“கங்கா.. இந்த கல்யாணம் எதுக்காக நடந்ததுன்னு உனக்கே தெரியும்.. மாப்பிள்ளை தம்பிக்கு உன்னோட தேவை எல்லாவிதத்திலேயும் வேணும் புரிஞ்சுதா.. போதை பழக்கத்துக்கு ஆளாகியிருக்கும் அந்த பையனுக்கு இப்போ நீ மட்டும் தான் மருந்தா இருக்கனும்.. சாதாரண கல்யாணம் மாதிரி புருஷன் நெருங்கி வரட்டும்னு சும்மா இருக்கக் கூடாது.. நீயா தான் அந்த தம்பிக்கு இப்போ நீ வேணும்னு புரிய வைக்கனும்.. இதுக்கு மேல தெளிவா சொல்ல முடியாது.. புரிஞ்சுதுல்ல?” என்று விளக்கமாக அனைத்தையும் சொல்லி, அவள் பதிலை அவர் கேட்ட போது, மனதில் சூழ்ந்திருந்த பயம் அதிகமானாலும் தலையை மட்டும் ஆட்டி தன் சம்மதத்தை தெரிவித்தாள்.
“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்..” என்றவர், கையில் ஒரு மாத்திரை அட்டையை கொடுத்தார்.
“இது கருத்தடை மாத்திரை.. இதை தொடர்ந்து நீ சாப்பிடனும்..”
“எதுக்கு அத்தை..?”
“என்ன படிச்ச பொண்ணா இருக்க, இது கூட தெரியலையா? அந்த தம்பி சரியாகற வரைக்கும், உனக்கு குழந்தை உண்டாகமா இருக்கறது தானே நல்லது.. அதுக்காக தான் இந்த மாத்திரை..” என்று மேனேஜர் சொன்னதையெல்லாம் கங்காவிற்கு விளக்கமாக சொன்னவர், “இங்கப்பாரு கங்கா.. ஆரம்பத்துல கஷ்டமா தான் இருக்கும், அதுக்கு பயந்துக்கிட்டு நீ ஒதுங்கி போனா, அப்புறம் உன்னோட தங்கை ஆபரேஷன்க்கு தான் லேட்டாகும்.. பார்த்து நடந்துக்கோ!” என்று அவளின் நிலையை ஒருமுறை ஞாபகப்படுத்திவிட்டு, அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்வதாக சொல்லி கனகா அவளிடம் விடைப்பெற்று சென்றார்.
வாணி மீண்டும் ஒருமுறை கங்காவின் கையை அழுத்திப் பிடித்து அவளுக்கு ஆறுதல் கூறி, கையில் பால்சொம்பை கொடுத்து துஷ்யந்த் அறைக்கு அனுப்பி வைத்தார். கங்கா உள்ளே நுழைந்த போது துஷ்யந்த் எங்கேயோ வெறித்து பார்த்தப்படி அமர்ந்திருந்தான். கதவை தாளிட்டுவிட்டு அவள் உள்ளே வந்து பால்சொம்பை வைத்தபோது, அரவம் கேட்டு எழுந்து உட்கார்ந்தவன், கங்கா வருவதை பார்த்து வேகமாக எழுந்து வந்து,
“எங்க மருந்து?” என்றுக் கேட்டான். அவள் ஒன்றும் புரியாமல் திருதிருவென முழிக்க,
“எங்க மருந்து? உன்கிட்ட கொடுத்து விட்றேன்னு அவரு சொன்னாரே! ஐயோ எனக்கு ஒருமாதிரி இருக்குது ஒழுங்கா மருந்தை கொடு..” என்றதில் அவள் உடல் அதிர்ந்தது.
“எங்கன்னு கேக்கறேன்ல்ல.. உன்கிட்ட கொடுக்கலையா? மருந்து வாங்காம எதுக்கு உள்ள வந்த? ஏன் வந்த? வெளிய போ!” அவன் கோபமாக கத்த, அவள் உடலோ நடுக்கம் கண்டது. அவன் போதை மருந்து கேட்கிறான் என்று புரிந்துக் கொண்டாள்.
“எனக்கு இப்பவே மருந்து வந்தாகணும், இல்லன்னா என்னால முடியாது.. போ மருந்து எடுத்துட்டு வா.. போ! போ!” முரட்டுத்தனமாக அவன் தள்ளிவிட, அதை எதிர்பார்க்காதவள் கீழே சென்று விழுந்தாள். அவனின் நடவடிக்கை பார்த்து கண்களில் தானாக கண்ணீர் வர, அந்த நேரம் பார்த்து யமுனாவின் முகமும், கனகா சொன்னதும் அவளுக்கு ஞாபகம் வந்தது. அவள் தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்பது புரிந்ததும் உடனே எழுந்தாள்.
“இங்கப்பாருங்க.. உங்களுக்கு மருந்து தானே, அது எடுத்துட்டு வரத்தான் உங்க மாமா போயிருக்காரு.. இப்படி வந்து உக்காருங்க..” அவனை இழுக்க முடியாமல் இழுத்து வந்து கட்டிலில் அமரவைத்தாள். அவனோ அவள் பிடியிலிருந்து திமிறினான்.
