தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 26 - சித்ரா. வெ
அடுத்து வந்த வாரத்திலேயே கல்லூரிக்குச் சென்று மேற்படிப்பு பற்றி விசாரிக்க வேண்டுமென்று சுடரொளி எழிலரசியிடம் சொல்லவும், அவள் மகிழ்வேந்தனுக்கு தகவல் கூறினாள். பிறகு அவனுக்கு வேலையில்லாத நேரமாக பார்த்து, அவர்கள் வீட்டுக்கே வந்து சுடரொளியை கல்லூரிக்கு அவனது வண்டியிலேயே அழைத்துச் சென்றான் மகி.. அவள் படிப்பு பற்றிய தகவல் அறிய சுடர் கல்லூரியின் அலுவலக அறையின் உள்ளே சென்றிருக்க, அவனோ அவள் வரும் வரை அந்த அறைக்கு வெளியே காத்திருந்தான். சிறிது நேரம் கழித்து அவள் வெளியே வந்தாள். அந்த நேரம் அவள் வருவதை கவனிக்காமல் அவன் தன் கைக்கடிகாரத்தில் மணி பார்க்கவும்,
“சாரி என்னால உங்களுக்கு தொந்தரவு..” என்று சொல்லியப்படியே சுடர் அவன் அருகில் வந்தாள்.
“இதுல என்ன தொந்தரவு.. உன்னோட படிப்பு விஷயமா தானே வந்திருக்கோம்.. எனக்கு இப்போ முக்கியமான வேலை எதுவும் இல்ல.. ரெஸ்ட்டாரன்ட்ல அறிவு இருப்பான். அதனால ஒன்னும் பிரச்சனையில்லை. சும்மா தான் டைம் பார்த்தேன் என்று விளக்கம் கூறினான்.
“ரொம்ப தேங்க்ஸ் மகிழ்.. நீங்க வரலன்னா கொஞ்சம் திணறியிருப்பேன்.. சித்திக்கு வீட்லயே நிறைய வேலை இருக்கு.. அவங்களை கூட்டிட்டு வந்தா அவங்களுக்கு கஷ்டமா இருந்திருக்கும், இப்போ வேலை ஈஸியா முடிஞ்சிடுச்சு..”
“எதுக்கு தேங்க்ஸ்ல்லாம், இதெல்லாம் பெரிய விஷயமா..” என்று கேட்டான். அவனது வண்டியை நுழைவு வாயில் அருகிலேயே நிறுத்தியிருந்ததால், இருவரும் பேசியப்படி நடந்து சென்றனர்.
“ஆமாம் என்ன படிக்கலாம்னு இருக்க? உள்ள என்ன சொன்னாங்க..?’
“நான் எம்.ஏ தமிழ் லிட்ரேச்சர் படிக்கப் போறேன். இப்போ மார்ச் மாசம் தானே.. சீக்கிரம் அப்ளிகேஷன் ஃபார்ம் கொடுப்பாங்க அப்போ வந்து அப்ளை பண்ண சொன்னங்க..”
“ஓ தமிழ் லிட்ரச்சரா சூப்பர்.. ஆமாம் நீ சின்ன வயசுலயே லண்டன் போயிட்டல்ல.. அப்புறம் எப்படி தமிழ்ல..” தயக்கத்தோடு கேட்டான்.
“அது நான் சின்ன வயசுல இருந்து அப்பாக்கு லெட்டர் எழுதிக்கிட்டே இருந்ததால எனக்கு தமிழ் மறந்ததில்ல.. இருந்தாலும் அப்பா ப்ரண்ட் ஆனந்தி ஆன்ட்டி இருக்காங்கல்ல அவங்க இன்ஸ்டிட்யூட்ல தமிழ் படிச்சு சர்டிஃபிகேட் வாங்கி வச்சிருக்கேன். அதனால தமிழ் எடுத்து படிக்கிறதுல ஒன்னும் பிரச்சனையில்லை மகிழ்..” என்று கூற,
அப்போது தான் அவள் மகிழ் என்று தன்னை அழைப்பதை மகி கவனித்தான். இது வரை அவனை வீட்டில் உள்ள அனைவரும் மகி என்று தான் அழைப்பர். பள்ளி கல்லூரிகளில் சில பேர் வேந்தன் என்று பின் பாதி பெயரை சொல்லி அழைப்பர். ஆனால் சுடர் அவனை மகிழ் என்று அழைப்பது அவனுக்கு பிடித்திருந்தது. அதைப்பற்றிய சிந்தனையில் அவன் இருக்க,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
திடிரென அவன் அமைதியாகவும், “மகிழ் என்ன சைலண்ட் ஆகிட்டீங்க..?” என்று கேட்டாள்.
