(Reading time: 9 - 18 minutes)

“நீ தமிழ் எடுத்து படிக்கப் போற, புரொஃபஸர் ஆக ஆசை இருக்குன்னு அப்பாக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னு வச்சிக்கோயேன், அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிடும்.. எங்க வீட்ல யாராவது ஒருத்தர் அவரை போல தமிழ் எடுத்து படிக்கணும்னு அவருக்கு ரொம்பவே ஆசை.. ஆனா அதை எங்க மேல எப்போதும் திணிச்சதில்ல, ஆனா ரொம்ப எதிர்பார்த்தாரு..

மலர், மணிக்கு ஏதோ ஒரு டிகிரி முடிச்சா போதும்னு இருந்துட்டாங்க.. நானும் அறிவும் ஹோட்டல் லைன்க்கு போயிட்டோம்.. அருளாவது  அவர் நினைச்சது போல தமிழ் எடுத்து படிப்பான்னு அவர் எதிர்பார்த்தாரு.. ஆனா அவளும் இலக்கியாவும் கம்யூட்டர்ல இன்ட்ரஸ்ட்னு பி.சி.ஏ எடுத்து படிக்கிறாங்க.. அதனால அப்பாக்கு மட்டும் நீ தமிழ் எடுத்து படிக்கிறது தெரிஞ்சா ரொம்ப சந்தோஷபடுவாரு, உனக்கு தேவையான ஹெல்ப்பும் செய்வாரு..’ என்று கூறவும் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது.

உண்மையிலேயே அவள் தமிழை எடுத்து படிக்க இருப்பதை  தன் தந்தை கேள்விப்பட்டால் மகிழ்ச்சியடைவாரா என்று அவள் மனம் எதிர்பார்த்தது. படிப்பு விஷயத்தில் அவரின் உதவியையும் மனம் நாடியது. இருந்தும் எதிதர்பார்ப்பதெல்லாம் நடக்குமா? என்ற கேள்வி பெரிதாக தெரிந்தது.

தந்தையிடமே உதவி கிடைக்காது என்று தெரிந்த பின், மற்றவர்களிடமும் கேட்க மனம் வரவில்லை. பேசாமல் ஆனந்தி ஆன்ட்டியிடம் தான் கேட்க வேண்டும் என்று நினைத்திருக்க, மகி இப்படி ஒரு விஷயத்தை கூறியது மனதிற்கு ஆறுதலாக இருந்தது என்றால், அவனை அறியாமலேயே அவர்கள் உறவினர்களோடு சேர்த்து அவளையும் இணைத்து பேசியது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

அதற்குள் அவர்கள் வண்டி நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர். “மகி எனக்கு இன்னொரு ஹெல்ப்பும் நீங்க செய்யணும் முடியுமா?” என்று தயங்கியப்படி கேட்டாள்.

“என்ன சொல்லு?”

“அது வந்து எனக்கு இப்போதைக்கு ஒரு வேலை வேணும், அதாவது பார்ட் டைம் செய்றது போல, அப்போ தான் காலேஜ்ல ஜாயின் பண்ணாலும் அந்த வேலையை தொடர்ந்து செய்ய முடியும்.. அதுக்கு நீங்க ஏதாச்சும் பண்ண முடியுமா?”

“ஆனா இப்போ வேலைக்கு என்ன அவசியம்?”

“வீட்ல அப்பா சம்பளத்துல தான் எல்லாமே பார்க்க வேண்டியிருக்கு.. தம்பிங்க படிப்புக்கே நிறைய செலவாகும், இதுல இப்போ நானும் கூடுதலா வந்திருக்கேன். என்னோட படிப்புக்கும் அவங்களை எதிர்பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு.. இதைப்பத்தி இப்பவே சித்திக்கிட்ட பேசினா, “நாங்க பார்த்துக்க மாட்டோமா? எதுக்கு வேலைக்கு போகணும்னு கேட்டு, கண்டிப்பா வேண்டாம்னு சொல்லுவாங்க..

என்னோட ப்ரண்ட் சார்லி, அதான் ஆனந்தி ஆன்ட்டியோட பையன், அவன் இன்னும் பத்து நாளில் இங்க வரப் போறான். அவன்கிட்ட வேலை விஷயமா பேசினா, நானே எல்லாம் பார்த்துக்கிறேன், நீ வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிடுவான்.. ஆனந்தி ஆன்டியும் அதே தான் சொல்வாங்க.. இங்க நான்  உதவி கேக்க எனக்கு வேற யாரையும் தெரியாது.. அதனால நீங்க தான் ஹெல்ப் செய்யணும்..” என்று கேட்டாள்.

