தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 14 - மீரா ராம்
கலங்கியிருந்த அவளது விழிகளைப் பார்த்திட்டவனின் உள்ளம் நொடியில் இன்னலுக்கு உள்ளாகிட,
“என்னாச்சு?...”
மீண்டும் பதட்டமும் அக்கறையுமாய் அவன் குரல் ஒலித்திட,
“அம்மா….” என்றாள் அவள்…
அவள் சொன்ன அந்த ஒற்றை வார்த்தையின் அர்த்தத்தினை அவன் உள்வாங்கிட சில நொடிகள் தேவைப்பட்டது…
“அம்மாவா?...”
அவன் வார்த்தைகளிலேயே அவன் தடுமாறுவது தெரிந்தது அவளுக்கு…
அதே பரிதவிப்புடன் அவளும் அவனைப் பார்த்திட்ட நேரத்தில், சட்டென அவளது கரத்தினில் இருந்த தீபனின் செல்போனை கேட்டு அவன் கைநீட்டிட, அவளோ பதில் பேசவில்லை…
நிமிர்ந்து பார்த்திட்டவளை, கண் மூடி அவன் இமைத்து தா என்று விழிகளால் கேட்டிட, அதற்கு மேலும் மறுக்காது தீபனின் செல்போனை அவனிடம் கொடுத்தாள் அவள்…
அதில் அவளுக்கு வந்த நம்பரை எடுத்துப் பார்க்க முயன்றவன், தன் கண்களையே நம்ப முடியாதவனாய் திரையில் தன் விழிகளை பதித்திருந்தான் அதிர்ச்சியின் உச்சத்தில்…
அந்நேரம் “சாரி சார்… ரொம்ப நேரம் ஆயிடுச்சா?...” என கேட்டபடி விக்கி வந்து அமர, கௌஷிக்கின் கரங்களில் இருந்த தீபனின் செல்போன் தானாகவே அவன் பிடியிலிருந்து நழுவி மேசையில் விழுந்திட, சட்டென சாருவும் அதனை எடுத்துக்கொள்ள,
விக்கி கௌஷிக்கின் முகத்தைப் பார்த்து புருவங்களை சுருக்கினான்…
“சாருக்கா… என்னாச்சு?...”
அவன் சாருவிடம் வினவிட, அவள் பதில் உரைத்தாள் இல்லை…
கௌஷிக்கின் முகத்தில் யாதொரு உணர்ச்சியும் இல்லாதிருக்க, சாருவின் முகத்திலோ கவலை அப்பிக்கிடந்தது மிக…
நடந்த்து யாதென்று அவனால் புரிந்துகொள்ள கூட இயலாத நிலையில், தீபனும் அங்கே வர, சட்டென தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டான் கௌஷிக்…
“என்ன சார்… என்னாச்சு?...”
தீபன் இயல்பாக கௌஷிக்கிடம் கேட்டிட,
அவன் பதில் சொல்வதற்கு முன்பாகவே, அவனது செல்போன் சிணுங்கிட, திரையில் அம்மா…. என்று மின்னிட,
“அம்மா….” என கூறியவன், “அவசரமா நான் போகணும்… சாரி….” என்றவன் அதற்குமேலும் அங்கே நில்லாது விருவிருவென்று வாசலை நோக்கி சென்றிட, அவன் உருவம் மறையும் வரை அவன் செல்லும் திசையினையே பார்த்திருந்தாள் சாரு வலியுடன்…
“என்ன தீபா… கௌஷிக் சாரையே பார்த்துட்டிருக்குற?...”
விக்கி தீபனைப் பார்த்துக்கொண்டே கூற, அப்பொழுது தான் தன்னவன் செல்லும் திசையில் வைத்திருந்த பார்வையினை விலக்கினாள் சாரு விரைந்து…
“ஒன்னுமில்லடா… சாரோட அம்மா போன் பண்ணியிருக்காங்க… அவசரமா வேற போறாரு… அதான் என்ன விஷயம்னு யோசிக்கிறேன்…”
தீபன் விக்கிக்கு பதில் கூறினாலும் அவன் பார்வை இப்போது ஏனோ சாருவின் மீதே இருந்திட்டது… சாரு அமைதியாக தலைகவிழ்ந்து கொள்ள, “சரிடா எல்லாரும் கிளம்பலாம்… வா…”
விக்கி அழைத்திட, மூவருமே அவ்விடத்தை விட்டு அகன்றனர்…
வீடு வந்து சேரும் வரை தீபனும் சாருவும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை…
“என்ன பாப்பா… சீக்கிரம் வந்துட்டீங்க?... சாப்பிட்டீங்களா இல்லையா?...”
மஞ்சுளா விசாரித்திட, பதிலுக்கு ஒரு புன்னகையை பரிசளித்தவள், நேரே தனதறைக்குள் நுழைய போக, தீபன் அவள் நடவடிக்கையினை கவனித்தவனாய், தனது செல்போனைத் தேடிட, அவன் எண்ணத்தை புரிந்தவளாய், அவனருகே வந்து அவனது செல்போனை அவள் நீட்டிட,
பதிலுக்கு அவளைப் பார்த்தவனை பார்த்து லேசாக புன்னகைத்தவள், “டயர்டா இருக்குடா… தூங்குறேன்… சரியா?...” என அவனை மேற்கொண்டு பேசவோ, எதுவும் கேட்கவோ விடாது அறைக்குள் நுழைந்து கொள்ள,
அதுவரை அடக்கி வைத்திருந்த அவளது கண்ணீர் விழி வழி வழிந்து அவளது கன்னம் தொட, விம்மி விம்மி தன் மனதின் பாரத்தினை கண்ணீராக கரைத்திட,
அதே நேரம், தனதறையில் இருகைகளாலும் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் கௌஷிக்…
அவனது கண்கள் எங்கும் ரௌத்திரம் மின்னிட, சாருவின் அம்மா என்ற வார்த்தை அவனை துளைத்து எடுத்திட அவன் நிலைகொள்ளாமல் துடித்திட்டான்…
அத்துடிப்பு அவனை ஒருநிலையில் இல்லாமல் செய்திட, டேபிளின் மீது இருந்திட்ட அனைத்து பொருட்களையும் தட்டி விசிறியடித்தான் அவன் அக்கணமே…
தட் தட்… என்ற சத்தத்துடன் டேபிளின் மீதிருந்த கண்ணாடி பொருட்கள், பேப்பர்கள், சில புத்தகங்கள் என அனைத்தும் கீழே சிதறிட, அவனது மனமும் அது போலவே சிதறிக்கிடந்தது…