தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 20 - மீரா ராம்
“கௌஷிக்… கண்ணா… இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்ப்பா?...”
“இதோ ஏர்ப்போட் வந்தாச்சும்மா…” என்றவன் சொல்லியபடியே, ஏர்ப்போர்ட்டிற்குள் நுழைந்தது கௌஷிக்கின் கார்…
அனைத்து ஃபார்மாலிட்டிஸும் முடிந்து ப்ளைட்டில் அவன் தன் தாயுடன் ஏறி அமர்ந்திடுகையில், எதேச்சையாக திரும்பியவனின் விழிகள் அப்படியே நின்றது சில நொடிகள்…
“மேம்… திஸ் இஸ் யுவர் சீட்…“ என விமான பணிப்பெண் கைகாட்டிட, அப்பெண் கைக்காட்டிய திசையினைப் பார்த்தவாறு நடந்து வந்த சாரு, கௌஷிக்கை பார்த்ததும் அப்படியே நின்றிட்டாள்…
இருவரும் சுற்றுப்புறம் மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க,
அப்பெண் வந்து அவளின் அருகில் வந்து, “மேம்?..” என கேள்வியாய் நிற்க, அவள் தன் உணர்வு பெற்றிட்டாள் அக்கணமே…
லேசாக புன்னகைத்தவள், அவனின் பின் இருக்கையில் வந்து அமரப்போகையில், கல்யாணியும் அவளும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டனர்…
அப்போது அப்பெண்ணிடம் கௌஷிக் எதையோ பேசிக்கொண்டிருப்பது போல் திரும்பிட,
சாருவைப் பார்த்ததும் அவருக்குள் உள்ளிருந்து ஓர் உணர்வு பொங்கி வர, கௌஷிக் அதனை கவனித்துக்கொண்டான்…
பணிப்பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த மகனை அழைத்திட்டார் அவர்…
“கௌஷிக் கண்ணா… சாரு தனியா வந்திருக்கான்னு நினைக்குறேன்… நமக்கு பின்னாடி அவ தனியா?...” என அவர் பேச்சை நிறுத்தி கௌஷிக்கைப் பார்த்திட,
“அவங்க இங்க உங்க பக்கத்துலேயே இருக்குறமாதிரி நான் பேசிட்டேன்ம்மா… சரியா?...”
கல்யாணியின் கைகளைப் பிடித்துக்கொண்டே அவன் கூற, அவரின் முகத்தில் தெரிந்திட்ட அந்த விவரிக்க இயலாத உணர்வினை புரிந்து கொண்டான் கௌஷிக்…
அவனும் பதிலுக்கு புன்னகைத்தவாறு, வின்டோ ஓரத்தில், தாயின் அருகில் அமர்ந்திருந்தவன் சட்டென எழுந்து கொள்ள, சாரு விழித்தாள்…
“இங்க உட்காருங்க…” அவன் அவளிடம் கூற, அவளோ பணிப்பெண்ணைப் பார்த்திட்டாள்…
“மேம்… யூ கேன் சிட் ஹியர்…” அவளும் புன்னகைத்தபடி கூறிட, கல்யாணியும் அவளை வா என இமைகளால் அழைத்திட, தயங்கியபடி, அவளும் வின்டோ அருகில் அமர்ந்து கொள்ள, தாயின் அருகில் அமர்ந்தான் கௌஷிக்…
“தேங்க்ஸ்ம்மா….”
அவளின் குரல் நின்று நிதானமாக ஒலித்திட, கல்யாணியின் அதரங்களோ விரிந்திட்டது அவள் கூறிய வார்த்தைகளில்…
அதற்கு மேல் அவரும் எதுவும் பேசவில்லை… அவளும் பேசவில்லை…
சில நிமிடத்திற்குப் பிறகு, சற்றே பதட்டமாய் இருந்திட்ட சாரு, எழுந்து தன் பதட்டத்தைக்குறைத்திட, ரெஸ்ட் ரூம் செல்ல, கௌஷிக்கோ புருவத்தை சுருக்கினான்…
சில நொடிகளுக்குப்பிறகு, அவள் உடனேயே வர, வந்தவள் தான் அதுவரை அமர்ந்திருந்த இருக்கையில் கல்யாணி அமர்ந்திருக்க, அவர் இருக்கை காலியாக இருந்திட்டது…
“இது எப்படி?...” யோசனைகளின் மத்தியில் உழன்றவள், கல்யாணியின் முன்பு வந்து,
“அம்மா… நான்…” என இழுத்திட,
“எனக்கு இங்க உட்கார்ந்து வரணும் போல இருக்கும்மா… அதான்… உனக்கு எதுவும் சிரமமா?...”
அவர் சிறுபிள்ளையாய் கேட்டிட,
“என்னம்மா… சிரமமெல்லாம் எதுவும் இல்லை… நீங்க உட்காருங்க… நான் இங்க உட்கார்ந்துக்குறேன்…” என்றவள் மீண்டும் பதட்டம் நிறைந்தவளாய், கல்யாணியின் அருகிலே அமர, மறுபுறம் கௌஷிக்கின் முகத்திலும் சிறிதாய் ஒரு மாற்றம் தென்பட்டது… அதனை கல்யாணியும் கவனித்திடாமல் இல்லை…
“அவள் அருகில் தான்…” என்ற ஒரு உணர்வு அவனை இயல்பாய் இருக்கவிடாது செய்ய,
அவளுக்கோ அவனருகில் அமர்ந்திருக்கும் பதட்டம்… அதற்கு மேலே… யோசிக்க கூட விடாது அவளை மீண்டும் பதட்டம் ஆட்கொள்ள,
சீட் பெல்ட் போட்டுக்கொள்ள சொல்லி, அனைவரிடமும் விமான பணிப்பெண் கூறிட, கௌஷிக் எழுந்து கல்யாணிக்கு மாட்டி விட்டுவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்திட்டவன், சாரு தன் சீட் பெல்ட்டையே பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, அவளே நினைத்திடாத நேரத்தில், சட்டென அவளுக்கான சீட் பெல்ட்டை மாட்டி விட்டான் அவன்….
விழிகள் இரண்டும் விரிய, அவள் அவனைப் பார்த்திட, அவனோ அதனை சட்டையே செய்திடாது இருந்திட, சிரமப்பட்டுப்போனான் மிகவும்…
ப்ளைட் டேக் ஆஃப் ஆகப்போகிறது என்ற அறிவிப்பு அடுத்து வர, கைகளை பிசைந்து கொண்டாள் சாரு…
பதட்டத்தில் அவளது கைகள் லேசாக நடுங்க ஆரம்பித்திட, கண்களை மூடிக்கொண்டாள் அவள் இறுக…
சட்டென அவளின் பதட்டம் கண்டு தாயைப் பார்த்திட்டான் அவன்…