“மழை வேற வரும் போல. கியூ வேற நீளமா இருக்கு” புலம்பியபடியே கட்டணம் செலுத்தி ஸ்பெஷல் வழியில் செல்லலாமா என்று யோசித்து ஹரிணி எப்படியும் மறுப்பு சொல்வாள் என்று தெரிந்து அதையும் கைவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருத்தவள் கண்களில் முரளி தென்பட்டான்.
“ஹரிணி அங்க பாரு முரளி. கைனகாலஜில அவன் தான் யுனிவர்சிடி பர்ஸ்ட் வாங்கியிருக்கான்” என்று ரஞ்சனி சொல்ல ஹரிணி ரஞ்சனி கை பற்றி இழுத்துக் கொண்டு முரளியை நோக்கி சென்றாள்.
“ஹாய் முரளி. கங்கிராட்ஸ்” மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு ஹரிணி கூறவும் முரளியும் நன்றி கூறினான்.
ஆனால் அவன் பார்வை மொத்தமும் ரஞ்சனியின் புறமே.
கல்லூரி விழாக்கள் என்று அவளை அடிக்கடி புடவையில் பார்த்திருந்தான் தான் என்றாலும் இன்று அவள் மிக அழகாக அவன் கண்களுக்குத் தெரிந்தாள்.
“கங்கிராட்ஸ் உங்க ரெண்டு பேருக்கும்” என்று அவனும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தான்.
முரளியின் பார்வை ரஞ்சனி மேல் ஆசையாக படிவதை கவனத்தில் கொண்டாள் ஹரிணி. அதே சமயம் ரஞ்சனியின் அலட்சியமும் அவள் கண்களில் பட்டது.
“என்ன ட்ரெடிஷனல் வேஷ்டி சட்டை எல்லாம். தரிசனம் ஆச்சா இனி தானா” ஹரிணி தான் முரளியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
ஹரிணிக்கு முரளி மேல் மிகுந்த மதிப்பு எப்போதும் உண்டு. தனது டேபிள் மேட் ரஞ்சனியின் அறைத்தோழி என்ற வகையில் ஹரிணியிடம் அவ்வப்போது நன்றாக பேசி பழக்கம் என்பதால் முரளியும் சகஜமாக உரையாடினான்.
“இப்போ தான் வந்தோம். பிரின்ஸ் கூட வந்தேன். அவன் கார் பார்க் செய்துட்டு இருக்கான்” என்று முரளி கூற ரஞ்சனி ஆர்வமானாள்.
“பிரின்ஸ் கிட்ட கார் எல்லாம் இருக்கா. நான் பைக் தான் பார்த்திருக்கேன்” அவள் பேசியதே முரளிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“இந்த காஸ்டியூம்ல பைக் கொஞ்சம் கஷ்டம் ஆச்சே” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தான் ஹர்ஷவர்தன்.
அடர் பச்சை குர்தா, பட்டு வேஷ்டியில் கம்பீரமாக இருந்தவன் அங்கிருந்த பலரின் கவனத்தைத் தன் பால் ஈர்த்தான்.
“வாவ் பிரின்ஸ். யு லுக் சோ ஹான்சம். கங்கிராட்ஸ்” ரஞ்சனி தான் அவன் வந்ததை முதலில் பார்த்தாள்.
அங்கு நின்று கொண்டிருந்தவள் ஹரிணி என்று தூரத்தில் இருந்தே கண்டு கொண்டான் ஹர்ஷா.
முதல் முறையாக அவள் பூ வைத்து பார்க்கிறான். அதே பச்சை வண்ண புடவை. கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் ராஜவர்தன் சாரதாவிற்கு பூ வாங்கி சூட்டி விடுவார். ஹர்ஷாவின் நினைவுப் பக்கங்களில் கல்வெட்டாய் அக்காட்சிகள் பதிந்திருந்தன.
ஹரிணியைப் பார்த்ததும் அந்நினைவுகள் மடை திறந்த வெள்ளமாய்.
சரியாக ரஞ்சனியின் உற்சாகக் கூவலில் ஹரிணி திரும்பிப் பார்க்க அவளுக்கு மிக அருகாமையில் ஹர்ஷா.
திடீரென கண் முன் நின்றவனைப் பார்த்ததும் திகைத்தவள் ஒரு நொடி தான். உடனேயே தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் அவனை நோக்கி தனது கரம் நீட்டினாள்.
அவனிடம் இருந்து தூரமாய் விலக வேண்டும் என்று அவள் கொண்ட உறுதியைக் கரைத்ததோ அவள் மறதி. அவள் கண்களில் கரையில்லா மகிழ்ச்சி மட்டுமே.
“கங்கிராட்ஸ் ஹரி” என்று சட்டென உதடுகள் அசைந்து விட ஹர்ஷா என்று உரத்த குரலில் திருத்திக் கொண்டதை முதுகு பக்கம் இருந்த ரஞ்சனியும் முரளியும் கவனிக்க வாய்ப்பில்லை தான்.
ஆனால் அவன் முகத்தையே பார்த்திருந்தவனின் கூர்மையான பார்வையில் இருந்து சிறிதும் தப்பிக்கவில்லை - அவன் தோற்றத்தின் மேல் மயக்கம் துளியும் இன்றி , ராஜகுமாரன் என்ற அவனது பட்டத்தின் மேல் மோகம் அணுவளவும் இன்றி அவனை அவனாக ஹரியாக பார்த்து மகிழ்ந்த அவள் நேர்ப்பார்வை தப்பவேயில்லை.
கடந்த கால வசந்தங்களின் அடையாலமாக அவன் விழிகளில் துளிர் விட்ட நீர் திவலைகள் நிகழ்கால நொடிகளின் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில் புன்னகையில் குலுங்க அவள் நீட்டியக் கரத்தினைப் பற்றியவன் சற்றே அவள் புறம் சாய்ந்து அவள் செவிகளில் மட்டும் எதிரொலிக்கும் வண்ணம் “தாங்க்ஸ் ஹனி” என்று கூற இணைந்த கரங்களில் வானம் சிந்திய பூத்தூறலா!!! அவரிருவரின் விழிநீர் முத்துக்களா!!!
தீபாராதனை ஒளிர, மணியோசை காற்றில் தவழ்ந்து ஒலிக்க, விண்ணும் மண்ணும் மழையில் சங்கமிக்க முடிவில்லா ஓர் முடிவிலி பந்தம் என்று வாழ்த்தியதோ பிரபஞ்சத்தின் பிரதிநிதியாய் பஞ்சபூதம்!!!
முடிவிலியை நோக்கி ...
{kunena_discuss:1137}