தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 18 - லதா சரவணன்
நீங்க சந்தேகப்பட்டது சரிதான் நிச்சயமாக சந்துரு மட்டுமல்ல துரையும் சந்தேகப்பட வேண்டிய ஆள்தான் என்று வினிதா சொல்லவும் திகைப்பாய் நோக்கினான் கெளதம்,
நேற்று கேட்டபோது தேவையில்லை என்று சொன்னாயே வினிதா இப்போது ஏன் ? முதலில் எதிர்புறம் செல்லும் சந்துருவின் வண்டியை பாலோ பண்ணுங்க ஏதாவது துப்பு கிடைக்கும், அதன்பிறகு மேற்கொண்டு பேசிக்கொள்ளாமல் சந்துருவின் வண்டியை பின்தொடர்ந்தார்கள். சந்துருவின் வண்டி நின்ற இடம் மாயாவின் வீடுதான் விஜயாவைப் பற்றிப் பேசி எதிர்காலத்தினைப் பற்றிசொல்லி இந்த பயத்தில் இருந்து அவளை விடுவிக்கவேண்டும் என்று நினைத்தே அம்மாவிடம் உடனே விஜயாவை அழைத்து வந்துவிட்டான்.
உள்ளே என்ன நடக்கிறது அந்தப் பொண்ணு யாரு ?!
அவங்க வெளியே வரட்டும் நான் சொல்றேன்.
அம்மா உன்கிட்டே கொஞ்சம் பேசணும் தயவு செய்து எழுந்து உட்காரு என்று அன்னையின் கையைப் பற்றி பர்வதம்மாள் உட்கார வழி செய்தான் சந்துரு, வழக்கத்திற்க மாறாக இதென்ன புதுக்கூத்து என்று யோசனையோ மகனோடு கூட வந்திருக்கம் அந்தப் பெண் யாராக இருக்கும் என்ற யோசனையில் திகைத்தார் பர்வதம்மாள். யாருடா இது ?
சொல்றேன் இவ பேரு விஜயா எனக்கும் இவளுக்கும் கொஞ்ச நாளா தான் பழக்கம், எனக்கு மனசே சரியில்லைம்மா, எதுஎப்படியோ சொத்து அதுயிதுன்னு நாம எவ்வளவோ கணக்கு போட்டோம் அதெல்லாம் இபபோ இல்லைன்னாலும், நானும் நீங்களும் கடைசி வரைக்கும் நிம்மதியாகவாது இருப்போம், மாயாவோட நகைகள் சிலது என்கிட்டே இருக்கு கம்பெனியிலே என்னோட பங்கையும் நான் நான் வித்துட்டேன் கையிலே இருக்கிறே பணத்தை வைத்து நாம ஏதாவது வெளியூர் போய் பிழைச்சிக்கலாம். என்னை நம்பி நீ வருவியாம்மா இப்போ பேசுறது உன்னோட பழைய சந்துரு இல்லை புது சந்துரு என்னம்மா சொல்றே ?!
நான் என்னடா சொல்றது மாயா போயிட்டா, அவளை வைச்சு நாம செஞ்ச கற்பனையெல்லாம் போயிடுச்சு ! இப்போ வெறும் கூடுதான் இருக்கு உடம்புலே இருக்கிற கொஞ்சநஞ்ச உசிரும் போறதுக்குள்ளே நாம போயிடலாம், நீ இந்தப்பொண்ணையே கல்யாணம் செய்துக்கோ ஆனா என்னை கைவிட்டுடாதேடா ?
அம்மாவின் கெஞ்சல் சந்துருவையும் அசைத்தது. அவர்கள் வெளியே வரும் போது வினிதாவை கவனித்துவிட்டாள் விஜயா, சந்துருவின் பின்னால் தயங்கித் தயங்கி வெளியே வந்தவளை சட்டென்று முன்னுக்கு இழுத்தாள் வினிதா
என்ன சந்துரு இவளை புதுசா பிடிச்சு இருக்கிறே போலயிருக்கே ?! வழக்கமா நீ கன்னிப்பொண்ணுக்குத் தானே வலைவீசுவே ?! இது கல்யாணமாகி பிள்ளைபெத்தவளைக் கூட்டி வந்திருக்கியே ?!
வினிதா என்ன உளர்றே ?
யார் உளர்றா ? இவ யாருன்னு இவளையே கேளு ? நீயே சொல்றியா இல்லை உன் புருஷனை வரச்சொல்லட்டுமா ?
சந்துரு நான் துணை நடிகைன்னு உங்களுக்கு தெரியுமே ? ஒருமுறை இவங்களும் இன்னொரு பெண்ணின் முன்னாடியும் நானும் ஒரு ஆளும் கணவன் மனைவியா நடிக்க வேண்டியிருந்தது அதை வைத்துதான் இவ இப்படி பேசுறா ?
எனக்கு ஒண்ணும் புரியலை கமலாய் நடித்துக்கொண்டு இருந்த கெளதம் பேசினான்.
உங்களுக்கு புரிய வைக்கிறது என் கடமை இவளைக் கூட்டிட்டு நான் ஒரு இடத்திற்கு போகப்போகிறேன் அங்கே உங்களுக்கு எல்லாமே புரியும்
வினிதா உன்னோட கோவத்தை என் மேல காட்டு இவளை நான் கல்யாணம் செய்துக்கப் போறேன் அவளை கஷ்டப்படுத்தாதே, நான் உன்கிட்டே நடந்திட்டது தப்புதான் எத்தனை தப்பு பண்ணினாலும் அம்மாவோட இந்த உடல்நிலை பாதிப்பு எனக்கு ரொம்பவும் பயத்தை கொடுத்துவிட்டு இருக்கு தயவு செய்து எங்களை விட்டுடுங்க இருக்கிற கொஞ்ச நஞ்ச பணத்தோட நாங்க இந்த ஊரைவிட்டே போயிடறோம்
மாயாவோட கேஸ் முடியற வரையில் யாரும் இங்கேயிருந்து போக முடியாது நான் உட்பட, முதல்ல இப்போ என்கூட வாங்க, கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு போகும் நிலைதான் இருவருக்கும்
டேய் ஒழுங்கா சாப்பிடுடா எத்தனை தடவை இதை ஈரமாக்கிட்டே இருப்பே. ச்சீ சாப்பிடும் போதுதானா இப்படிச் செய்யணும் என்று அலுப்புக்குரலில் பேசிக்கொண்டு இருந்தான் அவன் எதிரே எச்சில் ஒழுகிய வாயோடு இருபத்தைந்து மதிக்கத்தக்க இளைஞன் ஒரவன் உடலில் மறைப்பிற்காய் சிறிய டவுசர் மட்டும் போடப்பட்டு இருந்தது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த தண்டனைடா உனக்கு எப்போதான் சரியாகும்.
உன்னால நீ பண்ண சின்ன தப்பினால எத்தனை பெரிய சிக்கல் பார்த்தியா ? அவளும் செத்து நீயும் நிம்மதியில்லாம என்னடா வாழ்க்கையிது ? கஞ்சியை அவனுக்குப் புகட்டிவிட்டு ஒழிகிய எச்சிலைத் துடைத்துவிட்டு இடுப்பில் இருந்த துணியை இறுக்கிக் கட்டினான். பாத்திரங்களை ஒதுக்கும் போது தன்னையும் மீறி மனம் வலித்தது.