தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 01 - ஸ்ரீ
“யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே”
சற்றும் விடியாத அந்த மார்கழி நேர காலைப் பொழுதில் தன் வீட்டு மாடியில் குளிருக்கு அடக்கமாய் கைகளை இறுகக் கட்டிய படி இலக்கில்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் வெண்பா.
அந்த மெல்லிய விளக்கு வெளிச்சத்திலும் நிர்மலமான திருத்தமாய் செதுக்கப்பட்டது போன்ற முகம்.கண்களோ கூர்வாள் போன்ற பிரகாசமாய் எந்த ஒப்பனையுமின்றியே அத்தனை அற்புதமாய்,பிறை வடிவான அந்த அதரங்கள் அழகுக்கே அழகாய்..உயரத்திற்கு ஏற்ற எடை,இடை வரையிலான கார்கூந்தல் ஆனால் இவையனைத்தையும் தாண்டிய ஏதோ ஒரு சலனம் அந்த முகத்தில்.
அவள் சிந்தனையை கலைத்தது அருகில் மணந்த காபியின் நறுமணம்.தலையை உலுக்கி தன்னை மீட்டெடுத்தவள் அதை கையில் வாங்கி பருக ஆரம்பித்தாள்.
“ஏன் கண்ணு இதெல்லாம் உனக்கு தேவையா?இப்படி தனியா கஷ்டப் படணுமா?தம்பி...”
“சிந்தாம்மா.. போய் டிபன் வேலையை பாருங்க..இன்னைக்கு சீக்கிரமே க்ளாஸ்க்கு போனும்..பசங்க வந்துருவாங்க..”,என்றவள் அவர் கன்னம் தட்டிச் சென்றாள்.
தனதறைக்கு வந்தவள் அடுத்த அரை மணி நேரத்தில் தயாராகி வந்தாள்.அதற்குள் அவளுக்கான உணவை சிந்தாமணி தயார் செய்திருக்க காலை மதியம் இரு வேளைக்குமான உணவை கையில் எடுத்துக் கொண்டவள்,
“இந்தாங்க இந்த 500 ரூபாயை வச்சுக்கோங்க நேத்தே உடம்பு முடிலனு சொன்னீங்களே.. ஒழுங்கா போய் டாக்டரை பாத்துட்டு வந்து நல்லா ரெஸ்ட் எடுங்க..சரியா நா மதியானம் சாப்பாட்டுக்கு அப்பறம் வந்துருவேன்..”
“தம்பி வர சொல்லிச்சும்மா அவன்ட்டயே பாத்துப்பேன்..காசெல்லாம் வேணாம்..”
“ம்ம் கைவசம் ஒரு டாக்டர் தயாரா வச்சுருக்கீங்க..சரிதான்..பரவால்ல பணத்தை வச்சுக் கோங்க சாப்பிட பழம் இல்ல வேற என்ன வேணுமோ வாங்கிக்கோங்க..”,என்றவள் வெளியே வந்து தன் இரு சக்கர வாகனத்தை உயிர்பித்து சிட்டென பறந்திருந்தாள்.
அவளையே பார்த்திருந்த சிந்தாமணிக்கு பெருமூச்சு எழுந்தது.என்னைக்கு தான் இவங்களுக்கு விடிவுகாலம் வருமோ..என நினைத்தவர் உள்ளே தன் வேலையை பார்க்கச் சென்றார்.
தன் இருசக்கர வாகனத்தை அந்த மிகப் பெரிய நாட்டியாலயத்தின் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.
சிறியவர்கள் முதல் குமரிகள் வரை அத்தனை பேர் நாட்டியம் பயில் வந்திருக்க தன் எதிரில் வருபவர்களுக்கெல்லாம் அழகான புன்னகையை அளித்தவள் ஒப்பனை அறைக்குச் சென்று நாட்டிய உடைக்குமாறி வந்தாள்.அதன் பின்னான பொழுதுகள் எதை பற்றியும்சிந்திக்க விடாமல் நாட்டியத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது.
வேலைகளை முடித்த சிந்தாமணி வீட்டை பூட்டிவிட்டு பெசண்ட் நகரிலிருந்து ஷேர் ஆட்டோ பிடித்து அடையாருக்குச் சென்றார்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் இருந்த ப்ளாடின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தார்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
இரண்டு நிமிடத்தில் வந்து கதவை திறந்தவனை வாஞ்சையாய் பார்த்து அவர் புன்னகைக்க பதிலுக்கு சிரித்தவாறே உள்ளே சென்றான்.
“எப்படி இருக்க தம்பி?”
“எனக்கென்ன சூப்பரா இருக்கேன்..பாத்தா தெரிலையா?”என புருவமுயர்த்தி சிரித்தான் திவ்யாந்த்.அந்த ஏரியாவின் மிகச் சிறந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலின் முன்னனி மருத்துவர்.பால் நிறமும் திருத்தமான உடல் கட்டும் ப்ரெண்ஞ் பியர்டுமாய் மருத்துவருக்கே உரிய அம்சங்களோடு இருந்தான்.
“ம்ம் ரெண்டு பேரும் நல்லவங்க தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து பேசிப் போனா எவ்ளோ நல்லாயிருக்கும் ஏன் தான் இப்படி இருக்கீங்களோ?”,என மனதில் நினைத்தவர் கிட்சனிற்குச் செல்ல முயல,
“உடம்பு சரியில்லனு இப்போ அங்க எங்க போறீங்க உக்காருங்க நா காபி போட்றேன்..”