“மைதி?!” அவள் பெயரையே கேள்வியாக்கியவனின் கண்களில் ‘என்னிடம் என்ன தயக்கம்’ என்ற கண்டிப்பிருக்க...
“அது...அது...வந்து... நீ தப்பா நினைக்கலைனா...” அவள் இழுக்க, பொறுமையிழந்தவன் பெருமூச்சை வெளியேற்றி,
“இப்போ சொல்ல போறியா இல்லையா?” என்றான்.
வழக்கமாக மைதிரீ பழச்சாறு குடிக்கும் நேரமாகையில், ஆப்பிள் ஜூசோடு அங்கு வந்த சரயூ, பொறுமையற்ற ஜெய்யின் குரலில் திகைத்து நின்றுவிட்டாள். அவளால் இவர்கள் நட்பில் பிளவு ஏற்பட்டிருக்க, அது குறித்த வாக்குவாதமோ? தானேதும் உளறி விடகூடாதென்று தான் மைத்ரீயை தவிர்த்தாள். ஆனால் அது இவர்கள் நட்பை கேள்விக்குறியாக்கும் என்று இம்மியளவும் நினைத்திருக்கவில்லை. குற்றவுணர்வில் செய்வதறியாது தவித்தாள்.
“அது...பெரியவங்க என்ன எதிர்பார்க்குறாங்கனா....வந்து....ஒரு பேரக்குழந்தை வந்தா நல்லாயிருக்கும்னு.....” சற்றுமுன் விழுந்துவிட்ட சாரதாவின் முகத்தை மனதில் வைத்துதான் இதை சொல்லியிருந்தாள். பெரியவர்கள் இதுவரை வாய்விட்டு எதையும் சொல்லாதபோதும் இது பற்றிய எண்ணம் இருக்கதானே செய்யுமென்பது அவளின் யூகம்.
பலமாக சிரித்து, “இதுக்கா தயங்குன மைதி?! நீ பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறனும்ங்குற...” அவளின் முகத்தை ஆராய்ந்தவன், “ஹே திருடி....பொய் தானே சொன்ன! உன்னோட ஆசைய அவங்க ஆசைனா சொல்ற?” என்று சரியாக கேட்க... பிடிபட்டவள் திருதிருவென முழிக்க, மீண்டும் சிரித்தான் ஜெய்.
சரயூ பயந்தது போலில்லாமல் அவர்கள் குழந்தையை பற்றி பேச அவளுக்கு சிரிப்பு வந்தது. மைத்ரீயின் குழந்தையென்று நினைத்தவளை கணவனின் சிரிப்பு குழப்பியது.
“போடா கழுதை! கண்டுபிடிச்சுட்ட இல்ல... பதிலை சொல்லுடா எப்போ என்னை அத்தையாக்க போற?” ஆவலாக காத்திருக்க...
மைத்ரீயின் கேள்வியில், குழம்பியிருந்தவள் தெளிய, ஆவலோடும் ஒருவித எதிர்ப்பார்ப்போடும் ஜெய்யின் பதிலுக்காக காதுகளை கூர்மையாக்கிக் காத்திருக்க..
இதழ்கள் மட்டுமல்லாது கண்களும் சேர்ந்து சிரிக்க, “கூடிய சீக்கிரமே மைதி!” என்று தோழியிடம் சொல்லிவிட்டாலும், ‘அது நடக்குமா?’ என்ற கேள்வியும் மனதில்.
“தாங்க்ஸ் ஜெய்!” என்றவளின் கண்களில் பிரதிபலித்தது நெஞ்சின் நிம்மதி.
கணவனின் பதிலில் சில்லென்ற உணர்வு உடலெங்கும் பரவ, காதோரம் மட்டும் சூடேறி, கன்னங்கள் சிவந்தன.
‘ஜெய் போலவே ஹேண்ட்சம்மா ஒரு பேபி! ஜெய் சொன்னது உண்மைதா உனக்கு அறிவில்ல... ஹேண்ட்சம்மா இருந்தா அது பேபியில்லை’ என்று மனம் அவளை திருத்த, ‘ஹேண்ட்சம் வேணா... ஜெய்யோட க்யூட் வெர்ஷன்ல ஒரு பேபி...அப்றம் அவனோட சார்மிங்க் கண்ணோட ஒரு பேபி...அப்றம்....’ ஏதேதோ இனிய கற்பனைகளில் மூழ்கியவள் தூணில் மறைந்து நின்றிருப்பதையும் வந்த வேலையையும் மறந்தேபோனாள்.
குலதெய்வ கோவில் வழிபாட்டுக்கு பிறகு எல்லோருமாக ஒன்று கூடியது இன்றுதான். அது ஒருவித நிறைவை கொடுத்திருக்க வடிவு மைத்ரீயின் வளைகாப்பு சம்பிரதாயத்தை பற்றி கேட்க... பஞ்சாகத்தை புரட்டி அடுத்த மாதத்தில் ஒரு நந்நாளை குறித்தனர்.
அதன் பிறகு மதிய உணவு, அரட்டை, குட்டி கலாட்டாக்கள், பஜ்ஜி காஃபியென்று மாலை மறைய எல்லோரும் லேசான மனதோடு அங்கிருந்து கிளம்பினர்.
எல்லோரும் காரில் ஏறும் வரை காத்திருந்த மைத்ரீ, தோழியின் கையை பிடித்து, “ஆப்பிள் ஜூஸ் என்னாச்சு, சரயூ?” திடீரென கேட்கவும் தன்னை கண்டுபிடித்துவிட்டாளோ என்று திகைக்க, “டென்ஷனாகதா! ஜூஸ் குடிச்சியானு அம்மா கேட்டப்போவே ஓரளவுக்கு புரிஞ்சது... நீ ஜூஸோடு கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தப்போ சந்தேகமாயில்லாம க்ளியர் ஆகிடுச்சு... அதை விடு.... ஜெய் எனக்கொரு வாக்கு கொடுத்திருக்கா, அதை நிறைவேத்த கொஞ்ச ஹெல்ப் செய்றியா? அப்போதா அடுத்த முறை நானுனக்கு ஆப்பிள் ஜூஸ் கொடுக்க முடியும்” என்று சிரிக்க... சரயூவின் முகம் அந்தி வானமாய் சிவந்துவிட்டது.
மைத்ரீயின் சிரிப்பு சத்தத்தில் திரும்பியன், வெட்கம் சூழ்ந்த மனைவியின் முகத்தில் சொக்கிப்போனான்.
அதன் பிறகு மைத்ரீயும் மற்றவர்களும் விடைபெற, எல்லாமே கனவு போலிருக்க... கண்கள் சரயூவிடம் ஒட்டிகொண்டது.
சரயூவின் வெட்கமும், அதை ரசிக்கும் ஜெய்யும் பெரியவர்களின் மனசஞ்சலத்தை விரட்டியிருக்க, வரும்போதிருந்த கவலைகளை தொலைத்து சந்தோஷமாக வீடு திரும்பினர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று சரயூவிடம் வெளிபட்ட குறும்பும் சேட்டையும் நினைக்க நினைக்க தித்தித்தது! தன் காதல் அவளை மாற்றியிருப்பதற்கு இதுவே சான்று!
தோழியிடம் சொல்லிவிட்டாலும் சரயூவின் மனதை முழுதாக தெரிந்துகொள்ளாமல் அவனால் அடுத்த கட்டத்திற்கு போக முடியாது. அவள் தான் இவனிடம் மனம் திறக்க மறுக்கிறாளே!