்து செல்வதை பார்த்தால் உணவு எடுத்து அருகே வைப்பவள், இன்று ஒன்றும் தோன்றாமல் வெறித்த படி இருந்தாள்....
அவளை அதி பயங்கரமாக குழப்பி, யோசிக்க வைத்த தியாகு, அன்று மாலையில் வழக்கத்தை விட முன்பாகவே வீடு திரும்பினான்.
அவனை பார்த்து என்ன நடக்க போகிறதோ என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தவளிடம்,
“உன் கிட்ட கொஞ்சம் பேசனும்.. வா...” என்றான்.
“தியாகு, அவ சின்ன பொண்ணு....” என்று செவ்வந்தி சொல்ல தொடங்கியது அவனின் ஒரு பார்வையிலேயே பாதியில் நின்று போனது.
பலியாடு போல அவள் அவன் பின்னே செல்ல, செவ்வந்தியும், கீதாவும் கவலையுடன் பார்த்திருந்தார்கள்.
அறைக்குள் சென்ற பின்பும் உடனே எதுவும் சொல்லாமல் மேஜை மீதிருந்த புத்தகங்களை இடம் மாற்றி வைப்பது, பேனாவை எடுத்து பென் ஸ்டாண்டில் வைப்பது என்று ஏதேதோ செய்துக் கொண்டிருந்தான் தியாகு...
கீர்த்திக்கு அவன் நடந்துக் கொள்வது வித்தியாசமாக இருந்தது...
ஏதாவது பெரிய அளவில் செய்யலாம் என்று யோசிக்கிறானா???
வினாடிகள் மெல்ல நகர.... அவளின் கவலை அதிகரித்துக் கொண்டே சென்றது... கூடவே இதா, அதா, இப்படியா, அப்படியா என்ற கேள்விகளும் தான்...
திடிரென அவள் பக்கம் திரும்பியவன்,
“சாரி...” என்றான்.
கீர்த்தி திகைத்து போனாள்!
அவளுக்கு இருந்த பயத்தில், காது சரியாக வேலை செய்யவில்லையோ???
அவன் திட்டியது தவறாக காதில் விழுந்து விட்டதோ???
அவள் திரு திருவென விழிக்க, மீண்டும்,
“சாரி...” என்றான் தியாகு.
அவனின் எதிர்பாராத சாரியில் குழம்பி போய்,
“நான்.. நீங்க... என்....” கோர்வையாக பேச இயலாமல் தடுமாறினாள் அவள்.
“சாரி கீர்த்தி... எந்த அளவுக்கு நான் உன்னை இம்சை செய்திருந்தா நீ என்னை அடிச்சிருப்ப?”
அவன் அந்த ‘நீ’க்கு கொடுத்த அழுத்தம் புரிய,
“அதென்ன, நீ???” எனக் கேட்டாள் அவள்.
“நீ எவ்வளவு சாஃப்ட்ன்னு எனக்கு தெரியும்... கல்யாணமான புதுசுல கீழே விழுந்த சர்க்கரை பொங்கலை சுத்தி நிறைய எறும்பு வந்திருக்குன்னு இன்னும் கொஞ்சம் பொங்கல் வச்சது தொடங்கி, தினமும், காக்கா குருவிக்கு தண்ணி வைக்குற வரைக்கும் எந்த அளவுக்கு நீ அடுத்த உயிருக்கு மதிப்பு கொடுப்பன்னு தெரியும்...”
‘பரவாயில்லையே, இந்த அளவிற்கு கவனித்திருக்கிறானே...!’ என தனக்குள் ஆச்சர்யப்பட்டாள் அவள்...
“அப்படி பட்ட நீ என்னை அடிக்கனும்னா, நான் உன்னை அந்த எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு கொண்டு போயிருக்கனும் தானே? காலையில இருந்து இதே தான் என் மனசில ஓடிட்டு இருந்தது... உன் முகத்தை பார்த்து சாரி சொல்ல கூட தயக்கமா இருக்கு...”
கோபம் பொங்க பார்த்து பழகி இருந்த அவனின் முகத்தில், முதல் முறையாக தயக்கம் மேலோங்க இருக்கவும், கீர்த்திக்கு அதிசயமாக இருந்தது....
“உனக்கு இன்னும் என் மேல கோபம் இருக்கும்.. எனக்கு புரியுது... நான் என்ன செய்ய இந்த கோபம் என் கூடவே பிறந்தது... என்னை விட்டு போக மாட்டேங்குது....”
இவனுக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறதா???