20. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி
தந்தையின் திடீர் கேள்வி தனக்குள் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த பல உணர்வுகளை தட்டி எழுப்பியதை நொடி பொழுதில் உணர்ந்தான் தமிழ். அன்று யாழினியின் வீட்டுக்கு சென்றவன், மோகனை அங்கு பார்த்ததும் அகமகிழ்ந்து போனது உண்மை.
அவர் அவனுக்கு கல்வியில் மட்டும் குரு அல்ல. குணத்திலும் மானசீக குருதான். உண்மையான அன்பினை வெளிப்படுத்த பேசிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை, அனைவரிடமும் கண்ணியமுடன் நடந்து கொள்ள வேண்டும், ஒரு வேலையை தொடங்கினால் அதை முழுமையாக முடித்து விட வேண்டும்,எந்தவொரு செயலையும் ஆரம்பிக்கும் முன்னரே பலமுறை யோசிக்க வேண்டும். இப்படி அவன் கற்றது எத்தனையோ! இன்று வரை அதை அவன் பின்பற்றிக் கொண்டும் வருகிறான்.
அவரின் போதனைகளை நினைத்தே வளர்ந்ததாலோ என்னவோ தன்னில் அவரது சாயலை தமிழால் உணர முடிந்தது. நிச்சயம் யாழினி தன் வசம் மனதினை இழக்க இதுவே காரணமாகி இருக்க வேண்டும். அப்படி நினைத்தவனின் மனதில் பாரமொன்று குறைந்தது.
தனது கறார் குணத்தை யாழினி சமாளிப்பாளா?நிச்சயம் மாட்டாள்.. சிறு பெண்..ஏதோ ஆர்வ கோளாரில் பிதற்றுகிறாள் என இதற்கு முன் அவன் மனதில் தேக்கிவைத்திருந்த ஐயங்கள் எல்லாமே பனியாய் உருகி போயின.
“மோகன் மாமாவையே இவள் சமாளிக்கிறாள்னா, கண்டிப்பா என்னோடு சந்தோஷமாகத்தான் இருப்பாள்..”. தமிழ் அவ்வீட்டிலிருந்து கிளம்பும்போது அவனுக்குள் உதித்த முதல் எண்ணம் அதுதான்.
இருப்பினும், அவனது கோட்பாடுகள் அவனைக் கட்டிப்போட்டன.
“நீ எடுத்த முடிவு சரியா தமிழ்?நீ உறுதியாக இருக்கீயா? யாழினிக்கு உன் மேல இருக்கும் மரியாதையும் காதலும் உனக்கு யாழினி மேல இருக்கா?அல்லது அவளுடைய காதலை ஏத்துக்கிட்டா போதும்னு நினைக்கிறியா? ஒரு தடவை பிடிச்ச கையை எப்பவும்விட கூடாது. இதுவரை தமிழ் எந்த முடிவையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு எடுத்தது இல்லை.. இந்த காதலிலும் கொஞ்சம் நிதானமாக இரு..!” தமிழின் அறிவு அவனது மனதினை அடக்கியது.
எப்போதும் மனம் சொல்லும் பேச்சை இரண்டாம் பட்சமாகத்தான் கேட்பான் தமிழ். அவனைப் பொருத்தவரையில் மனம் என்பது சுயநலமானது. அது தனக்கு தேவையானதைப் பற்றி சாதகமாகவே நினைத்து முடிவெடுக்கும்.மாறாக, மூளையோ பிறருக்கும் சேர்த்து சிந்திக்கும்.. தனது முடிவு மற்றவருக்கு பங்கம் விளைவிக்குமா? என்பதை சிந்தித்திக்கும்.இதுதான் தமிழின் தியரி..
யாழினியிடம் பேசிக்கொண்டு அவளின் அன்பினை உணர்ந்துகொண்டு தன் மனதை படிப்பது இயலாத காரியம் என்பதை அவன் நன்கறிந்து வைத்திருந்த தமிழ்,முடிந்த அளவிற்கு அவளை தேடிச் செல்ல வேண்டாம் என்றே நினைத்தான். அவனது எண்ணத்திற்கு செவி சாய்ப்பது போல யாழினியும் ஒதுங்கியே இருந்தாள்.
யாழினியை விட்டு விலகி நிற்பதாக எண்ணிக்கொண்டு அவளை இன்னும் இன்னும் நெருங்கி கொண்டே போனான் தமிழ். தினமும் அவளுக்கே தெரியாமல்,அவளது காலேஜிற்கு சென்றான். ஃபேஸ்புக்கிலும் பின் தொடர்ந்தான். அவளது விருப்பு,வெறுப்பு, பிடித்தங்கள், பிடிவாதங்கள் அனைத்தையும் கவனிக்க ஆரம்பித்தான்.
தன்னையும் மீறி யாழினியிடம் அவன் ரசித்தது, அவள்புகழ் மீது கொண்டுள்ள நட்பைத்தான்!இவள் பழகுவதற்கு இனிய தோழி.. அடிக்கடி அவனுக்குள் எழும் எண்ணம் அது.புகழின் அசைவை வைத்தே அவன் தேவை என்ன என்று அவளால் புரிந்து கொள்ள முடியும். அதே போல, யாழினி புகழின் அன்னை சுப்ரஜா சென்னை வந்தபோது அவரிடம் செல்லம் கொஞ்சியதை தமிழ் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. முகம் விகாசிக்க, அவரை கழுத்தோடு அவள் கட்டிக் கொண்ட காட்சி அவன் மனதினை நிறைத்தது.
“அம்மாவ ரொம்ப மிஸ் பண்ணுவாளோ? பாவம்ல? சின்ன பொண்ணு.. மாமாவும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு.. டீனேஜ்ல என்ன பண்ணி இருப்பாள்? ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாளோ? கல்யாணத்துக்கு அப்பறம் அவளை நல்லா பார்த்துக்கனும்.. நம்ம மனோ அவளுக்கும் நல்ல அம்மாவாக இருப்பாங்க!” தன்னையும் மீறி எழுந்த வார்த்தைகள் அவை.
“என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ..இல்லை..
ஏமாற்றம் தருவாளோ?” காரில் ஹரிஹரனின் குரல் மிதந்து வர, தமிழ் சன்னமாக விசில் அடித்தான். தான் இருக்கும் மனநிலைக்கு மிகவும் பொறுத்தமான பாடல்தான் என்று எண்ணி கொண்டே பாடலோடு இணைந்து பாடினான். இதுவரை யாழினிக்கு தெரியாமல், சொல்லப்போனால் சில நேரங்களில் தனக்கே தெரியாமல் அவன் செய்த காதல் கிறுக்குத்தனங்கள் எல்லாம் அவனது கண்முன் அணிவகுத்து நின்றன.
“பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்..
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்..
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்..
இரவும் பகலும் என்னை வாட்டினாள்..
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்..
காதல் தீயை வந்து மூட்டினாள்..”