தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 08 - மது
AT THE END OF INFINITY

இறுதி ஆண்டு தேர்வு முடிந்ததும் முடிவுகள் வரும் வரை மாணவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
எப்போதும் விடுமுறையில் வீட்டிற்கு வரும் போதெல்லாம் ஹர்ஷாவிற்கு ராஜ உபசாரம் நடக்கும். ராஜகுமாரனுக்கு ராஜ உபசாரம் நடப்பதில் வியப்பேதும் இல்லை தான்.
விடுமுறையில் வீட்டிற்கு வரும் போது ஹர்ஷா எப்போதும் வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பான்.
கோடை காலம் என்றால் குதிரை சவாரி, மலை ஏற்றம் என்று மொவுன்ட் அபு சென்று விடுவான். குளிர்காலம் என்றால் ஜெய்சல்மர் பாலைவன திருவிழா செல்வது என்று மாளிகையில் தங்கும் நாட்கள் குறைவு தான்.
எங்கு சென்றாலும் அன்னையையும் உடன் அழைத்துச் சென்று விடுவான். அன்னையோடு தனிமையில் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வான்.
“வருடத்திற்கு ஓரிரு முறை தான் வருகிறாய். ஆனால் அரண்மனையில் நீ தங்குவதே இல்லை” என்று ராஜமாதா பத்மாவதி தேவி குறைப்பட்டுக் கொண்டாலும் செல்லப் பேரனின் ஆசைக்குத் தடை சொல்ல மாட்டார்.
“நீங்களும் என்னோடு வாங்க தாதிஸா” என்று அவரைக் கட்டிக் கொண்டு ஹர்ஷா கூறினான் என்றால் அவருக்கு அதுவே மிகுந்த ஆனந்தம்.
இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் முடிவகள் வர ஒரு மாத காலமெனும் ஆகும் என்பதால் எல்லோரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
ஹர்ஷாவும் தேர்வுகள் முடிந்ததும் ஜெய்ப்பூர் வந்து சேர்ந்தான்.
ஆனால் இம்முறை எங்கும் வெளியில் செல்ல விருப்பம் கொள்ளவில்லை. மாளிகை தோட்டத்திலும் நாகர் கோட்டையிலும் தனிமையிலே இருக்க பிரியப்பட்டான்.
பேரன் மாளிகையிலே தங்குவதில் ராஜமாதா மிகுந்த சந்தோஷம் கொண்ட போதும் சாரதா ஏதோ சரியில்லை என்று ஊகித்தார்.
“ஹரி என்னடா கண்ணா என்ன விஷயம்” ஓர் நாள் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவனிடம் மெல்ல கேட்டார்.
“ஒன்றுமில்லை மா”
“எக்ஸாம் எல்லாம் நல்லா செய்திருக்க தானே” ஒரு வேளை அதனால் குழப்பமோ என்று அதையும் கேட்டார்.
அன்னை எக்ஸாம் பற்றிக் கேட்டதும் ஹரிணி தனக்கு தேர்வில் உதவி புரிந்ததை எல்லாம் சொன்னான்.
ஆனாலும் மகன் மனதிற்குள் தன்னிடம் சொல்லாத விஷயங்கள் இருக்கிறன என்று சாரதா உணர்ந்திருந்தார். இருப்பினும் அவனிடம் தோண்டித் துருவி எதையும் கேட்கவில்லை.
இதோ இறுதித் தேர்வும் முடிந்து விட்ட நிலையில் பயிற்சி காலம் முடிந்ததும் டாக்டர் ஆகி விடுவான்.
தானும் தன் கணவரும் கண்ட கனவினை நனவாக்கி விட்டான் மகன்.
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதை சீரான முறையில் அலசி அதை தீர்க்கும் வழிகளை ஆலோசித்து அதற்கேற்ப செயாலற்றும் பக்குவம் மகனுக்கு வந்துவிட்டதை அவர் அறிந்திருந்தார்.
“ஹரி, இப்போ நீ டாக்டர் ஆகிட்ட. ஹவுஸ் சர்ஜன் டிரைனிங்கில் அதை நீ முழுமையா உணரும் வாய்ப்பு கிட்டும். இந்த உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை, மரணம் தவிர. மற்ற எல்லாவற்றிக்கும் ஏதேனும் தீர்வு நிச்சயம் உண்டு. ஆனால் ஓர் உயிர் பிரிந்து சென்றால் திரும்பப் பெற முடியாது. அப்படிப்பட்ட பணியில் நீ ஈடுபட்டிருக்கும் போது எப்போதும் சொந்த பிரச்சனைகளை ஒதுக்கி வைத்து விட்டு வெறும் டாக்டர் ஹர்ஷவர்தனாக மட்டும் இருக்கணும்” பொதுவாக மகனுக்கு ஆலோசனை வழங்கினார்.
அங்கிருந்த கல்லினால் ஆனா பெஞ்ச்சில் இருவரும் அமர்ந்து கொண்டிருந்தனர். அன்னை கூறியதை பொறுமையாக கேட்டவன் கண்டிப்பாக அதன் படி நடப்பதாக கூறினான். பின் அவர் மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டான்.
அவனையும் அறியமால் அவன் விழிகள் லேசாக கசிந்ததை பார்க்காமலேயே உணர்ந்திருந்தார். மெல்ல அவனின் தலையைக் கோதினார்.
உண்மையில் ஹர்ஷாவின் மனம் பாரமாக இருந்தது. அன்று அந்த மழைநாளில் கொட்டும் மழையாய் தன் பாரம் முழுவதையும் அவன் தோள்களில் இறக்கி வைத்து விட்டு சென்று விட்டவளை சுற்றி சுற்றியே அவன் எண்ணங்கள் சுழன்றன.
இது வரை அவன் அன்னையைத் தவிர யாருக்காகவும் கவலை கொண்டதில்லை. ஏன் தன்னைப் பற்றிக் கூட எப்போதும் அவன் கவலை கொள்ள மாட்டான்.
ஆனால் ஹரிணியை எண்ணி அவன் மனம் மிகுந்த கவலை கொண்டது.
“கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக தன் மனதில் இப்படி ஓர் ரகசியத்தைப் பூட்டி வைத்துக் கொண்டு இருந்திருக்கிறாள். வெளிப்பார்வைக்கு திமிர் பிடித்தவளாக தனிமை விரும்பியாக எப்போதும் இருப்பவள் உண்மையில் திருவிழா கூட்டத்தில் காணாமல் போன சிறுமியாய் பயத்தோடும் பதட்டத்தோடும் பற்றிக் கொள்ள ஓர் கையை - நம்பிக்கையை எதிர்நோக்கி இருப்பவளாய்...” அவன் மனதிலே அவளைப் பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.