தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 29 - ஜெய்
சாரங்கன் இன்று எப்படியேனும் மயூரியை தனியே சந்தித்து தன் மனதிலுள்ளதை எந்த முறையில் வெளிப்படுத்த என்று திரைப்படங்களில் வந்த காதலை சொல்லும் முறைகள் அத்தனையையும் மனதில் ஓட்டியபடியே ஆர்வமாக மயூரியின் வீட்டினுள் நுழைய அங்கு ஏற்கனவே ஒரு பத்து பதினைந்து ஆட்கள் அமர்ந்து இருந்தனர்....
சாரங்கனுக்கு புஸ்சென்று ஆனது... ஐயோ இது என்ன இந்தக் கூட்டத்துக்கு நடுவுல எப்படி நம்ம மயிலைத் தனியே தள்ளிட்டு போக என்று பயந்தபடியே சுற்றிலும் பார்க்க வயதான ஆண்கள், பெண்கள் இளைஞர்கள் என்று சம விகிதத்தில் இருந்தது அந்த இடம்....
என்னாங்கடா இது நமக்குத் தெரியாமையே ஏதானும் அமெரிக்க மாப்பிள்ளையை மயிலுக்கு பிக்ஸ் பண்ணிட்டாங்களா.... அவனை வேற கிளைமாக்ஸ்ல மணமேடையை விட்டு இறக்கி நாம performance கொடுக்க வேண்டி வருமோ என்று கற்பனை குதிரையை தட்டி விட்டான் சாரங்கன்.... அதற்கு ஏற்றாற்போல் இரண்டு மூன்று வாலிபர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள்... இதுல எவன் நமக்கு வில்லானா வரப்போறான் என்று பார்க்க....
“வாங்க வக்கீல் சார்.....”, என்று வரவேற்ற மயூரியின் தந்தை சாரங்கனின் ஓவர் கற்பனையை தடுத்தார்...
“ஹலோ அங்கிள்.... எப்படி இருக்கீங்க... sorry ஏதோ முக்கியமான விஷயம் நடந்துட்டு இருக்கு போல இருக்கு... நடுல வந்து கெடுத்துட்டேனா....”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை தம்பி... இவங்கள்லாம் எங்க சொந்தக்காரங்க... இந்த கேஸ் விஷயம் கேள்விப்பட்டு வந்திருக்காங்க....”
“ஓ ரொம்ப சந்தோஷம் உங்க எல்லாரையும் பார்த்ததுல.... இவங்க பாவம் யார் சப்போர்ட்டும் இல்லாம இத்தனை நாள் கஷ்டப்பட்டாங்க... நீங்க இத்தனை பேர் கூட இருக்கீங்க அப்படிங்கறதே இவங்களுக்கு இனிமே பெரிய பலமா இருக்கும்.....”
“அட என்ன தம்பி நீங்க... நாங்களே ராமசாமிக்கிட்ட இந்த வழக்கை இத்தோட விட்டுடு... அவனுங்க மேல் முறையீட்டுக்கு போனாங்கன்னா நீ அதை எதிர்த்து போக வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு இருக்கோம்....”
“என்னங்க இப்படி அநியாயமா சொல்லி கொடுக்கறீங்க... அந்தாள் இந்த வீட்டைக் கேட்டு முதல்ல போன்ல அப்பறம் ஆளுங்களை அனுப்பி அப்படின்னு ஏகப்பட்ட தரம் மிரட்டி இருக்கான்.... இந்தக் கேஸ் மட்டும் போடாட்டி இந்நேரம் ஏதோ ஒரு விதத்துல இந்த வீடு அவன் கைக்கு போய் இருக்கும்... அதுதான் உங்களுக்கு வேணுமா....”