“அத்தைக்கு தெரியாம நான் எப்படி செய்றது, தெரிஞ்சா என்னை திட்டுவாங்க” என்று அவ்ன் சொன்னதும்,

“சித்திக்கிட்ட நான் பேசிக்கிறேன், வீட்லயே இருக்க போர் அடிக்குது, அதனால வேலைக்கு போகலாம்னு இருக்கேன்னு சொல்லிடுவேன்.. ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள். அதற்கு மேல் மறுக்க முடியாததால், இரண்டு நாட்களுக்குள் பார்த்து சொல்வதாக கூறினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவன் சொல்லியது போலவே இரண்டு நாட்கள் கழித்து அவளை அழைத்து பேசினான். ஒரு சிறிய அளவிளான ஓவியப் பள்ளியில் ஆசிரியர் வேலைக்காக பேசியிருப்பதாகவும், அவள் வரைந்து வைத்திருக்கும் ஓவியத்தை எடுத்து தயாராக வைத்திருக்கும்படி கூறினான்.

அவன் வீட்டிற்கு வரும்போது அவள் தயாராக இருந்தாள். எழிலிடம் படிப்பு விஷயமாக திரும்ப கல்லூரிக்கு செல்ல வேண்டியுள்ளது என்று சமாளித்துவிட்டு அவளை அழைத்துச் சென்றான்.

அங்கே அந்தப் பள்ளியில் அவளிடம் சில கேள்விகள் கேட்டு, அவள் வரைந்த ஓவியத்தை பார்த்தனர். ஆசிரியராக இருப்பதற்கு அவள் பயிற்சி எடுக்கவில்லையென்றாலும், அங்கேயே சில நாட்கள் முறையான பயிற்சி அளித்து வேலையில் சேர்த்துக் கொள்வதாக கூறினர்.

சுடரொளிக்கும் அந்த வேலை திருப்தி தான், தனக்கு பிடித்த ஓவியம் வரைவது மட்டுமல்லாமல், அங்கே சிறு வயது பிள்ளைகளும் ஓவிய வகுப்பில் சேர்ந்து படிப்பதால், அவளுக்கு அந்த சூழ்நிலை மிகவும் பிடித்துவிட்டது. ஒரே அறைக்குள் அடைந்து கிடந்து கொஞ்சம் வெறுப்பான மனநிலையிலேயே இருந்தவளுக்கு இந்த மாற்றம் அவசியம் தேவைப்பட்டது. இப்படி ஒரு வேலை வாங்கி கொடுத்ததால், மகிழ்வேந்தனுக்கு மனநிறைவுடன் நன்றி கூறினாள்.

பின் அங்கிருந்து கிளம்பும்போது, அவள் வரைந்திருந்த ஓவியங்கள் அடங்கிய பை மிகவும் கனமாக இருந்ததால், இன்று தன் வண்டியில் சிறிது பிரச்சனை இருக்கவே, தன் தந்தையின் ஸ்கூட்டர் மாடல் வண்டியை மகி  எடுத்து வந்திருந்தான். அதை திறந்து அவள் பையை கேட்டு வாங்கி வைத்தவன், அவர்கள் போகும் வழியில் தான் அவர்களின் ரெஸ்ட்டாரண்ட் இருப்பதால், அங்கே ஏதாவது சாப்பிட்டு செல்லலாம் என்று கூறியவன், வேலைக்கு சேர்ந்து முதல் மாத சம்பளம் வாங்கியவுடன் ட்ரீட் வைக்க வேண்டும் என்று கேட்டான்.

அதற்கு சரி என்று தலையாட்டியவள், திடிரென்று எதையோ நினைத்து சிரிக்க ஆரம்பித்தாள். எதற்காக இப்படி சிரிக்கிறாள் என்று புரியவில்லையென்றாலும், முன்பு அவள் ஒரு புன்னகையிலேயே விழுந்தவன், இப்போது அவளின் அழகிய சிரிப்பில் தொலைந்துவிடும் ஆசையில்  அவளை  ரசித்து பார்த்தப்படி நின்றிருந்தான்.

உறவு வளரும்...

Episode # 25

Episode # 27

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.