‘அனுரதவை எனக்கு தெரியுமே’ அழகாய் புன்னகைத்தார் அவர் ‘யூ கேன் டூ இட் ஹரிஷ்’ நீ தானேமா அது? ஒரே நாளிலே ஹரிஷ் அளவுக்கு நீயும் பாப்புலர் ஆகிட்டியே’ அவர் சொல்ல கொஞ்சம் திகைப்புடன் புன்னகைத்தாள் அவள்.
அதன் பின் இன்னும் சிலர் அருகில் வர இதே போன்ற கேள்விகள், அறிமுகங்கள். அவர்கள் இருவரையும் சேர்த்து திருமணம் பற்றிய கேள்விகளையும் அவர்களால் தவிர்க்க முடியவில்லை.. சில நிமிடங்கள் இப்படியே கடக்க இருவருக்கும் தனிமை கிடைக்கவே இல்லை.
பின்னர் அங்கு வந்து சேர்ந்தார் பெரியப்பா. ஹரிஷும், அனுவும் அருகருகே நின்று பேசிக்கொண்டிருக்க சற்று நேரம் சற்றே தூரத்தில் அதை ரசித்தபடியே நின்று விட்டார் அவர். அவரை பார்த்த மாத்திரத்தில் மெல்ல மெல்ல நீர் சேர ஆரம்பித்தது மகளின் கண்களில்.
ஹரிஷ் யாரையோ வழியனுப்ப நகர ஓடி சென்று அவர் அருகில் நின்றாள் பெண்
‘பெ...ரி...யப்பா..’ மெல்ல கரைந்தது அவள் குரல்.
வாங்க வாங்க மிசஸ் அனுராதா ஹரிஷ்...’ பெரியப்பாவின் கரம் அவள் முன்னால் வாஞ்சையுடன் நீண்டது.
‘என்ன பெரியப்பா அவர் என்னனமோ சொல்றார்’ அவர் கரம் பிடித்துக்கொண்டு கேட்டாள் மகள்.
பெற்றவரின் முகம் கூட அவளுக்கு நினைவில் இல்லை. தந்தைக்கு தந்தையாய் அதை விட பல நேரங்களில் உற்ற தோழனாய் இருந்த மனிதர் அவர்.
‘உண்மைதான்மா. அவர் சொல்றது எல்லாம் உண்மைதான்மா. தப்பு முழுசும் நம்ம பக்கம். உன்கிட்டே பேசினதை பூராவும் என்கிட்டே சொல்லிட்டார்மா உன் மாமனார். அவர் சொல்றதுக்கு எல்லாம் கண்ணை மூடிட்டு சரின்னு சொல்லு. எல்லாம் சரியா நடக்கும்.’ என்றார் நிதானமாக.
‘இல்ல பெரியப்பா உங்களை விட்டுட்டு...’ ‘எனக்கு பயமா இருக்கு பெரியப்பா’ கண்ணீர் கண்ணை விட்டு விழுந்துவிடவா என்றது.
‘என்னை விடச்சொல்லி யாருமே சொல்ல மாட்டாங்க அனு. இங்கே யாரும் அவ்வளவு மோசமானவங்க இல்ல. இங்கே எல்லார்கிட்டேயும் நிறைய மனசாட்சி மிச்சமிருக்குமா. நம்ம வீட்டிலேதான் எப்போவோ அதை கொன்னுட்டாங்க அதுவும் இவங்க விஷயத்திலே...’
ஒரு பெருமூச்சுடன் மெல்ல தாழ்ந்தது அவள் சிரம்
‘சீக்கிரமே கல்யாணம் இருக்கும்மா. எல்லா ஏற்பாடையும் பண்ண சொல்லிட்டேன். நீ தயாரா இரு.’
‘பெரியப்பா இன்னும் பெரியம்மாகிட்டே சொல்லக்கூட இல்லை...’ அவள் பதற
‘இதெல்லாம் ஒரு விஷயமே இல்லைமா சமாளிச்சிடலாம்’ படு நிதானமாக சொன்னார் பெரியப்பா’
‘இல்ல பெரியப்பா என்னதான் இருந்தாலும் இத்தனை வருஷம் எல்லாரும் என்கூடவே இருந்து என்னை இவ்வளவு மேலே கொண்டு வந்திருக்கீங்க பெரியப்பா. அதனாலே....
‘அதனாலே?’ பெரியப்பா கேட்பதற்குள்
‘இன்னைக்கு நைட் நீங்க இங்கேதான் தங்கறீங்க’ சொல்லிக்கொண்டே வந்தான் ஹரிஷ். சட்டென நின்று போனது அவர்கள் பேச்சு.
‘இல்லப்பா நைட் ஊருக்கு போகணும்.’ பெரியப்பா சொல்ல
‘அதெல்லாம் நாளைக்கு போகலாம் அங்கிள். இன்னைக்கு நைட் இங்கே நிறைய வேலை இருக்கு’
‘நைட்டு என்னபா வேலை?’
‘அதெல்லாம் உங்ககிட்டே சொல்ல முடியாது அங்கிள். பெரிய வேலை...’ அவளை பார்த்து அவன் கண்சிமிட்ட சட்டென அவள் முகத்தில் வெட்க சிரிப்பு மலர தனது கைப்பையால் இரண்டு அடி வைத்தாள் அவன் முதுகில்.
கலகலவென சிரித்தவனின் சிரிப்பு ஏதோ யோசைனையிலோ அல்லது அவன் எடுத்த முடிவினாலோ மெல்ல தேய்ந்தது. விழிகளை மூடிக்கொண்டு கைகளை தேய்த்து விட்டுக்கொண்டான்.
அவன் முக பாவத்தில் இவர்கள் இருவர் முகத்திலும் கூட யோசனை படர்ந்தது.
‘ஆக்சுவலா நான் வேலைன்னு சொன்னது எனக்கு அனுகிட்டே சில முக்கியமான விஷயங்கள் பேசணும் அங்கிள்..’
‘எதை பத்தி ஹரிஷ்?’ அவனது முக பாவம் அவளுக்குள் கொஞ்சம் பய விதைகளை தூவி இருந்தது.
‘ம்? நிமிர்தவனின் விழிகளில் என்ன இருந்தது என்று அவளால் படிக்கவே முடியாமல் இருக்க ‘உன்னோட வாட்ஸ் ஆப் டி.பி பத்தி’ அவன் நிதானமாக சொல்ல பூகம்பம் எப்படி இருக்குமென்பதை பூகம்பம் வராமலே உணர்ந்தாள் அனுராதா.
‘வாட்ஸ் ஆப் டி.பியா?’ பெரியப்பா புரியாமல் கேட்க
‘அவளுக்கு புரிஞ்சிடுச்சு அங்கிள். நீங்க இன்னும் சாப்பிடலைதானே? டைம் ஆச்சு வாங்க..’ அவரை அழைத்துக்கொண்டு நடந்தான் ஹரிஷ்.