29. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்
மகள் எப்படியிருக்கிறாளோ? அவளிடம் மாற்றம் வந்ததா.. இல்லை முதல்போலே இருக்கிறாளா?
சரயூவின் வாழ்க்கையின் நிலை என்னென்று தெரிந்து கொள்ள முடியாமல் சாரதாவின் பரிதவிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்தது.
அவ்வப்போது ஃபோனில் அழைத்து நலம் விசாரித்தாலும் நேரில் காணும் நிம்மதி அதிலில்லையே. மகளும் பெரிதாக மனம்விட்டு பேசுவதில்லை. வீட்டிற்கு வரச்சொல்லி வற்புறுத்தியும் வர மறுத்துவிட்டிருக்க... ஜெய்யிடம் பேசிட தோன்றினாலும், அவர்களுக்கிடையில் எதுவும் சரியாகாத நிலையிருந்து... எதையும் வெளிகாட்டாமல் இருப்பவனுக்கு மேலும் சங்கடத்தை கொடுக்க மனமில்லாது வடிவின் உதவியை நாடினார்.
“ஜெய் தம்பியும் சரயூவும் வீட்டுக்கு வந்தாங்களா சம்மந்தி? இங்க வர முடியல தம்பிக்கு வேலைனு சொன்னா. அதான் அங்க வந்தாங்களானு கேட்கலாம்னு....” ஆவலோடு கேட்க...
“நானும் எத்தனையோ முறை கூப்பிட்டிட்ட... எங்க ஏதாவது சாக்கு சொல்லி வருவதேயில்லை. நீங்க போயி பார்த்திங்களா?” இப்போது சாரதாவின் ஆவல் வடிவிடம் தாவியிருந்தது.
மகளும் மருமகனும் அவர்களுக்கு இடையிலான பிரச்சனையை சரிசெய்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அவர்களை தொந்தரவு செய்ய கூடாதென்றும், அடிக்கடி வீட்டிற்கு சென்று...அதுவே வேறெந்த மாதிரியான புது பிரச்சனைக்கும் வழிவகுத்திடுமென்றும், அவர்களாக சமாதானமாகி இங்கு வரும்போது வரட்டுமென்றும் ரவிகுமார் கண்டிப்புடன் சொல்லிவிட்டதால் மகளை சென்று பார்க்கவும் முடியவில்லை.
சம்மந்தியிடம் விளக்கம் கொடுக்க விருப்பமில்லாமல் இரண்டாவது கேள்வியை தவிர்த்து....
“அங்கேயும் வரலையா?” என்றவரிடம் அப்பட்டமான ஏமாற்றம் எட்டிப்பார்த்தது.
அவரின் கவலையை புரிந்துகொண்ட வடிவு, “எத்தனை முறை சொல்லியும் ஜெய் இங்க வராததால நாங்களே இந்த ஞாயிறு, அங்க போலாம்னு நினைச்சிருக்கோம். நீங்களும் வாங்களே, எல்லாரையும் பார்த்த மாதிரியும் இருக்கும். உங்க பொண்ணையும் பார்த்து பேசுங்க” என்று சுலபமான தீர்வை சொல்லவும்...
கணவரின் பேச்சு நினைவுக்கு வந்தது... கூடவே சரயூவின் மாற்றத்தை அறிந்திடும் ஆவலென மனம் தத்தளிக்க....
“அவங்க நம்மளை பார்க்க வரலைனா, நாம அங்க போகமுடியாதா என்ன? இந்த வாரம் நாம போறோம்...அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்துறோம்! சரி சம்மந்தி ஜெய் வீட்ல சந்திப்போம்” என்று சாரதா மறுக்க முடியாத வகையில் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
தயக்கத்தோடு இதை குறித்து கணவனிடம் சொல்ல... சாரதாவின் தவிப்பை புரிந்து, “அதான் சம்மந்தி சொல்லிட்டாங்களே! நாமெல்லாரும் போகலாம்... இல்லை மைத்ரீயால வரமுடியாதுனாலும் பரவாயில்லை. ராகுலோட வீட்லயே இருக்கட்டும். நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்”
ஆசைஆசையாய் வளர்த்த மகளை மாதக்கணக்கில் பிரிந்திருந்தவரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திட....
ரவிகுமாரின் இந்த சம்மதம் அவர் சற்றும் எதிர்பாராததென்பதால் மகிழ்ச்சி மிகுதியில், “நிஜமாவா சொல்றீங்க?!” தனது ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் ஒற்றை கேள்வியாக்கினார்.
மனைவியின் கேள்வியில் பூத்த புன்னகையோடு, “நிஜமாதா சாரதா!” என்ற அடுத்த நொடி அங்கிருந்து புயலென சென்ற சாராதாவை பார்த்து சிறு கவலையும் எழுந்தது.
‘அவங்களுக்குள்ள எல்லா சரியாயிருக்குமா? இல்லனா சாரதாவை எப்படி சமாளிக்கிறது?’ கவலையும், உடனேயே ‘என் பொண்ணு புத்திசாலி... அவளை நல்லவிதத்துல வளர்த்திருக்க! எனக்கு நம்பிக்கையிருக்கு.... எங்களை ஏமாத்திடமாட்டா?’ என்று தனக்கு தானே சமாதானமும் சொல்லிக் கொண்டார்.
மைத்ரீக்காக செய்திருந்த திண்பன்டங்களில் மகளுக்கு பிடித்தவற்றை எடுத்து தனியாக பிரித்துவைத்து கொண்டிருந்தவர், ராகுலின் கார் சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து வேகமாக வந்தார்.
மலர்ந்த முகத்தோடு சாரதா வந்த வேகத்தில் ராகுலுக்கு சற்று கோபம்தான்! ‘மெதுவாக வந்தால் என்ன?’
“பார்த்தும்மா! எதுக்கு இப்படி ஓடிவறீங்க? அப்படியென்னதா அவசரமோ? நான் வீட்டுக்குள்ள வராமலிருக்கவா போற?”
மேடிட்ட வயிற்றோடு வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த மைத்ரீ, “நல்லா கேளுங்க! கொஞ்ச நேரமா நானும் பார்த்திட்டிருக்க... ஒரு இடத்துல நிக்காமா, என்னவோ காலுல ஸ்கேட்டிங்க் ஷூஸ் போட்ட மாதிரி, ஹாலுக்கும் கிட்சனுக்கும் ஸ்டோர் ரூமுக்கும் சுத்திட்டிருக்காங்க” தன் பங்குக்கு அவளும் பேச...
நீங்க என்ன சொன்னால் எனக்கென்ன என்பது போல் அவர்களை பார்த்தவர், “நாங்க சரயூவை பார்க்க போறோம். மைத்ரீக்கு வேற எட்டாவது மாசமில்லை...அதான் நீங்க வரீங்களானு கேட்க வந்த”