“நீங்க இப்படி கத்தினா உங்களுக்கு மருந்து தரமாட்டாங்க.. நீங்க அமைதியா உக்கார்ந்தா தான் உங்களுக்கு மருந்து கிடைக்கும்” அவள் சொல்லவும்,
“இல்லை.. தரமாட்டாங்க, என்னை ஏமாத்தறாங்க, எனக்கு எதுவும் வேண்டாம், யாரும் வேண்டாம் மருந்து தான் வேண்டும்.. அது இல்லாம என்னால இருக்க முடியாது.. என்னால வாழ முடியாது.. நான் செத்துடுவேன்..” என்று சொல்லி அந்த அறையை சுற்றி அவன் பார்வை செல்ல, அவன் சாக வழி தேடுகிறான் என்பதை உணர்ந்தவள், அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
திமிறியவனை அணைப்பிலிருந்து விடுவிக்காமல், “இங்கப் பாருங்க, உங்களுக்கு மருந்து கண்டிப்பா கொடுப்பாங்க, உங்க மாமா அதை வாங்க தான் போயிருக்கார். நீங்க இப்படில்லாம் செஞ்சா தான் பயந்து மருந்து கொடுக்க மாட்டாங்க” அவனை சமாதானப்படுத்த முயற்சித்தாள். ஆனால் அதுக்கு மேல் அவனிடம் எப்படி நடந்துக் கொள்ள என்று அவளுக்கு தெரியவில்லை. எவ்வளவு நேரம் அவனை இப்படி அணைப்புக்குள் வைத்திருப்பது என்றும் புரியவில்லை. அவனுக்கு போதை பழக்கம் உண்டு என்று தெரியும், அதை மறக்கடிக்க அவள் வேண்டுமென்றும் தெரியும், ஆனால் இப்படி இவ்வளவு முரட்டுத்தனம் அவனிடம் இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனை எப்படி சமாளிக்க? அடுத்து என்ன? அவள் புரியாமல் குழம்ப, அவனுக்கோ அந்த அணைப்பு ஒன்றே போதும் என்ற நிலை தானாகவே உருவானது.
பஞ்சும் நெருப்பும் அருகில் இருந்தால் பற்றிக் கொள்ளும் என்ற பழமொழி தான் இங்கே அப்போது உதவியது. 20 வயதான பருவ மங்கையின் வாசம், அவளது அணைப்பு அவனுக்கு வேறு உணர்வுகளை கொண்டு வந்திருந்தது. இதுவரை ஒரு பெண்ணின் அருகாமையை அவன் அறிந்ததில்லை. நடிப்பதற்காக வந்ததால் சாருவும் அவனை விட்டு விலகியிருந்து தன் காரியத்தை சாதித்தாள். இப்படி ஒரு சூழ்நிலையை அவன் இதுவரை சந்தித்ததில்லை. நல்ல நிலமையில் இருந்த போதும் சரி, இப்படி ஒரு நிலையிலும் ஒரு பெண்ணின் அருகாமை வேண்டுமென்று அவன் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.
ஆனால் ஒரு பெண்ணே வந்து அவனை அணைத்திருக்க, சாதாரண மனிதர்களே இந்த சூழ்நிலையில் தங்கள் கட்டுப்பாட்டை இழக்க வாய்ப்பிருக்கும் போது, அவனுக்கு இருந்த பிரச்சனைகளுக்கும் அதில் இருந்து தப்பித்து கொள்வதற்கும் இப்போது அவள் தேவைப்பட்டாள். அண்ணாமலையும் மேனேஜரும் எதிர்பார்த்தது நடந்தது. இதுவரை அவள் இறுக்கி அணைத்திருக்க, இப்போது அவன் அவளை அதைவிட இறுக்கி அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பே அவன் மனநிலையை இப்போது மாற்றிவிட்டது என்று அவள் புரிந்துக் கொண்ட நொடியிலேயே அவளை அவன் முரட்டுத்தனமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தான். இதுவரை அவன் மனதிற்குள் இருந்த கோபம், வெறுமை, பயம் அனைத்தின் வெளிப்பாட்டையும் பெண்ணவள் மீது ஒட்டு மொத்தமாக காட்டினான்.
அன்றிலிருந்து அவனுக்கு மருந்து தேவைப்படும் போதெல்லாம் அவள் தான் மருந்தாக மாறினாள். அவன் முரட்டுத்தனத்தில் அவள் துவண்டு போகும் போதெல்லாம் வாணி தான் அவளுக்கு சத்தான உணவுகள் கொடுத்து அவளை கவனித்துக் கொண்டார். கங்காவின் அருகாமையில் அவன் மருந்துக் கேட்பதை மறக்க ஆரம்பித்தான்.. எப்போதும் கங்கா மட்டுமே தேவை என்ற நிலைக்கு வந்திருந்தான்.
தாங்கள் திட்டமிட்டபடி அனைத்தும் நடக்கவும் அண்ணாமலை தைரியமாக கிளம்ப முடிவெடுத்தார். இங்கு கங்கா, வாணி, மருத்துவர் அனைவரும் இருப்பதால், அங்கே தனியாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் செல்வாவிற்கு தன் உதவி தேவை என்று சென்னை செல்ல தயாரானார். போகும்போது திட்டமிட்டதில் எந்த இடையூறும் வராமல் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று மேனேஜரிடம் எச்சரித்துவிட்டு சென்றார்.