(Reading time: 13 - 25 minutes)

“இல்லை தம்பி இன்னும் எதுவும் முடிவு எடுக்கலை...  இரண்டு மாசம் முன்னாடி இந்த விஷயம் பேசினாங்க..... நாங்க யோசிச்சு சொல்றதா சொல்லி இருந்தோம்... அதுக்குப்பிறகு  இன்னைக்குதான் வந்தாங்க... எங்கக்கிட்ட கேட்டுட்டு இருக்கும்போதுதான் நீங்க வந்தீங்க.... மயூரி ஏற்கனவே இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் அப்படின்னு சொல்லி இருந்துது....”

“இத்தனை நாள் உங்களை நான் சார்ன்னு சொல்லித்தான் கூப்பிட்டுட்டு இருந்தேன்.... இன்னைக்கு உங்களை அங்கிள் அப்படின்னு கூப்பிட்டேன்... அது ஏன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து சொல்றேன்... இப்போ ஒரு பத்து நிமிஷம் உங்க பெண்ணோட பேச அனுமதிகொடுங்க.....”, என்று பேசிய சாரங்கன், அவர் தலையாட்டுவதற்குள் தன் தாயின் பக்கத்தில் நின்றிருந்த மயூரியை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பக்கத்து ரூமின் உள்சென்று கதவை சாற்ற.... அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் அவன் செய்கையைப் பார்த்தார்கள்....

“என்ன பண்றீங்க நீங்க... வெளிய இத்தனை பேர் உட்கார்ந்து இருக்கும்போது எதுக்கு கையைப் பிடிச்சு இழுத்துட்டு வந்தீங்க...”

“எதுக்கு கையைப் பிடிச்சு இழுத்தேனா... யாரு அந்த பச்சை சட்டைக்காரன்... உன்னை அப்படி சைட் அடிச்சுட்டு இருக்கான்... எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அவனை போட்டு மிதிச்சிருப்பேன்....”

“ஏன் பாவம் அவர் என்ன பண்ணினார்... அமைதியாத்தானே உட்க்கார்ந்து இருந்தார்....”, வேண்டுமென்றே மயூரி சாரங்கனை வெறுப்பேற்றினாள்....

“இந்த பார் அந்த குட்டிசுவரைப் பார்த்து அவர், இவர்ன்னே அவ்வளவுதான் சொல்லிட்டேன்....”

“ஏன் ஏன்.... சொல்லக்கூடாது... இப்போதான் எங்க பெரியப்பா சொன்னதை கேட்டீங்க இல்லை... அவரைத்தான் எனக்கு பார்த்திருக்காங்க...”

“இங்க பாரு அவனுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசி என்னை அதிகமா உசுப்பேத்தாத..... அப்பறம் உனக்குத்தான் சேதாரம் அதிகமா போய்டும்.... நான் உன்னை லவ் பண்றேன் அப்படின்னு உனக்குத் தெரியும்தானே....”

“என்னது நீங்க என்னை லவ் பண்றீங்களா... இது எப்போலேர்ந்து.... என்கிட்டே நீங்க எப்போ சொன்னீங்க....”

“உங்கிட்ட சொல்லாததுதான் உன் பிரச்சனையா....”, என்ற கூறிய சாரங்கன் சுற்றும் முற்றும் பார்க்க அங்கு சுவாமி காலெண்டரில் ஒரு சாமந்திப்பூ வைக்கப்பட்டிருந்தது.... அதை கையில் எடுத்த சாரங்கன் ஒரு காலில் முட்டி போட்டு அவளிடம் அந்த சாமந்தியை நீட்டினான்... மயூரி புரியாமல் பார்க்க....

“இங்க பாரு மயிலு உன்னை நான் என்னைக்கு முதல் தடவை ரவி வீட்டுல வச்சு பார்த்தேனோ அப்போவே காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்... நீ என்ன பண்ற இந்த சாமந்திப்பூவை  ரோஜாப்பூவா, மோதிரமா இப்படி எதா வேணா யோசிச்சு வாங்கிட்டு அப்படியே எனக்கு சம்மதம் சொல்லிடு.....”, அவன் நினைத்து வந்த அத்தனை ரொமாண்டிக் ப்ரொபோஸல்களும் நடந்த களேபரத்தில் மறக்க, தன் வாய்க்கு வந்ததை உளறினான்...

“அய்யே இது என்ன இப்படி ஒரு ப்ரோபோஸல்... என்கிட்டே சம்மதமான்னு கேக்கணும்... சம்மதம் சொல்லுன்னு சொல்லக்கூடாது.... அதுவும் இப்படி சாமந்திப்பூவோட...”

“மயிலு ரொம்பப் படுத்தாதடி... உனக்கு என்னைய பிடிக்கும்ன்னு எனக்குத் தெரியும்... ஓகே சொல்லிடும்மா... முட்டி வேற வலிக்குது.... ரொம்ப நேரம் இதே போஸ்ல முடியலை....”,என்று சொல்ல மயூரி சிரித்தபடியே அவனிடமிருந்து அந்த சாமந்தியை வாங்கி தன் தலையில் வைத்துக் கொண்டாள்....

சாரங்கன் மகிழ்ச்சி தாளாமல் அவளை இழுத்து அணைக்கப் போக மிக சரியாக கதவு தட்டப்பட்டது..... மனதிற்குள் தமிழில் இருக்கும் அத்தனை நல்ல வார்த்தைகளையும் உபயோகித்து திட்டியபடியே சென்று கதவைத் திறந்தான்.... வெளியில் நின்றிருந்தது பச்சை சட்டை.... இருந்த கடுப்பில் அவனைக் குத்துவதற்கு சாரங்கன் கையை உயர்த்துவதற்குள் அவனின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள் மயூரி....

“சார் நீங்க பண்றது சரியே இல்லை.... நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணை இப்படி ரூம்க்குள்ள கூட்டிட்டு வந்து பேசிட்டு இருக்கீங்க... ஏய் என்ன நீ, அவன் கையைப் பிடிச்சான்னா தட்டி விடத் தெரியாதா... அப்படியே அவன் பின்னாடி போற....”,பச்சை சட்டை பேச, கடுப்பான சாரங்கன் அவனின் சட்டையைப் பிடித்து...

“இங்கப் பாருங்க பச்சை சட்டைக்காரரே... என்னோட மயிலை மொதல்ல அவ இவன்னு சொல்றதை நிறுத்துங்க... அப்பறம் என் கையை என்ன, என்னைக் கட்டி பிடிச்சுட்டுக்கூட என் மயிலு வருவா... அதையெல்லாம் கேக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.... மரியாதையா உங்க அம்மா, அப்பா, மாமா மற்றும் உங்க உறவினரையெல்லாம் கூட்டிட்டு கிளம்புங்க... நாங்க சம்மந்தம் பேசணும்....”, என்று கூற மயூரியின் தந்தை அவனை அதிர்வுடன் பார்த்தார்....

“sorry அங்கிள்... நான் இப்படி தடாலடியா நடந்துக்கறதுக்கு.... நான் உங்க பொண்ணை விரும்பறேன்.... அண்ட் இன்னைக்குத்தான் இதை மயூரிக்கே தெரியும்... so நீங்க அவளைத் தப்பா நினைக்காதீங்க..... நாம இதைப் பத்தி பேசலாம்...”, சாரங்கன் பேச, அவனின் திடீரென்று இப்படி பேசவும் அவனுக்கு என்ன மறுமொழி கூற என்று தெரியாமல் ராமசாமி முழித்தார்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.