“ஒன்னுமில்ல மத்தவங்க மாதிரி இல்லாம நீ மகிழ்னு என்னை கூப்பிட்டதை பத்தி யோசிச்சேன்..”
“ஓ சாரி.. நான் அப்படி கூப்பிட்றது உங்களுக்கு பிடிக்கலையா?”
“ச்சேச்சே அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.. ஆமாம் உனக்கு ஏன் தமிழ் படிக்கணும்னு ஆசை வந்துச்சு..”
“இப்படி கேட்டா எப்படி சொல்றது.. அப்பா தமிழ் புரொஃபசரா இருந்ததாலயா இருக்கலாம்.. சின்ன வயசுல அப்பாக்கிட்ட அப்படித்தான் நான் சொல்லுவேன்.. அது அப்படியே மனசுலயே இருக்கு…”
இங்கு வரணும்னு நினைச்சதுக்கு காரணம் அப்பாவை பார்க்கிறதுக்காக மட்டும் கிடையாது.. கூடவே தமிழ் லிட்ரச்சர் படிக்கவும் தான்..
எனக்கு தெரியும் நான் இங்க வந்தது உங்களுக்கெல்லாம் பிடிக்கலன்னு.. அப்பா, சித்தி, தம்பிங்கன்னு எல்லோரும் சந்தோஷமா வாழற குடும்பத்துல அப்பாவோட கடந்த காலமா நான் வந்தது இடைஞ்சல் தான், எனக்கும் புரியுது..
ஆனாலும் அப்பாவை பார்க்க ஆசையா இருந்துச்சு.. கொஞ்ச நாளாவது அவர் கூட இருக்க நினைச்சேன்.. மத்தப்படி நான் நிரந்தரமா இங்கேயே இருக்க மாட்டேன், திரும்ப லண்டனுக்கே போயிடுவேன்..” என்றதும் அவன் அமைதி காத்தான். முன்பு அவள் இங்கே வரக் கூடாதென்று சொன்னவன் தான் அவன், ஆனால் இப்போது அவள் இப்படி பேசும்போது “ஆமாம் போய்விடு” என்று சொல்லிவிட முடியவில்லை.
அவனது அமைதியை கண்டவளோ, “திரும்ப லண்டனுக்கே போயிடுவேன்னு சொல்லிட்டு, இப்போ படிக்கப் போறேன், புரொஃபசர் ஆகப் போறேன்னு சொல்லிட்டு இருக்கேன்னு பார்க்கிறீங்களா.. லண்டன் போறேனோ இல்லையோ கடைசி வரை அப்பாக்கூட இருந்து உங்களுக்கெல்லாம் தொல்லையா இருக்க மாட்டேன்.. எனக்குன்னு ஒரு வழியை பர்த்துக்கிட்டு விலகிடுவேன்..” என்று கூறினாள்.
அதற்கும் என்ன பதில் சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை. இப்போது தான் அவர்களுக்குள் மெல்லிய நட்பு உருவாகியிருக்கிறது. இந்த நேரம் பார்த்து அவளை முன்பு போல் நினைக்கவும் முடியவில்லை. அதற்காக நீ எங்கேயும் போக கூடாது, உனக்கு இங்கு அனைத்து உரிமையும் இருக்கிறது, நீ எங்களில் ஒருத்தி என்று சொல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை, அதனால் பேச்சை வேறு பக்கம் திசை திருப்பினான்.