தொடர்கதை - காதல் இளவரசி – 02 - லதா சரவணன்
அந்த மல்ட்டி நேஷனல் மருத்துவமனையில் ரிசப்ஷன் பெண்ணிடம் பெயர் கொடுத்துவிட்டு காத்திருந்தாள். தான் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த வேலையைப் பற்றி கேள்விப்பட்ட போது உத்ராவிற்கு உள்ளூர பயம்தான் என்றாலும். அவளின் குடும்பத்திற்கு அதன் வளத்திற்கு, தாய், தமக்கை, சகோதரன் இவர்களின் வாழ்க்கைக்கு இந்த வேலை அவசியம்தான் என்ற முடிவிற்கு வந்து விட்டாள் ! இப்போது பார்த்துக்கொண்டு இருக்கும் வேலையில் உள்ள பிரச்சனைகளை இவர்களிடம் சொல்ல முடியுமா ? சொன்னால் தாங்கிக் கொள்வார்களா ?! ஏற்கனவே சூடுபட்ட பூனையல்லவா ? அவளைப்போல நானும் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டு விடக்கூடும் என்று பயந்தல்லவா போவாள். அதிலும் இந்த வேலைக்கும் நிறைய டிமாண்ட்ஸ் இருந்ததே முதல் நாள் நேர்முகத் தேர்விற்குப் போகும்போதே எத்தனைபேர் காத்திருந்தார்கள் இன்றைக்கு பிசிகல் டெஸ்ட்டில் செலக்ட் ஆகிவிட்டால் இந்த வேலை நிச்சயம் அவளுக்கு கிடைத்துவிடும்.
பலவாறு யோசனைகளோடு அமர்ந்திருந்த போதே மருத்துவ மனையின் முகப்பில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணிற்கு மிஞ்சிமிஞ்சிப் போனால் 17வயதுதான் இருக்கும் நிறைமாத கர்பணியாய் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் கோபம்தான் வந்தது உத்ராவிற்கு அருகில் சற்றே வயதான அந்த சிறு பெண்ணின் சாயலிலே இருந்த பெண்ணிடம் இத்தனை சின்ன பெண்ணிற்கு உடனே திருமணம் செய்து வைக்காவிட்டால் என்னம்மா ? பாவம் ..... அவளே குழந்தை அவளுக்கு ஒரு குழந்தையா ?
நீவேற ஏம்மா வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிறே எனக்கென்ன தலையெழுத்தா ? அப்பன் குடிகாரன் அங்கேயிங்கேயும் வீட்டுவேலை செய்து படிக்க வைச்சேன் இவ காதலிக்கறேன்னு வயித்தை ரொப்பிக்கிட்டு வந்து நிக்கறா ? அந்தப் பையனும் சின்னவன்தான் வேற வழியில்லாம கல்யாணம் பண்ணிவைச்சு இரண்டுபேருக்கும் சேர்த்து நான் கஞ்சி ஊத்திகிட்டு இருக்கேன். எல்லாம் என் தலையெழுத்து அந்தம்மா அங்கலாய்க்கும் போதே, உத்ராவின் தன் சகோதரியின் நினைப்பு வந்தது.
இதேபோன்று அக்காவின் ஆசைதானே அவளின் வாழ்க்கையே தொலைந்து போனதற்கு காரணம். பள்ளிக்கு போய் வரும் வழியில் பின்னாலேயே வந்த ஒரு ரோமியோவின் மேல் அவளுக்கு வந்த அந்த பாழாய்ப் போன காதல். பழைய மொழி என்றாலும் காதலுக்கு கண்ணில்லாமல் தானே போனது. இல்லாவிட்டால், வேறு எந்த பின்புலமும் இல்லாத அவனின் காதல் அவளுக்கு எப்படி உகந்தது என்று தெரியவில்லை, தினம் தினம் அடுப்பிலே வெந்து வேதனையில் இருந்த அன்னையின் அன்பு புரியாத அவளுக்கு, இலேசாக கையறுத்துக் கொண்டு அரை போதையில் நின்ற அவனின் அசட்டுத்தனம் பிடித்திருந்தது. பள்ளி கட்டணம், புத்தக கட்டணம் என்று ஏதேதோ கூறிவிட்டு அவனோடு சுற்றி தேவையில்லாத சகவாசத்தால் வயிற்றையும் நிரப்பிக்கொண்டு அவள் வந்து நின்றபோது வெறுத்துதான் போனாள் அம்மா
என்னடி இது ? அவன் தெருதெருவா சுத்தற பொறுக்கி, குடும்பமும் சரியில்லை, தினசரி அவங்க அப்பாவும் அம்மாவும் ரோட்ல அடிச்சிகிட்டு புரளுவதை நீயும் தானேடி பார்த்து இருக்கிறே ?
அம்மா அவங்க குடும்பம் அப்படியிருந்தா அந்த பையன் அதற்கு என்ன பண்ணுவான். அவன் ரொம்ப நல்லவன், அன்புன்னா என்னன்னே அவனுக்கு தெரியாது அப்படியிருக்கிற ஒருத்தனுக்கு அன்பைத் தருவது என்னத் தப்பு, இப்போ வேணா அவன் வேலைவெட்டி இல்லாதவனா இருக்கலாம் ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல அவனை எப்படியும் திருத்திடுவேங்கிற நம்பிக்கை எனக்கிருக்கு, அதனால நீ தேவையில்லாம கவலைப்படாதேம்மா, என் வாழ்க்கையினை நான் பார்த்துக்கறேன். அம்மாவா இருந்து என் கல்யாணத்தை முடிச்சு வை அது போதும். இல்லைன்னா சொல்லு, நானும் அவனும் போய் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கிறோம். அப்புறம் என்னை நொந்துகிட்டு புண்ணியமில்லை, அக்காவின் குரல் அத்தனை தூரம் உயரும் என்பதே அன்றுதான் உத்ராவிற்கு தெரிந்தது.
எப்போதுமே பெண்கள் கண்மூடித்தனமான அன்பை வைத்துவிடுகிறார்கள் குடும்பங்களின் மேல் ! அதிலும் காதல் என்று வந்துவிட்டால் அந்த காதல் எப்படி தன் வாழ்க்கைப் பாதைியினை தீர்மானிக்கப்போகிறது என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் யோசிக்கக் கூட முனைவதில்லை, அதற்குப்பதில் கண்மூடித்தனமான அன்பை அவர்கள் மேல் வைத்துவிட்டு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுதான் பலபேரின் வாழ்க்கைப் பரிதாபமாய் முடிய காரணமாயிருக்கிறது.
அத்தனை அன்போடும் காதலோடும் சுற்றி வந்தவன், அக்காவின் நிலைமையைக் கேட்ட முதல் வீட்டிற்குள்ளேயே அம்மா பிள்ளையாய் அடங்கிவிட்டான். ஆனால் பெண்பிள்ளையால் அப்படியிருக்க முடியாதே ?! அவள் அமைதிகாத்தாலும் அவளின் வயிறு அமைதிகாக்காதே, கணவன் தன்னை விட்டுப்பிரிந்து போது ஏற்பட்ட துயரத்தை விடவும் அக்காவினால் அடைந்த துன்பம் தான் அம்மாவை நறுக்கியே விட்டது. அத்தோடு முடங்கியவள்தான் வெளிவேலைகள் எதற்கும் போக முடியவில்லை