“ஐ ஆம் சோ சாரி மிஸ்டர் ராமசந்திரன். கௌரியோட கண்டிஷன் இஸ் வெரி வெரி கிரிடிகல்” இனி பிழைப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்று டாக்டர் தெரிவிக்கவும் ராமசந்திரன் முற்றிலுமாக உடைந்து போனார்.
“கௌரியோட வீட்டுகாரர். அவர் எங்கே டாக்டர்” லக்ஷ்மி கேட்டார்.
திடீரென பிரசவ வலி ஏற்படவும் முதலில் திடமாக இருந்த சர்வேஸ்வரன் கௌரியின் உடல் நிலை அறிந்து மிகவும் அதிர்ந்து போனார். எப்படியாவது மனைவியை பிழைக்க செய்யுமாறு மன்றாடினார். குறை பிரசவமாக பிறந்த குழந்தையும் சீரியசாக இருக்க மேலும் உடைந்து போயிருந்தார். குழந்தை நல மருத்துவர் நகரின் பெரிய மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்வது நலம் என்று தெரிவிக்கவே அதற்க்கான ஏற்பாடுகள் செய்ய சென்றவர் திரும்பவே இல்லை. குழந்தை உடல் நிலை தானகவே முன்னேற்றம் அடையவும் மருத்துவர்களும் மேற்கொண்டு அங்கேயே சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கௌரியின் நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்படவும் சர்வேஸ்வரனும் திரும்பாத நிலையில் ராமச்சந்திரனை தொடர்பு கொண்டார் டாக்டர்.
“டாக்டர் கௌரியை பார்க்க முடியுமா” ராமசந்திரன் அனுமதி வேண்டினார்.
அங்கே பலவித மானிடர்கள் பொருத்தப்பட்டு செயற்கை சுவாச கருவியின் உதவியோடு கிழிந்த நாராய் கிடந்த தங்கையைப் பார்த்த ராமசந்திரன் உயிருக்குயிராய் வளர்த்த தங்கையை இந்நிலையில் பார்க்கவா இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்று துடித்துப் போனார்.
மெல்ல கௌரியின் கரங்களைப் பற்றவும் ஸ்பரிசம் உணர்ந்து மெதுவாக திறந்தார் கௌரி.
தனது சகோதரனைக் கண்டதும் அது வரை அதிவேகமாய் துடித்துக் கொண்டிருந்த அவரது இதயம் மெல்ல மெல்ல அமைதி கொண்டது.
சுவாசக் குழாய் பொருத்தியிருந்த காரணத்தினால் அவரால் பேச முடியவில்லை எனினும் தன் குழந்தையை பாதுகாக்கும் படி கண்களாலும் செய்கையினாலும் தனது அண்ணனிடம் உணர்த்திவிட்டு நிம்மதியுடன் கண் மூடினார்.
மானிடர் ஒலி எழுப்பவும் எங்கே வந்த டாக்டர் ராமச்சந்திரனை வெளியில் இருக்க சொல்லிவிட்டு பரிசோதிக்க அதற்குள் அந்த உயிர் உடலைப் பிரிந்திருந்தது.
குழந்தையின் உடல் நிலை முற்றிலும் சீராகும் வரை இரு வாரங்கள் அங்கேயே தங்கியிருந்தனர் லக்ஷ்மி ராமசந்திரன் தம்பதியினர்.
சர்வேஸ்வரன் திரும்பினால் அவரையும் உடன் அழைத்துச் செல்லவே எண்ணியிருந்தார் ராமசந்திரன். ஆனால் சர்வேஸ்வரன் திரும்பவே இல்லை.
“எப்படியாவது மனைவியை பிழைக்க வைக்க மன்றாடினார்” டாக்டர் சொன்னது மீண்டும் மீண்டும் ராமசந்திரன் மனதில் வந்து போனது.
“அவர் சம்சாரம் சீரியசாகவும் குழந்தையைக் கூட பார்க்க திராணி இல்லாம உடைஞ்சு போயில்ல கிடந்தாரு” அங்கே சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் தற்செயலாக கூறியதையும் ராமசந்திரன் நினைவில் கொண்டு ஓர் முடிவுக்கு வந்தார்.
