தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 06 - சகி
காலை முதலே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த இல்லம்.
"ஊருக்கு கிளம்பணும்னு சொன்னது தான் சரி! ஒரு வேலையாவது ஒழுங்கா நடக்குதா இந்த வீட்டில்?நேற்று தூங்குறதுக்கு முன்னாடியே எடுத்து வைத்தால் தான் எனக்கு உனக்கு?" காலையிலே தாயிடம் பாட்டு வாங்கினான் உடையான்.
"இதோ எடுத்து வைக்கிறேன்மா!"
"ம்...சீக்கிரம்!நான் போய் போன் பேசிட்டு வருவதற்குள்ளே எடுத்து வை!"தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு தனியே சென்றார் அவர்.
"ஒருவேளை கல்யாணத்துக்கு அப்பறம் இந்த வீட்டுக்கு வரப்போற மருமகள் பேச்சை கேட்டு, அம்மாவுக்கு நீ சின்ன குறை வைத்தாலும்,அவங்களை நான் என்கூட கூட்டிட்டுப் போயிடுவேன்!" தமையனின் சொற்கள் நிலைகுலைய வைக்க, தடுமாறி அமர்ந்துவிட்டான் உடையான். மனதில் ஒரு வித கலக்கம் உதயமானது!!
"தாயின் நலன்களை குறைத்து மட்டுமே சிந்திக்கும் புதல்வன் எங்கே?முதல் காதலை தாயிடமிருந்து மறைத்த நான் எங்கே?"மனதில் கலங்கினான் அவன்.
"என்னடா?உட்கார்ந்திருக்க?" தர்மாவின் குரலில் கலைந்தான் அவன்.
"ஆ...!இதோ எடுத்து வைக்கிறேன்மா!"
"என்ன முகம் வாடி இருக்கு?உடம்பு சரியில்லையா என்ன?"அவன் நெற்றியைத் தொட்டு பார்த்தார்.சற்றே தகித்தது.அச்சத்தால் உருவான காய்ச்சல் அல்லவா!!
"ஆதி!கொஞ்சம் இங்கே வாடா!" மூத்தவனை அழைத்ததும், மௌனியாக அங்கு வந்தான் கரிகாலன்.
"சின்னவனுக்கு உடம்புக்கு என்னன்னு பாரு! நடுராத்திரி வரைக்கும் பேய் மாதிரி ஊர் சுற்றினால் இப்படிதான்!"அவன் உடையானின் உடல்நிலையை பரிசோதித்தான்.
"மா! நாம ஊருக்கு போக வேணாம்மா!" கூறியது யாருமல்ல உடையான் தான்!!ஆதித்யாவின் கூர்மையான விழிகள் அவனை ஊடுறுவின.
"என்ன நக்கலா?நீ தானே ஊருக்கு போகலாம்னு பறந்த?இப்போ வேணாம்னு சொல்ற?எதாவது பிரச்சனையா?"
"ம்...என்னால நடக்க கூட முடியலை! உடம்பெல்லாம் வலி!"
"அதெல்லாம் இல்லைம்மா! இவன் நல்லா தான் இருக்கான்." அதீத குழப்பத்திற்கு தள்ளப்பட்டது தர்மா தான்!
"நீங்க போங்க!இவன் வருவான்!" விழியசைவால் நம்பிக்கை அளித்தான் ஆதித்யா. தாயின் பிம்பம் மறைந்த பின்பு, இளவலை கூர்மையாக பார்த்தான் அவன்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
"எனக்கு அம்மா தான் முக்கியம்! அவங்க இல்லாம என்னால முடியாது. நீங்க சொல்றது சரிதான், கங்கா என்னை நம்பி வந்தப்பிறகு எதாவது அம்மாவை காயப்படுத்துவது மாதிரி நடந்துக்கிட்டா, எல்லாம் கை மீறிவிடும்! அவ எப்படின்னு கூட எனக்கு தெரியாது. போகட்டும்ணா கொஞ்ச நாளில் எல்லாத்தையும் மறந்துவிடுவேன்." அவன் முகம் வாடி இப்போது தான் முதன்முறையாக காண்கிறான் பெரியவன்.சிறு வயது முதல் எவ்வளவோ துன்பம் எய்தியும் கவலை கொள்ளாத மனம், ஒரு கன்னிகையின் இழப்பிற்காக கலக்கம் கொள்கிறது என்றால் இவன் காதல் நிழல் அல்ல என்று தெளிந்தான் அவன்.
"கங்கா எப்படின்னு தெரியாதுன்னு சொல்ற, அதை தெரிந்துக்க இராஜசிம்மபுரம் போகலாம். யார் கூடவும் பழகி பார்க்காம அவங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்ல முடியாது!!" அதே புன்னகையுடன் கூறினான்.
"அண்ணா?"
"நேரமாகுது!அம்மா காத்திருக்காங்க,ரொம்ப காலமா!"என்றான் அழுத்தமாக.
"சரிண்ணா!நான் வரேன்!"
"ம்...கீழே இருக்கேன் வா!" தன் கடமையை ஆற்றி புறப்பட்டான் ஆதித்யா. ஆதித்யா தாயிடம் வருகையில் அவரது முகத்தில் கொள்ளை ஆனந்தம் தொனித்தது.யாருடனோ கைப்பேசியில் உரையாடிவிட்டு முகம் முழுதும் மகிழ்ச்சி பூக்க காத்திருந்தார் அவர்.
"என்னம்மா?"
"என்னாச்சுடா?"
"ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?" புதல்வனின் முகத்திலும் பரவசம் தாயின் ஆனந்தத்தைப் பார்த்து!
"ம்...சொல்றேன்!அவன் எங்கே?"
"வரான்மா!"-என்றப்படி தனது உடைமைகளை ஒருமுறை சரிப்பார்த்தான் ஆதித்யா.
"ஆதி!"தாயின் அழைப்பை உணர்ந்தவன்,அவர் மேல் கவனம் பதித்தான்.
"என்னம்மா?"
"இராஜசிம்மபுரத்துல உனக்காக ஒரு பரிசு காத்திருக்கு!"
"என்ன?"
"ம்..!பொறுமையா இரு! அதுக்குள்ள என்ன அவசரம்?"என்றார் அவனது கன்னத்தை வருடியப்படி!!
"சரிம்மா!" புன்னகை பூத்தான் மூத்தவன்.