“நேத்திக்கு.”
“அடிங்க.. போய் ஒழுங்கா பிரஷ் பண்ணிட்டு வா” என,
“அத்தான். அதுக்குள்ளே காபி ஆறிடும்”
“கெட்டிலில் தானே இருக்கு. அது எல்லாம் ஒன்னும் ஆறாது. போ”
அவனுக்கு “வெவ்வே.. “என்று அழகு கட்டிவிட்டுச் சென்றாள்.
அவள் உள்ளே போகவும், அந்த டெட்டியைப் பார்த்து
“ஹேய்.. வின்னி, இனிமேல் அவளோட பெட் நான்தான். சோ ஸ்டே அவே” என்று அதன் மூக்கில் செல்லமாக ஒரு பஞ்ச் வைத்தான்.
அதற்குள் மித்ரா வெளியில் வந்தாள். தன் காபி கப் எடுத்தாள்.
“மேடம். எனக்கு காபி யாரு கொடுப்பா?
“ஏன் நீங்களே எடுத்துக்க மாட்டீங்களோ?
“நோ. நீதான் கொடுக்கனும். “
அவனை முறைத்தவள், அவனின் அசையாத பார்வையில், அவனுக்கும் கலந்து கொடுத்தாள்.
அவன் வாங்கிக் கொள்ள, மித்ரா “அத்தான், நீங்க முன்ன மாதிரி இல்லை. நேற்றிலிருந்து ரொம்ப வித்தியாசமா நடந்துக்கறீங்க” என்றாள்
“என்ன வித்தியாசமாம்?
“சொல்லத் தெரியல” என்று கூற,
“புரியும் போது சொல்லு” என்றான்.
பின் அவளை குளித்து ரெடியாகி வரசொன்னான்.
மித்ராவும் குளித்து விட்டு, டிரெஸ்ஸிங் ரூமில் புடவை மாற்றிக் கொண்டு வந்தாள். மெரூன் கலரில் நேவி ப்ளூ பார்டர் கலர் கிரேப் சில்க் புடவை அணிந்து வெளியில் வர, ஷ்யாம் அவளின் கலரை அந்தப் புடவை எடுப்பாகக் காட்டியதை உணர்ந்தான். அவள் உடல் அமைப்பிற்கு புடவை பாந்தமாக பொருந்துவதைப் பார்த்து பெருமூச்சு விட்டான்.
சற்று நேரம் அவளையே கவனித்தவன், அவள் தன்னை நோக்கித் திரும்பவும், தன் தலையை உலுக்கிக் கொண்டு, அவனும் குளிக்கக் கிளம்பினான்.
தன் மனம் மித்ராவின் கணவனை மாற ஆரம்பித்து விட்டது என்று அவனுக்குப் புரிந்தது. அதே சமயம் மித்ராவிற்குத் தான் இன்னும் அவளின் மாமா பையன் என்ற எண்ணம் தான். அவள் கணவன் ஷ்யாம் என்ற உணர்வு ஏற்படவில்லை. சீக்கிரமே அவளுக்குத் தோன்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவனும் குளித்து விட்டு வந்தான்.
இந்த யோசனையில் தன் டிரஸ் எடுத்துக் கொண்டு குளியலறை செல்ல மறந்து விட்டான். குளித்து முடித்தப் பின் நினைவு வர, வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வெளியில் வந்தால், மித்ரா எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று தயங்கினான்.
அவன் தயக்கம் போக்கும் விதமாக, குளியலறை கதவைத் தட்டி,
“அத்தான், உங்க பிரீப் டிரெஸ்ஸிங் ரூமில் வைத்து இருக்கிறேன். நீங்க உங்க லெப்ட் சைடு கதவு வழியாக அங்கே சென்று விடுங்கள்” என்று குரல் கொடுத்தாள்.
நல்லவேளை என்று எண்ணியவனாக, ரெடியாகி வந்தான் ஷ்யாம்.
இருவரும் சேர்ந்தே கீழே இறங்கி வர, சபரி டிபன் தயாராக வைத்து இருந்தார்.
முதலில் இருவரையும் பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட்டு வரச் சொன்னார் மித்ராவின் பாட்டி.
வரவும், எல்லோருக்கும் டிபன் பரிமாறினார். எல்லோரும் சாப்பிட்டு முடிக்கவும். ஷ்யாம் முரளியிடம்
“மாமா. நாம் அந்த வீட்டிற்குக் கிளம்பலாமா? என்று கேட்க,
“ஒரு அரை மணி நேரம். நல்ல நேரத்தில் இங்கிருந்து கிளம்பலாம்ன்னு அம்மா சொன்னாங்க” என்று கூறினார்.
“சரி மாமா.. “ என்று அவரிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க, சபரியும், மித்ராவின் பாட்டியும் மித்ராவை அருகில் உட்கார வைத்து, அவள் தலையில் பூ வைத்து விட்டனர்.
அவள் பாட்டி “மித்துக் கண்ணா, நீ உன்னோட புகுந்த வீட்டிற்குப் போகப் போறே. இன்னும் பழைய விளையாட்டுத் தனம் இல்லாம, பொறுப்பா நடந்து எனக்கும், இந்த வீட்டிற்கும் நல்ல பேர் வாங்கிக் கொடுக்கணும். சரியா? “ என்று கொஞ்சம் அறிவுரைகள் சொன்னார்.
பாட்டி “ அங்கே மைதிலி, இங்கே உன் அம்மா எல்லோரும் எப்படி அவர்கள் குடும்பத்திற்கு அஸ்திவாரமாக இருக்கிறார்களோ, அதே போல் நீயும் இருக்க வேண்டும்.” என்று கூற,
“பாட்டி ஷ்யாம் அத்தான் கூட இருந்தா எந்த பிரச்சினையும் இல்லை பாட்டி. அத்தானே எல்லாம் சொல்லித் தருவாங்க” என்று அவருக்கு அவள் தைரியம் சொல்லவே, அதைக் கேட்ட ஷ்யாம் தன் அன்னை கூறியதை நினைத்துப் பார்த்தான்.
பின் நல்ல நேரத்தில் அவளைக் கொண்டு விட சபரி, முரளி கிளம்ப, அவள் பாட்டித் தான் வீட்டில் இருந்து கொள்வதாகக் கூறியதைத் தடுத்து, அவரையும் தங்களோடு கிளப்பினான்.
ஷ்யாமின் வீட்டிற்குச் செல்ல, அவன் அம்மாவின் திறனைக் கண்டு ஷ்யாமே சற்று அசந்து தான் விட்டான்.
கேட்டில் வாழை மரம் வைத்ததில் ஆரம்பித்து, போர்டிகோ பாதை முழுதும் ஆர்ச் வடிவத்தில் சீரியல் செட் தொங்கிக் கொண்டு இருந்தது, தோட்டத்திலும், அதே போல் வண்ண விளக்குகள் தெரிந்தது.