22. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்
இரண்டு நாட்கள் கழித்து, ஜாக்குலினைப் பார்க்கச் சென்றாள் சந்தா…
அவளைக் கண்டதும் புன்னகை புரிந்திட்ட ஜாக்குலினை இதமாக அணைத்துக்கொண்டாள் சந்தா…
“நடந்ததையே நினைச்சிட்டிருக்காத ஜாக்குலின்… இப்ப உனக்கு முக்கியம் உன் குழந்தை தான்… அந்த சிசுக்காகவும், உன்னை சுத்தி இருக்குற உன்னோட உறவுகளுக்காகவும் நீ நல்லபடியா இருக்கணும்…”
ஜாக்குலினின் கைப்பிடித்து பேசிய சந்தாவினை இமைக்காமல் பார்த்திட்டாள் அவள்…
“என்ன ஜாக்குலின் அப்படி பார்க்குற?...”
“உங்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசமில்லை… ஐ மீன் இரண்டு பேரோட நிலையையும் சொல்லுறேன்… இழப்பு உங்களுக்கும் ஏற்பட்டிருக்கு… ஆனாலும் எனக்கு நீங்க ஆறுதல் சொல்லுறீங்க… நிஜமாவே எனக்கு உங்களை நினைச்சா என்ன சொல்லுறதுன்னே தெரியலைக்கா…”
“எனக்கென்னம்மா?... நான் நல்லா தான இருக்குறேன்…”
சந்தா சொல்லிமுடிக்கையில், “நீயாம்மா?...” எனக் கேட்டபடி அங்கே வந்தார் கலைவாணி…
அவரைப் பார்த்ததும், லேசாக புன்னகைத்தவளின் அருகே வந்தமர்ந்திட்டவரிடம்,
“நிஜமா நான் நல்லா தான்ம்மா இருக்குறேன்…” என்றாள் சந்தா…
“ஹ்ம்ம்… அது உன்னைப் பார்த்தாலே தெரியுதும்மா….” என்ற கலைவாணியின் கண்களை ஒருநொடி என்றாலும் உற்றுப்பார்த்திட்டாள் சந்தா…
அவரின் சொல்லுக்கு மறுபேச்சு பேசாதவள், ஜாக்குலினிடம் கிளம்புவதாக சொன்னாள்…
“என்னக்கா இப்பதான் வந்தீங்க… அதுக்குள்ள கிளம்புறீங்க?... ஏன்?...”
“ஒன்னுமில்ல ஜாக்குலின்… கொஞ்சம் வேலை இருக்கு… அதான்…”
அவளின் பதிலில், “பொய் தான சொல்லுறீங்கக்கா… அத்தை சொன்னதால தான கிளம்புறேன்னு சொல்லுறீங்க?...” என சட்டென கேட்டாள் ஜாக்குலின்…
சற்று நேரம் அமைதியாக இருந்திட்டவள், பின், “இல்லன்னு பொய் சொல்லமாட்டேன்…. ஆனா, இனியும் இருந்தா, அது தேவை இல்லாத மனஸ்தாபத்தை உண்டாக்கிடுமோன்னு பயமா இருக்கு… அதான்…” என்றாள் நிதானமாக…
அவளின் நிலை புரிந்திட்ட கலைவாணி, சந்தாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு,
“நான் அன்னைக்கு சொன்னது தான்ம்மா… இன்னைக்கும் சொல்லுறேன்… எனக்கு நீயும் பொண்ணு மாதிரி தான்… என் பொண்ணு இப்படி நிலையில இருந்தா, நான் என்ன செய்வேனோ, சொல்வேனோ அதை தான் உங்கிட்டயும் பண்ணுறேன்…” என நிறுத்தியவர்,
“நான் உன்னை உடனே மாற எல்லாம் சொல்லலைம்மா… ஆனா, முயற்சி பண்ணினா சந்தோஷப்படுவேன்னு தான் சொல்லுறேன்…” என்று சொல்லியபடி, சிறுது இடைவெளிவிட்டு,
“இந்த புடவை நிறத்தை மாற்ற நினைம்மா… கொஞ்சமாவது…” என்றார் கெஞ்சியபடி…
அதுவரை அவரின் கைகளுக்குள் வைத்திருந்த தனது கரத்தினை லேசான விரக்தி புன்னகையுடன் விடுவித்துக்கொண்டவள்,
“என் வாழ்க்கையில வண்ணமே இல்லையேம்மா… அப்போ இது தான நான் அணிய வேண்டிய நிறம்?...” என்றாள் விரக்தி மேலோங்க…
“யார் சொன்னா உன் வாழ்க்கையில வண்ணம் இல்லன்னு?...”
“யாரும்மா சொல்லணும்… அதுதான் கடவுளே சொல்லிட்டாரே… இன்னும் வேற யாரு சொல்லணும் சொல்லுங்க….”
“ஜாக்குலினும் இப்போ அதே நிலைமையில தான இருக்குறா… அவளும் வெள்ளைப்புடவை அணிஞ்சா நீ ஒத்துப்பியா?... சொல்லு…”
“அவ சின்னப்பொண்ணும்மா…”
“அப்போ நீ யாரும்மா?...”
“அவளுக்குன்னு ஆதரவா அவ குழந்தை இருக்கும்மா…”
“உண்மைதான்ம்மா… அவளுக்கு அவ குழந்தை இருக்கு… ஆனா உனக்கு நாங்க எல்லாருமே இருக்கோம்மா… எங்களை எல்லாம் நீ உறவா நினைக்கமாட்டீயாம்மா?...”
கலைவாணியின் வார்த்தை அவளை உறுத்திட,
“என்னை கம்பெல் பண்ணாதீங்கம்மா… உங்க மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு… ஜாக்குலினை நீங்க மருமகளா ஏத்துக்கிட்ட விதம் ஒன்னு போதும் உங்களை எனக்கு எடுத்து சொல்லுறதுக்கு… ஆனா, என் விஷயம் வேறம்மா… என் வாழ்க்கையில என்னை சுத்தி எல்லாரும் இருந்தாலும், என் மனசு எதுலயும் பிடிப்பில்லாம தான் இருக்கு… நீங்க எனக்கு உறவா இருக்கணும்னு நினைக்குறீங்க… நானும் உங்களை உறவா தான் நினைக்குறேன்… ஆனா, நான் இப்போ இருக்குற நிலையை மாத்திக்க நான் முன்வரலைம்மா… என்னை தப்பா நினைக்காதீங்க… நான் கிளம்புறேன்…” என்றவள், மறுகணம் அங்கே இருக்கவில்லை…
விருவிருவென்று வீட்டை விட்டு வெளியேறினாள் அவள் வேகமாக…
அவள் வெளியே செல்ல, கதவின் ஓரமாய் நின்று, அவள் செல்வதையே, கண் கலங்க பார்த்துக்கொண்டிருந்தான் ப்ரசன் மனதில் எழுந்த பெரும் வேதனையோடு…
எழில் பூக்கும்...!
Next episode will be published on 6th June. This series is updated fortnightly on Wednesday mornings..
{kunena_discuss:1122}