தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 08 - சுபஸ்ரீ
எட்டு மணியை கடந்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. ஓட்டமும் நடையுமாக அருகில் வந்து அமர்ந்த ஆகாஷை பார்த்து முறைத்தார் பத்மாவதி. இரவு நேர குளிர் காற்று அந்த அரங்கத்தினுள் நுழையவில்லை.
“ஏண்டா லேட்டு?” பத்மாவதி புருவத்தை சுளித்து கேட்க
“நான் என்ன சும்மாவா இருந்தேன் வேலமா” தெனாவட்டாக பதிலளித்தான்.
அரங்கத்திற்கு பத்மாவதியும் அவர் கணவரும் சாரு உதவியுடன் கேப்பில் முன்னமே வந்துவிட்டார்கள். ஆகாஷ் எப்படியும் நேரத்திற்கு வர மாட்டான் என்பது ஊர் அறிந்த ரகசியம்.
ஆகாஷ் பத்து நாட்களுக்கு பிறகு சாருவை காணப் போகிறான். சாரு தன் அக்காவை பற்றி பேசிய பிறகு வேலை பளு காரணமாக ஆகாஷ் டெக்சாஸ் திரும்பிவிட்டான். தன் பெற்றோரையும் தன்னோடு அழைத்து வந்துவிட்டான். லலிதா குடும்பம் வரவில்லை.
சாருவின் அக்கா சுவாதியை மீட்பதைப் பற்றி முழுமையாக சிந்திக்க முடியவில்லை. இங்கே பாதியில்விட்ட கேஸ்கள் கழுத்தை நெறித்தன. இதற்கிடையில் சாரு குழு இங்கு நடனமாட வந்தது.
ஆகாஷிற்கு நடனத்தைப் பற்றி அ ஆ கூட தெரியாது. நடனத்தை ரசிப்பதோ அல்லது அதில் ஈடுபாடோ இல்லை. வேறு யாராவது அழைத்திருந்தால் நிச்சயம் எஸ்கேப் ஆகியிருப்பான். சாரு வீட்டிற்கே வந்து அழைத்திருந்தாள். அதனாலேயே வந்தான்.
மதிய நேரத்தில் நண்பர்களுடன் அழைக்க வந்திருந்தாள். உடனே கிளம்பியும் விட்டாள். ஆகாஷ் அவளை சந்திக்க இயலவில்லை. அவனுடன் போனில் இருவார்த்தை பேசினாள் அவ்வளவே.
பத்து நாட்களாய் பசித்திருந்த கண்களுக்கு இன்று விருந்து கிடைக்கப் போகிறது. மேடையில் சூர்யா வேறு ஒரு பெண்ணுடன் நடனமாடிக் கொண்டிருந்தான். சூர்யா அழகு ஆகாஷிற்கு பொறாமையாய் இருந்தது.
ஒரு நொடி தானா இப்படியெல்லாம் சிந்திக்கிறேன் என அவனுக்கே வியப்பாக இருந்தது. அவனின் உள்மனம் சூர்யாவின் நடன அபிநயத்திற்கும் அழகிற்கும் நூற்றுக்கு இருநூறு மதிப்பெண்களை அள்ளி வீசியது. சூர்யா திறமை வாய்ந்தவன் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை ஆகாஷால்.
சூர்யாவும் அந்த பெண்ணும் நடனம் ஆடி முடித்து உள்ளே செல்ல . . திரை மூடியது. “தாய் மகனின் பாசத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அதிலும் யசோதை கண்ணன் மேல் வைத்திருந்த அன்பு அலாதியானது. யசோதையின் கட்டுகடங்காத தாய்மை. கண்ணனின் குறும்பு இவ்விரண்டையும் சாருலதா மற்றும் விக்கியின் நடனத்தில் காணப் போகிறீர்கள்” என அசரீரியாய் திரைக்கு பின்னிருந்து பெண்ணின் மைக் குரல் முதலில் தமிழிலும் பின்பு அதையே ஆங்கிலத்திலும் கூறியது.
விக்கி என்ற குட்டி பையன் தலையில் கரீடம் அதில் மயிலிறகு கையில் புல்லாங்குழல் என கண்ணனுக்கே உண்டான டிரேட் மார்க் சமாச்சாரங்களுடன் வந்து நின்றான். சாரு யசோதையாய் அவதரித்திருந்தாள்.
எப்பொழுதும் ஜீன் அல்லது சுடிதாரில் பார்த்த சாரு இன்று மிக அழகாய் ஆகாஷ் கண்ணிற்கு தெரிந்தாள். அவள் ஆடை மற்றும் நகைகள் அவளை புதிய சாருவாக காட்டியது. இது போன்ற அலங்காரத்துடன் சூர்யா உடனான புகைப்படங்கள் அவ்வப்பொழுது மனதில் தோன்றி இம்சித்தது.
இருவரும் முறைப்படி பரத மொழியில் அனைவரையும் வணங்கினர். பின்பு கனீரென்ற வெங்கல குரலில் அருணா சாய்ராம் பாட்டு ஒலித்தது. பாடலில் கண்ணன் விளையாட செல்ல தன் தாயிடம் அனுமதி கேட்கிறான் . . யசோதை கண்ணன் மேல் உள்ள பாசத்தால் அதை மறுக்கிறாள் என்பதைப் போல வருகிறது.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
யசோதை:
“மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்“
காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)
இந்த வரிகளுக்கு மிக அழகாய் தாய் பாசத்தை முகத்தில் நிறுத்தி அபினயித்தாள் சாரு.
கண்ணன்:
“போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே”
காய்ச்சின பாலும் வேண்டாம்;
கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து,
ஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
விக்கி குழந்தைகளுக்கே உரித்தான ரகளையை செய்தான் அபினயத்தோடு.
முதலில் செல்லமாய் கெஞ்சினான் குறும்பாய் கொஞ்சினான் பின்னர் பிள்ளைகளுக்கு உண்டான பிடிவாதம் என ஒவ்வொரு நிலையாய் கண்ணன் உணர்வுகளை காட்டினான்.