"அப்பாடா ஒருவழியா வந்துட்டான்டா!வாடா சின்னவனே, அம்மா பேச்சை கேட்க மாட்ட, அண்ணன் சொன்ன உடனே கிளம்பி வர?"
"அது...டிரஸ் எல்லாம் எடுத்து வைக்க சோம்பேறித் தனமா இருந்தது.அதான் வரலைன்னு சொன்னேன்.அண்ணன் விடலைம்மா!" சமாளித்தான் அவன்.
"பார்த்தியா!இவனை வைத்துக்கொண்டு இத்தனை வருஷமா எப்படி சமாளித்தேன்னு யோசித்துப் பாரு!"பெருமூச்சுவிட்டார் தர்மா.
"கொஞ்சம் கஷ்டம்தான்!"
"இன்னும் இவனை கட்டிக்கப் போறவள் என்ன கஷ்டப்பட போறாளோ!"சோதரர் இருவரும் ஒருவரை மற்றொருவர் பார்த்துக் கொண்டனர்.
"சரி கிளம்புங்க!"தாயின் ஆணையை ஏற்றவர்கள் தங்களின் பயணத்தைத் தொடங்க ஆயத்தமாகினர்,தங்களின் கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தை நோக்கி!
"நான் காரை எடுக்கிறேன்ணா! நீங்க வாங்க!" என்று முன்னேறினான் உடையான்.
"மா!ஒரு நிமிடம்!" தாயை தடுத்தான் இளையவன்.
"என்ன கண்ணா?"
"மறுபடியும் ஊருக்குப் போறோம்! மறந்துக் கூட அவங்க யாரையும் பார்க்க கூடாதுன்னு ஆசைப்படுறேன்." வெளிப்படையாகவே கூறிவிட்டான், எவருடனும் முறிந்த உறவை புதுப்பிக்க ஆணை இடாதீர்கள் என்று!!தர்மா எந்தப் பதிலும் அளிக்கவில்லை.மௌனம் காத்தார்! அதன் பொருள் யாதென்பதை அவர் ஒருவர் மட்டுமே அறிந்திருக்கக் கூடும்.
அன்றிரவு...
"டிரஸ் எல்லாம் எடுத்து வைத்தாகிவிட்டதா?" மகளிடம் சற்றே கடுமையாக கேட்டார் சத்யா.
"எடுத்து வைத்துவிட்டேன்மா!" அவள் முகத்தில் எந்த உணர்வுமில்லை.
"ரொம்ப வருடம் கழித்து ஊருக்குப் போற, பார்த்து இரு! இன்னும் கொஞ்ச நாட்களில் அங்கே திருவிழா வேற ஆரம்பிக்கப் போகுது!உன் தங்கச்சியை வர சொன்னா,அந்த மகாராணி வர முடியாதுன்னு ஆஸ்த்ரேலியா கிளம்பி போயிட்டாங்க! நான் கொஞ்ச நாட்களில் வந்துவிடுவேன். ரொம்ப வருடம் கழித்து ஊர்த் திருவிழாவை பார்க்க போறேன்!" நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
"அங்கே பாட்டி வீட்டில் தானே தங்கணும்?"
"இல்லை..!"என்ற பதிலில் குழம்பிப் போனாள் அவள்.
"உங்க தாத்தாவும் உயிரோட இல்லை, பாட்டியும் இல்லை அங்கே போய் என்னப் பண்ணுவ?அது ரொம்ப பெரிய வீடு நீ தனியா எல்லாம் இருக்க மாட்ட!"
"அப்போ எங்கே?"
"கூட கூட பேசாதே! டிரைவர்கிட்ட எல்லா விவரத்தையும் சொல்லிட்டேன்.அவன் பார்த்துப்பான்!"
"டிரைவர்கிட்ட சொல்றது என்கிட்ட சொல்ல கூடாதா?"மனம் வலித்தது அவளுக்கு!
"சரிம்மா!"
"விடிந்ததும் கிளம்பணும்! அப்போ தான் இருட்டுவதற்குள்ளே போக முடியும்!"
"சரிம்மா!" புதல்விக்கு அறிவுரை வழங்கிவிட்டு நகர்ந்தவர் திடீரென நின்றார்.
"இது என்ன இந்த பெயிண்டிங்கை எடுத்து வைத்திருக்க?"அவளது மனம் கவர்ந்தவனது ஓவியத்தைச் சுட்டினார் தாயார்.
"மா!அதுவந்து...!"
"இது ஆக்ஷூவலா யாருடைய பெயிண்ட்டிங்?யாரிது?"அவள் பதில் கூறவில்லை.எவ்வாறு கூறுவாள்? ஓவியத்தில் இருப்பவனை சொப்பனத்தில் சந்தித்த கதையை?அது அவளது தாயார் அவ்வளவு தான், பிரளய தாண்டவம் ஆடிவிடுவார்!!
"நான் இனிமே இதை இங்கே பார்க்கக் கூடாது! தேவையில்லாத எண்ணங்களை வளர்த்துக்காதே! நீ இன்னொரு வீட்டுக்குப் போற வரைக்கும் உன் விதி நான் சொல்றதுக்கு நீ அடங்கி தான் ஆகணும்! போற இடத்துல எப்படி வேணும்னாலும் இருந்துக்கோ!ஸ்வேதா தான் என் பேச்சை மதிக்கிறதில்லை.நீயும் அப்படி இருக்காதே!இது இனி இங்கே இருக்க கூடாது!புரியுதா?"அவள் கண்கள் அந்நொடியே கலங்கிவிட்டன.
கண்ணீர் வடித்தாலும் துன்பத்திற்கு வழி வகுத்ததாய் மாறிவிடும்.
"சீக்கிரம் தூங்கு! காலையில கிளம்பணும்!"
"ம்..!" கதவை படாரென அறைத்து சாத்தி வெளியேறினார் சத்யா.அதிலிருந்து உண்டான சப்தம், அவள் உடலை ஒரு நொடி உலுக்கி எடுத்தது.
அவள் எந்த ஒரு தவறும் இழைக்கவே இல்லை.ஆயினும், குற்றவுணர்வில் தவித்தாள். அவர் பேசிய வார்த்தைகள் அப்படி!!என்ன செய்வாள் அந்தப் பேதை பெண்!தனது மனம் கொண்ட ஓவியத்தை கரத்தில் எடுத்தாள். கண்ணீர் பெருக்கெடுத்தது.விழியற்ற அந்த ஓவியத்தை முழுமையாக்காமல் அழிப்பதா?மனம் வலித்தது.தன் கரம் கொண்டு இருதயத்தில் வலியுடன் அந்த ஓவியத்தை வருடினாள்.
"ஐ ஆம் ஸாரி!" தன் நெஞ்சோடு அதனை இறுதியாக அணைத்துக் கொண்டாள்.ஆம்..! இனி அதற்கு எந்த வேலையும் இருக்கப் போவதில்லை.