அதாவது சர்வேஸ்வரன் கௌரி பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் குழந்தையை வெறுத்து விலகி சென்று விட்டார் என்பதே.
இதை லக்ஷ்மியிடம் சொல்லவும் செய்தார். லக்ஷ்மிக்கு இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை எனினும் சர்வேஸ்வரன் இரு வாரங்கள் வரை அங்கே வரமால் இருந்ததால் எதுவும் சொல்ல முடியாமல் இருந்தார்.
அம்ரித வர்ஷினி என்று குழந்தைக்கு பெயர் சூட்டி கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தனர்.
“அத்தை மகள் இவள்” என்று வருணிடம் குழந்தையைக் காட்ட தனது பிரியமான அத்தையை நினைவு வைத்திருந்த வருண் வர்ஷினியைக் கொண்டாடினான்.
வர்ஷினி பேசத் தொடங்கிய பருவத்தில் ஹாலில் சந்தன சட்டத்தில் சிரித்துக் கொண்டிருந்த கௌரியைக் காட்டி என்னோட அத்தை உன்னோட அம்மா என்று வருண் சொல்லித் தரவும் லக்ஷ்மியும் குழந்தைக்கு தங்களை அத்தை மாமா என்ற உறவை சொல்லியே வளர்த்தார் .
பார்க்கில் விளையாட செல்லும் போது அங்கே நிறைய சிறுபிள்ளைகள் அண்ணா அக்கா என்றே பெரிய குழந்தைகளை அழைக்கவும் வர்ஷினியும் வருணை அண்ணா என்றே அழைக்கத் தொடங்கினாள். வருணும் என் தங்கச்சி என்றே மற்றவரிடம் கூறவும் அவர்களிடையே அண்ணன் தங்கை உறவு ஆணிவேராய் ஊன்றியது.
“அண்ணா என் அப்பா எங்கே” கொஞ்சம் விவரம் தெரிந்த வயதில் வர்ஷினி கேட்க, “உன்னால தான் அத்தை சாமிகிட்ட போயிட்டாங்கன்னு உன் அப்பா உன் மேல கோவமா உன்னை விட்டுட்டு தூரமா போயிட்டார்” என பதில் கூறினான் வருண்.
தனது தாய் தந்தையின் உரையாடலை முன்பு கேட்டிருந்தவன் மனதில் இவ்வாறு பதிந்து போயிருக்க அதை வர்ஷினியிடம் சொல்லி வைத்தான்.
பின் வர்ஷினிக்கு அனீமியாவின் காரணத்தினால் அடிக்கடி மயக்கம் வர அவளுக்கும் இதய பதிப்புகள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்த போது அவளின் அம்மாவும் இதயக்கோளாறு காரணமாக தான் இறந்து போனார் என்று அவளுக்கு தெரிய வந்தது.
அன்றிலிருந்து வர்ஷினி தானாகவே சில விஷயங்களை கற்பனை செய்து கொண்டாள். தான் பிறந்ததால் தான் அன்னைக்கு இதயக் கோளாறு ஏற்பட்டு அவர் இறந்து போக தந்தை தன்னை வெறுத்து விட்டார் என மனதில் ஆழப் பதித்துக் கொண்டாள்.
தாய் தந்தையின் காதல் திருமணம் பற்றியும் வேலைக்காரர்கள் மூலம் தெரிந்து கொண்டவள் அப்படி என்ன காதல் என்னை வெறுத்துவிடும் அளவிற்கு என்றே எண்ணம் கொண்டிருந்தாள்.
ஆனால் ராமை சந்தித்து காதல் கொண்டபின் அவனது காதலின் தீவிரத்தை உணர்ந்த பின் அவளுக்குள் பயம் தொற்றிக் கொண்டது.
அந்த பயத்தின் காரணமாக தான் அவனை பிரியவும் துணிந்தாள்.
இதயம் துடிக்கும்
{kunena_discuss:1109}