தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 14 - சகி
காலம் கடக்கும் வேளை அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும். மிக பெரிய மாறுதல்கள் உண்டாக நல்லோர்கள் வருந்துவதும், தீயோர்கள் சுகிப்பதும் வரலாற்றின் மிக முக்கிய திருப்புமுனைகளாகும்.
"என் மகளுக்கு கல்யாணம் வைத்திருக்கேன்மா! நீங்க கண்டிப்பா வரணும்." பார்வதியிடம் பத்திரிக்கையை வழங்கினார் ஒருவர்.
"கண்டிப்பா! தர்மா..."பத்திரிக்கை வாங்கி வைத்துவிட்டு புதல்வியை அழைத்தார் அவர்.
"மா!"
"பீரோவுல இருந்து பணம் எடுத்துட்டு வா!"
"சரிங்க மா!" தாயின் ஆணையை ஏற்று விரைந்தார் அவர்.
"காதலித்து கல்யாணம் பண்ணிக்கலை தானே?"
"ஐயயோ! இல்லைம்மா, உங்களைப் பற்றி தான் தெரியுமேம்மா! இது சின்ன வயசுலயே முடிவு பண்ண கல்யாணம், என்னுடைய தங்கச்சி மவனுக்கு தான் தரேன்."
"பையன் என்ன பண்றான்?"
"பையன் டவுனுல வேலை பாக்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான்."
"கை நிறைய சம்பாதிக்கிறது முக்கியமில்லை.மனசு நிறைய வாழணும் அதான் முக்கியம்!" என்று புதல்வி கொணர்ந்த பணத்தை அவரிடம் நீட்டினார்.
"இதில் லட்ச ரூபா இருக்கு! நல்லப்படியா கல்யாணம் பண்ணுங்க!"
"நல்லா இருக்கணும்மா நீங்க!" வாழ்த்தி வணங்கினார் அவர். ஊரில் எந்த விசேஷம் என்றாலும் அதி் பார்வதியின் பங்களிப்பு இருந்துவிடும்.அனைவருக்கும் பிரதிபலன் காணாமல் உதவும் குணமுடையவர் அவர். அதனால், அனைவருக்கும் யாவரிலும் பிரதானம் அவராகவே திகழ்ந்தார்.
"தர்மா!"
"மா?"
"கழனிக்கு போய் வேலை ஒழுங்கா நடக்குதான்னு பாரு! நான் கோவிலுக்குப் போகணும்!" ஆணை பிறப்பித்தார்.
"சரிங்கம்மா!" தாயிடம் விடைப் பெற்று வயலுக்கு விரைந்தாள் தர்மா.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
முழுதாக 15 நிமிடங்கள் எடுக்கும் இல்லத்திலிருந்து வயலுக்கு செல்ல!
செல்லும் வழி எல்லாம் புள்ளிமானாய் துள்ளி ஓடுவாள் அவள். அன்றும் அதுபோல மகிழ்ந்திருந்தவரை உலுக்கியது மீண்டும் அதே குரல்.
"ஏங்க!"- குரலை கேட்ட மாத்திரத்திலே ஊகித்துக் கொண்டார் அவர்.
"இப்போ என்ன வேணும்?"
"தலைவலி சரியா போயிடுச்சு! அதான் தேங்க்ஸ் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்."
"அதான் அன்னிக்கே சொல்லிட்டீங்களே கிளம்புங்க!" வெறுப்புடனே பேசினாள் அவள்.
"என்னங்க ஆசையா உங்கக்கிட்ட தேங்க்ஸ் சொல்ல வந்தா இப்படி வெறுப்பை கொட்றீங்க? போங்க..!" வாடியது அவரது முகம்.அவர் முக வாட்டத்தை கண்டவளுக்கு ஏதோ தவறிழைத்தோமோ என்றானது.
"சரி...உங்க நன்றியை நான் ஏற்றுக்கிட்டேன். இப்போ கிளம்புங்க! எங்க அம்மா கோவிலுக்கு இந்த வழியா தான் வருவாங்க. உங்களைப் பார்த்தா தேவையில்லாம பிரச்சனை வரும்.!" எச்சரித்தாள்.
"வரட்டும்! நான் ஒண்ணும் தப்பு பண்ணலையே! அதான் அன்னிக்கு அவமானப்படுத்திட்டாங்களே!" கலை இழந்தது அவர் முகம். அவர் அந்த நிகழ்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை படம்பிடித்துக் காட்டியது அவர் முகம்.
"எங்க அம்மா கொஞ்சம் கோபக்காரங்க, ஆனா, எதையும் மனசுல வைத்துக்க மாட்டாங்க! அவங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்." கரம் குவித்தாள் அவள். மனதில் ஏதோ ஒரு நெருடல், அவள் விழிகளில் பொய் இருப்பதாக தோன்றவில்லை சூரிய நாராயணனுக்கு!!
"நான் வரேன்." என்று திரும்பியவள் விழிகளில் தென்பட்டார் பார்வதி.
"ஐயோ அம்மா!" ஒருவித பதற்ற நிலை உண்டானது.
"உங்களை இங்கே பார்த்தா தேவையில்லாத பிரச்சனை வருமே!" சிந்திக்காமல் அவர் கரத்தைப் பற்றி அருகிலிருந்த மாந்தோப்புக்குள் ஔிந்தார்.
"ஏங்க...இப்போ எதுக்கு பயப்படுறீங்க? நீங்க கிளம்புங்க! எனக்கும் நேரமாயிடுச்சு, நான் வரேன்!" என்று நகர்ந்தவரை தடுத்தார் அவர்.
"கொஞ்சம் இருங்க அம்மா போயிடட்டும்."
"அதெல்லாம்..."
"உஷ்...!" சட்டென அவர் வாயைப் பொத்தினாள் தர்மா. பார்வதி அவ்விடத்தை கடக்க ஒரு ஐந்து நிமிடம் பிடித்தது. தாயின் உருவம் மறைந்தப் பின்பே நிம்மதி பெருமூச்சு அடைந்து சூழ்நிலை உணர்ந்தார் அவர்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் மிக நெருங்கிய சூழலில் நின்றிருக்க, சூரிய நாராயணனின் அதிர்ச்சி நிறைந்த கூர்ந்தப் பார்வை அவரைத் துளைத்துக் கொண்டிருந்தது. ஏதும் புரியாமல் சிலையென நின்றிருந்தனர் இருவரும். சில நொடிகள் கடந்தப்பின்னர், தன்னை அறியாமல் மெல்ல உயர்ந்து தர்மாவின் இடையை சுற்றி வளைத்தது அவரது கரம்.