பாத்ரூமில் அவ்வப்போது இழையும் கரப்பான்பூச்சிகளை அடித்தே கொள்பவள்.
" அது என்ன பாவம் பண்ணுச்சு. அதைக் கொண்டு போய் வெளியில விட்டுடலாம்ல..." என்பான் குமார்.
" உங்களுக்கு கஷ்டமாயிருந்தா தூக்கி வச்சிக்கிட்டு கொஞ்சுங்களேன். நானா வேண்டாங்கறேன்" என்று வெடுக்கென்று பதில் வரும்.
" என்னங்க, என்ன யோசனை...?"
மாலா அவன் நினைவு கலைத்தாள்.
" சொ...சொல்லு மாலா..."
" ஒரு காயுமில்ல. வாங்கிட்டு வாங்கன்னு அனுப்பினா வெறுங்கையோட வந்து நிக்கிறீங்களே...."
குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்தாள். குமார் மறுபடி பையை எடுத்து கொண்டு கிளம்பினான்.
கடைத்தெரு ஜே, ஜேவென்றிருந்தது. ஆடு இறந்த இடத்தில சிறு கும்பல் கூடியிருக்க, குமாரின் கால்கள் தாமாகவே அங்கு விரைந்தன. கும்பலுக்கு நடுவில் ஒருவன் பேந்த, பேந்த விழித்தபடி நின்றிருதான். குமார் அருகிலிருந்தவரிடம் விசாரித்தான்.
"யாரு இது...?'
" இந்தாளுதான் காரை ஒட்டிகிட்டு போனவனாம். மேலத்தெரு போனதும் கார் டயர் வெடிச்சு போச்சாம். என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிகிட்டு நின்னவனை அந்த பக்கமா போன கறிக்கடை பாய் புடிச்சு இழுத்துட்டு வந்துட்டாரு."
அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே ஆட்டுக்கு சொந்தக்காரி சத்தம் போட்டபடி வந்தாள், அழுததற்கான சுவடு துளி கூட இல்லாமல்.
" கண்ணு முன்னாடி இருக்கா, இல்ல பொடரியில இருக்கா...?"
"தெரியாம...."
" தெரியாம ஒம்பொண்டாட்டி மேல வண்டி ஏத்துவியா...ஆயிரம் ரூவா குடுத்து வாங்குன ஆடு. மில்லுகாரன் கையில, கால்ல வுழுந்து இந்த ஆட்டை வாங்கறதுக்குள்ள நான் பட்டபாடு எனக்குதான்டா தெரியும். இன்னிக்கிருந்தா ரெண்டாயிரத்துக்கு போவும். இன்னும் ஒரு மாசம் போனா அம்பது, நூறு அதிகமா கெடைக்கும்னு வுட்டு வச்சிருந்தேன். அதுக்குள்ள ஏத்திட்டு போயிட்டியேடா..."
டிரைவர் பையிலிருந்த பணத்தை எடுத்து அவள் கையில் திணித்தான். அவசரமாய் எண்ணிப் பார்த்தவள் முகமாறினாள்.
" என்னை என்னா.....நெனச்சியா? ரெண்டாயிரம் இல்லாம இந்த இடத்தை வுட்டு நகர முடியாது. தெரிஞ்சிக்க."
அவள் அவிழ்ந்து விழுந்த முடியை எடுத்து முடிந்து கொண்டு அவனை நகர விடாமல் நின்றிருந்தாள். அவன் வேறு வழியில்லாமல் அங்கே, இங்கே துழாவி ரெண்டாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்துவிட்டு விட்டால் போதுமென்று ஓடிப்போனான்.
" யக்கா, அந்தாள இந்நேரமுட்டும் நாந்தான் புடிச்சு நிக்க வச்சிருந்தேன். எனக்கு ஏதாவது...."
பெட்டிக்கடைக்காரன் தலையை சொறிய, ஒரு நூறு ரூபாய்த்தாளை அவனிடம் வீசிவிட்டு அவள் ஒரு தினுசாய் நடந்தாள்.ஆடு உறைந்து போன ரத்தத்தோடு ஈக்கள் மொய்க்க பரிதாபமாக கிடந்தது.
' இதுதான் உலகம். இப்போது நடந்தது தான் நிதர்சனம். இதில் ஆச்சர்யப்படவோ, வருத்தப்படவோ எதுவுமில்லை' என்றெண்ணியவனாய் குமார் காய்கறிக் கடையை நோக்கிப் போனான்.
{kunena_discuss:785}