(Reading time: 7 - 13 minutes)

“அப்போ நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட வேண்டியது தானே? உடனே வந்துடப்போறார்”

முறைத்தான் அகிலேஷ். "என்ன விளையாடரியா...என்னைப் பத்தி எல்லா விஷயமும்  உனக்கு தெரியும்”.

“ஆமாம் எல்லாமே தெரியும் , ஆனா நீ செய்யுறது எந்தவகையில் நியாயம் ன்னு தான் தெரியலை”.

“என்னடா.. உளர்ரே?”

“நான் உளரலை .நீ கொஞ்சம் யோசிச்சுப் பாரு ,  தப்பு செய்தது உங்கம்மா... ஆனா நீ தண்டனை குடுக்கறதோ உங்கப்பாவுக்கு, இது எந்த வகை நியாயம்பா..." கோபமாக விழிகளை விரித்தான் சுபாஷ்.

“என்ன... நா எங்கப்பாவுக்கு தண்டனை குடுக்கறேனா? அவரு தான் எனக்கு தண்டனை கொடுத்துட்டு வெளியே போயிட்டார்.  அவரை நா எவ்வளோ மிஸ் பண்றேன் தெரியுமா..? ”

“ஹீம் ..என்ன பிரயோஜனம்? உங்கம்மா மேலே இருக்கிற வெறுப்பிலே நீ கல்யாணமே வேணாம்கிறே. அதனால அவரு எவ்வளோ வருத்தப்படறாரு தெரியுமா, உனக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிச்ச அவர் இந்த வயசான காலத்திலயாவது பேரன் பேத்திகள் ன்னு சந்தோஷமா இருக்க வேண்டாமா?. ஒரு மனைவியா அவருக்கு செய்யவேண்டிய கடமையை உங்கம்மா செய்யவில்லை. அவுங்க வயித்தில் பிறந்த நீயும் அவுங்க மாதிரியே இருக்கறியே. நீயாவது உங்கப்பாவுக்கு ஒரு நல்ல மகனா உன் கடமையை செய்யக்கூடாதா? வயதான காலத்தில் அவரை தாங்கிப் பிடிக்கும் விழுதாக இல்லாமல் இப்படி நீ தனிமரமாய் நிக்கறது அவருக்குக் குடுக்கற தண்டனை இல்லையா?” .   

என்ன பேசுவது என்று தோன்றாமல் அவனையே வெறித்துப் பார்த்தவாறு  நின்றுவிட்டான் அகிலேஷ் .

“நீ இன்னிக்கு லீவு போட்டுட்டு நல்லா யோசிச்சு முடிவு பண்ணு ,நாளைக்கு  உன் பதிலை சொல்லு. நானே அங்கிள் கிட்டே பேசறேன்…”

அகிலேஷ் யோசித்தான்.  

‘சுபாஷ்  சொன்னது சரிதானே, அம்மா  செய்த தவறுக்கு அப்பாவை வருத்துவது என்ன நியாயம். என்னைத் தவிர வேறு எதையுமே விரும்பாத அருமையான தந்தைக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இதுதானா?’.

“சாரிடா சுபாஷ், நீ சொல்ற மாதிரி நா இதுவரைக்கும் யோசிச்சதில்லை. எங்கப்பாவை நா எவ்வளோ கஷ்டப்படுதித்திட்டேன்  ன்னு இப்போதான் தெரியுது. நா அவரு சொல்ற மாதிரியே கேக்கறேன். நீதான் அவரு கிட்ட பேசி இங்கே திரும்பி வர வைக்கணும். அவர விட எனக்கு எதுவுமே முக்கியமில்லை” கண்களில் நீருடன் அகிலேஷ் பேச சுபாஷ் சிரித்தான்.

“ஹேய் அகிலேஷ்  அழாதேடா...  அங்கிள்  வேற எங்கேயும் போகலை, எங்க வீட்டுலதான் இருக்கார். நேத்தைக்கு ரயில்வே ஸ்டேஷன்ல  அவரைப் பார்த்துட்டு நான்தான் எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போயிட்டேன். நீ நாளைக்குள்ள நல்ல முடிவா சொல்லலைன்னா அவர் நிஜமாவே மும்பைக்கு கிளம்பறதா இருந்தார். நல்ல வேளை , நீ இன்னிக்கே நல்ல முடிவெடுத்துட்டே. சரி சரி வா என் காரிலேயே போயி அங்கிளை அழைச்சுக்கிட்டு வந்துடுவோம்” சுபாஷ் சொல்ல மகிழ்சியுடன் கிளம்பினான் அகிலேஷ்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.