தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 12 - மீரா ராம்
சுற்றி இருப்பவர்களின் பார்வை வட்டத்திற்குள் இருவரும் இருப்பதை உணர்ந்தவனுக்கு அவளிடத்தில் தான் சொல்ல வந்தததை புரிய வைப்பது யோசனையை தந்தது…
குரலை தணித்தவன், “அனிதா… ப்ளீஸ்… ஃபர்ஸ்ட் இங்க இருந்து கிளம்பலாம்… மத்ததை வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்… வா…” என கூறிட, அவளோ பதிலே பேசவில்லை…
“அனிதா… உங்கிட்ட தான் சொல்லுறேன்… ப்ளீஸ்… வா…”
அவன் கெஞ்சிட அவளோ, “இப்போதான் உனக்கு தெரியுதா விக்கி?... எவ்வளவு அசிங்கம் படுத்தமுடியுமோ அவ்வளவும் செஞ்சிட்டு இப்போ வீட்டுக்குப் போய் பேசலாம்னு சொல்லுறீயா?...” எனக் கேட்டாள் வேகத்துடன்…
அவள் சொல்வதில் இருந்த நியாயம் அவனை சுட, தலைகுனிந்தவன், பின் நிமிர்ந்து, அவளிடம் மன்னிப்புக் கேட்டான் மனதார…
“என்னை மன்னிச்சிடு அனிதா…”
“கேட்குறதுக்கு ரொம்ப ஈசி தான் விக்கி… ஆனா அதை ஏத்துக்கவும் ஒரு மனசு வேணும்…”
“அனிதா எல்லாரும் பார்க்கும்படி உங்கிட்ட கோபப்பட்டது தப்புதான்… ஆனா அப்படி கோபப்பட வச்சது நீதான்னு இப்பவரை உனக்கு புரியாதது தான் அனிதா எனக்கு ஆதங்கமா இருக்கு….”
“செய்யுறதெல்லாம் செஞ்சிட்டு இப்போ என் மேல பழியை தூக்கிப் போடுறீயா?... அதுசரி… உனக்கு இதுக்கெல்லாம் சொல்லியாத் தரணும்?... சான்ஸ் கொடுக்கலை சான்ஸ் கொடுக்கலைன்னு நீ மத்தவங்க மேல பழி தூக்கி போடுறீயே தவிர, உன் பக்கம் என்ன மிஸ்டேக்ன்னு நீ யோசிச்சுப்பார்த்தீயா?...”
“அனிதா….”
அவன் பல்லைக்கடித்துக்கொண்டு அவள் பெயரை உச்சரித்திட,
“கோபம் வருதா விக்கி?... இப்படித்தான் விக்கி நீ ஒவ்வொரு தடவையும் கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்காம வரும்போதும் எனக்கு வரும்… இருந்தாலும் உன் மேல இருந்த காதல்னால அதெல்லாம் நான் சகிச்சிட்டிருந்தேன்…”
அவள் சொன்னதும், அவளை வலியோடு ஏறிட்டான் அவன்…
“ஆனா நீ, சுயமரியாதை, கௌரவம், தன்மானம் அது இதுன்னு சொல்லி சொல்லியே காலத்தை கழிச்ச… இதே நிலைமை நீடிச்சா நீ எப்படி இந்த இன்டஸ்ட்ரீக்குள்ள இருக்க முடியும்னு யோசிச்சி நான் கஷ்டப்பட்டுட்டிருந்தப்போ தான் கரண் எனக்கு அறிமுகம் ஆனான்… அவன் மூலமாவும், அவன் அப்பாவோட இன்ஃப்ளூயன்ஸ் மூலமாவும் உனக்கு வாய்ப்பு கேட்டு நான் கெஞ்சி கூத்தாடிட்டிருக்கேன்… அது தெரியுமா உனக்கு?...”
அவள் தன் மனதிலிருந்த உண்மையைக்கூற, அவனுக்கோ இதயமெங்கும் வலி உண்டாகி பரவி எழுந்தது…
“சும்மா எப்பப் பாரு… என் கதைக்கு என் எண்ணத்துக்கு வர்ண சாயம் மத்தவங்க பூச எனக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டிரு…”
“அப்போ மத்தவங்க சொல்லுறபடியே செய்ய சொல்லுறீயா?... எனக்குன்னு ஒரு எண்ணம் இருக்கக்கூடாதா?... ஒரு இயக்குநரா என்னோட எண்ணத்தை நான் செயல்படுத்த விடாம அவங்க எண்ணங்களை எனக்குள்ள திணிச்சு ஒரு படத்தை எடுன்னு சொல்லுறதை ஏத்துக்க சொல்லுறீயா அனிதா?...”
“ஏத்துக்கிட்டு தான் விக்கி ஆகணும்… உனக்குன்னு ஒரு அடையாளம் வேணும்னா நீ இதை ஏத்துக்கத்தான் வேணும்… ஒரு படம், ஒரே ஒரு படம் நீ அப்படி எடுத்துட்டேன்னா, அப்புறம் நீ ஆசைப்படுற மாதிரி எப்படி வேணும்னாலும் படம் எடுத்துக்கலாம்…”
அனிதாவின் வார்த்தைகள் அவனைக் கொன்றிட,
“நீ எப்போ இருந்து இப்படி மாறின அனிதா?... உன் எண்ணத்தையே படமாக்கு… எந்த காரணத்தைக்கொண்டும் அதிலிருந்து பின்வாங்கிடாதன்னு எனக்கு உறுதுணையா இருந்த என் ஃப்ரெண்ட் நீ தானா அனிதா?...”
அவனின் இதழ்களில் விரக்தி இழையோட, அவள் பதில் கூறினாள்…
“அந்த அனிதா தான் இப்பவும் உன் முன்னாடி நிக்குறேன்… என்ன ஒன்னு சில மாற்றங்கள்… ஆனா அந்த மாற்றம் இல்லாம, நானும் உன்னை மாதிரி இருந்திருந்தா இந்த இண்டஸ்ட்ரீக்குள்ள இப்ப நான் அடி எடுத்தே வச்சிருக்க முடியாது… அத முத புரிஞ்சிகிட்டு பிழைக்கிற வழியைப் பாரு…”
வலியோடு அவன் புன்னகைத்திட, அவள் முறைத்திட்டாள்…
“நீ இந்த அளவுக்கு பேசுவேன்னோ, உன் நினைப்பு இருக்குமோன்னோ நான் ஒரு செகண்ட் கூட நினைச்சுப்பார்க்கலை அனிதா… இப்போ சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ… உன் ஆதரவோ, உன் ஃப்ரெண்டோட ஆதரவோ, அது எதுவாகவே இருந்தாலும் சரி, அதை பிடிச்சிட்டு நான் மேல வரவும் வேண்டாம்… அப்படி ஒரு வாழ்க்கை நான் வாழவும் வேண்டாம்…”
“பிழைப்புக்கு வலியில்லாம இருக்குறப்பவே உனக்கு இவ்வளவு திமிர் இருக்குதே… இந்த திமிரால மட்டும் தான் நீ இன்னமும் இப்படியே இருக்குற…”
“ஹ்ம்ம்… அது ஒன்னு மட்டுமாவது கடைசிவரை மாறாம எங்கூடவே இருக்குதே… அதுவே போதும்…”
“என்னை குத்திக்காட்டுறீயா விக்கி?...”