தொடர்கதை - காதல் இளவரசி – 03 - லதா சரவணன்
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு குடும்ப சூழலுக்கு என்று அவள் பணிபுரியும் சென்ற இடம் தான் பஜாரில் உள்ள துணிக்கடை நிறுவனம். உத்ராவின் அமைதியான குணமும் அந்த பாங்கும் வாடிக்கையாளரிடம் நன் மதிப்பை பெற்றுத்தரவே உரிமையாளரிடம் நல்ல ஊழியர் என்ற பெயரும் பெற்று விற்றாள். அங்கு சந்தித்தவன் தான் நித்திலன். அந்த நிறுவனப் பொறுப்பாளர் ஒருவரின் மகன் தன் தந்தைக்கு உணவு எடுத்து வந்தபோது சப்தமிட்ட வாடிக்கையாளர் ஓருவரை வெகு திறமையாக சமாளித்த அந்த சின்னப்பெண்ணை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. காதல் கத்திரிக்காய் என்று பின்னாடி கண்டபடி சுற்றாவிட்டாலும், அழகாய் மரியாதையோடு தன் காதலை வெளிப்படுத்தினான். தன் குடும்ப நிலைமையினைக் கணக்கிற்கொண்டு, அவள் மறுத்த போதும், நித்திலன் விடாமல் தொடர்ந்து கொண்டே வந்தான். முழுதாய் ஒருவருடம் உத்ராவின் மனம் மாறவேண்டும் என்று அவன் துடித்ததும், தன்னுடைய சேமிப்பு அனைத்தையும் கொண்டு வந்து வீட்டை மீட்டுக்கொள். மாதாமாதம் உன் சம்பளத்தை அவர்களிடம் தந்துவிடு நகை நட்டு சீர் செனத்தி எதுவும் வேண்டாம் நீ மட்டும் போதும் எனக்கு. என்று காதலோடு அவன் காலடியில் வந்து விழுந்தபோது கூட , மென்மையாய் அதை மறுத்துவிட்டாள்.
உங்கள் அன்பு என்னை கர்வப்படவைக்கிறது நிதிலன். பிள்ளைகளாய் பிறந்ததற்கு பெற்றோர்களுக்கென்று சில விஷயங்களை நாம் தீர்க்க வேண்டியுள்ளது. அதை சரிவர செய்வது நம் கடமை. உங்களைப் பெற்றவர்கள் தங்கம், அவர்களுக்கு என்று சில வெறுப்பு விருப்புகள் இருக்கும் அதற்கும் நாம் மதிப்பு தரவேண்டும். அதிலும் உங்களிடம் எனக்கு காதல் என்னும் அரும்பு மலரவில்லை, சகோதரப்பாசமும், நான் துவளும் போது துணைநிற்கும் நட்பும் தான் மேலோங்குகிறது. அதிலும் சங்கர் அத்தானின் தொல்லையில் இருந்து அக்காவும் எங்கள் குடும்பமும் மீள நீங்கள் செய்திருக்கும் உதவிகள் அதற்கே நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், ஆனாலும் மேலும் ஒரு உதவி என்னுடைய துன்பத்தினை நீங்கள் தீர்க்கவேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால் என் தங்கை கமலியைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
நிதிலனின் கண்களில் இரண்டு சொட்டு நீரோடு சொன்னார். உன்னுடைய அன்பு அளப்பரியது உத்ரா. எனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடு, ஒரு நண்பனாக நீ என்னை ஏற்றுக்கொண்டு இருந்தால் கூட உன் மனது நாளடைவில் மாறும் என்று நான் காலம் முழுவதும் காத்திருப்பேன். ஆனால் என்னைப் பார்த்தாலே ஒரு சகோதரப் பாசம் எழும்புகிறது என்று நீ சொன்ன பிறகு நான் உன்னிடம் காதலை எதிர்பார்ப்பது தவறுதான் என்னை மன்னித்துக் கொள். சரியாய் இரண்டு நாட்கள் கழித்து நித்திலன் தன் பெற்றோருடன் கமலியைப் பெண் கேட்டு வீட்டுக்கு வந்தும் விட்டார்.
மூத்தவள் இருக்கும் போது,,,,என்று ஒரு சிக்கல் முளைத்தபோதும், உத்ரா தன் குடும்ப நிலையைக் காரணம் கருதி வந்த நல்ல சம்பந்தத்தை வீணாக்க வேண்டாம். உலகம் அறியா கமலிக்கு நித்திலன் போல் ஒரு மணமகன் கிடைத்தால் அவள் வாழ்வு வளமாகும் என்று என்னென்னவோ சொல்லி சம்மதிக்க வைத்தும் விட்டாள். உன்னுடைய சுமை ஒன்றாவது குறையட்டுமே நான் கமலியைத் திருமணம் செய்து கொள்ள முன்வந்திருக்கிறேன். ஆனால் கமலிக்கு என் அன்பை முழுமையாய்த் தருவேன் அதில் நீ சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று சொன்ன நித்திலன் அப்போது மிகவும் உயர்ந்தவனாகத் தெரிந்தான்.
கமலிக்கும், நிதிலனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடக்கும் இந்த சமயத்தில் தான் வீட்டின் மேல் இருக்கும் கடனும் முடிவுக்கு வரவேண்டும். கூடவே அம்மாவின் உடல் நலம் பற்றிய கவலையும், கணவனைப் பிரிந்த தமக்கை, பள்ளியிறுதியாண்டில் நிற்கும் தம்பி என எதிர்காலமும் பயமேற்றிடத்தான் செய்தது உத்ராவிற்கு அதற்காகத்தான் நிர்வாக அதிகாரியின் மகன் சொல்லிய அந்த வேலைக்கு அவள் சமர்ப்பித்ததே ! பெண்கள் சற்றே யோசிக்க வேண்டிய வேலைதான். மேலை நாடுகளில் இம்மாதிரி வேலைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள்தான் அதிகரித்திருந்தபோதும், இங்கே நிலைமை தலைகீழாகத்தானே நிற்கிறது.
ஆணுக்குப்பெண்கள் சரிநிகர் சமானம் என்று மார்தட்டிக்கொண்டாலும், போலீஸூ வேலையில் இருக்கும் பெண்களுக்கும் வக்கீல் வேலையில் இருக்கும் பெண்களுக்கும் தொழிலைக் காரணம் காட்டி கல்யாணச் சந்தையில் சற்று பேரம் பேசத்தானே செய்கிறார்கள். இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம். அதிலும் கடலுக்கு அடியில் பவளப்பாறைகள் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கு பவளப்பாறைகளை சேதமாக்கும் ஒரு அரிய நட்சத்திர மீன்வகையை அழிக்க வேண்டும். அந்த வேலைக்கு ஆர்வமுள்ள இளைஞர்கள் பங்குபெறலாம் என்று அழைப்பு விடுத்திருந்த போது அதற்குரிய சம்பளமும் அவளை கவரத்தான் செய்தது. அதிலும் விபத்தேதும் ஏற்பட்டால் காப்பீடு தொகை கூட வீட்டுக்கு வந்துவிடும் ஏன் இந்த வேலையை நாம் ஒப்புக்கொள்ள கூடாது என்று தோன்றிட சரியென்று தலையசைத்து விட்டும் வந்துவிட்டாள்.