“ஏன் தம்பி மனுஷனுக்கு வீடு முக்கியமா... இல்லை மானம், மரியாதை முக்கியமா.... இதோ நிக்குதே இந்த மயூரி பொண்ணு... ஏதோ நல்ல வேளை அன்னைக்கு சரியான நேரத்துல நீங்களும் அந்த வக்கீலம்மாவும் வந்தீங்க... அதனால தப்பிச்சுது... இல்லைனா அன்னிக்கே இந்த பொண்ணை நாசம் பண்ணிட்டு போய் இருப்பாங்களே அந்த ஆளுங்க...”
“இந்த மாதிரி நாம பயப்படணும் அப்படின்னுதான் அவங்க எதிர்பார்க்கிறாங்க பெரியவரே... அவனுங்க பண்ணின தப்பை நாம ஆதாரத்தோட நிரூபிச்சு இருக்கோம்... அதுவும் இல்லாம இந்த வீட்டுல உள்ளவங்களுக்கு எதாச்சும் ஆனா அதுக்கு அவங்கதான் பொறுப்புன்னு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கோம்... அதனால எதுக்கும் பயப்படாதீங்க...”
“தம்பி நீங்க சொல்றது எல்லாம் சரிதான்... இந்தப் பாதுகாப்பு எல்லாம் எத்தனை நாளைக்கு சொல்லுங்க... இதோ இப்போ இந்த ஒரு ரெண்டு வாரமா இந்த வழக்கைப் பத்தி பேசிட்டு இருக்காங்க....”
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே நடுவில் புகுந்த மற்றொரு நபர், “இங்க பாருங்க தம்பி இந்த வழக்கு, போலீஸ் இதெல்லாம் எங்க குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது.... இந்த ராமசாமி வழக்கமில்லா வழக்கமா இதெல்லாம் செஞ்சுட்டான்... அதோ அங்க பச்சை சட்டை போட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்கானே... அவன் என்னோட அக்கா புள்ளை... அவனைத்தான் மயூரிக்கு கட்டி வைக்கலாம்ன்னு இருக்கோம்...”, அவர் கூறியவுடனேயே யார் அந்த பச்சை சட்டை மாக்கான் என்று சாரங்கன் திரும்பி பார்க்க, அங்கு மயூரியை சைட் அடித்த வண்ணம் ஒருவன் அமர்ந்திருந்தான்... மயூரியின் ரியாக்ஷனை பார்க்க சாரங்கன் திரும்ப அவள் குனிந்த தலை நிமிரவில்லை...
மறுபடி பெரியவரின் பேச்சை கேட்க ஆரம்பித்தான் சாரங்கன்....
“அவனுக்கு இந்த வம்பு, வழக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது தம்பி... அதனாலதான் ராமசாமியை இதெல்லாத்தையும் விட சொல்றோம்...”
“சரிங்க நீங்க சொல்றபடி இவங்க எதிர்த்து வாதாடலைன்னு வச்சுக்கோங்க... அப்போ இந்த வீட்டை அந்தாள் எழுதி வாங்கிடுவானே... அப்பறம் அந்த பச்சை சட்டை போட்டவர் என்ன பண்ணுவாரு.... தன்னோட மாமனார், மாமியாரையும் கூட கூட்டிப் போய் வச்சிப்பாரா....”, சாரங்கன் கேட்க, மயூரி அவனை நிமிர்ந்து பார்த்தாள்...
“அது எப்படி தம்பி.... பொண்ணைக் கொடுத்த வீட்டுல போய் அப்பன் உக்கார முடியும்.... அதெல்லாம் எதாச்சும் வாடகை வீட்டை பார்த்து போகவேண்டியதுதான்....”, அவர் சொல்ல மயூரி அவரை கோவப்பார்வை பார்த்தாள்.... சாரங்கன் இனி இவர்களிடம் பேசிப் பயனில்லை... ஆக்ஷனில் இறங்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தான்.....
சாரங்கன் மயூரியின் தந்தையை பார்த்து, “நீங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதம் கொடுத்துட்டீங்களா.... மயூரிக்கு இதில் விருப்பமா...”