தொடர்கதை - காதலான நேசமோ - 24 - தேவி
ஷ்யாம் இரவில் தாமதாமாக உறங்கியதால் காலையில் தாமதாமாக எழுந்தான். திருமணம் ஆன நாள் முதல் இன்று வரை ஷ்யாம் தான் முதலில் எழுந்து இருப்பான். அவன் எழுந்தவுடன் தன் காலை ஜாகிங்கிற்கும் சென்று விடுவான். அவன் திரும்புவதற்குள் மித்ரா முழித்து இருப்பாள்.
இன்றைக்குத்தான் மித்ரா முதலில் விழித்தது. எழுந்தவுடன் அவள் பார்த்தது தன் அருகில் உறங்கிக் கொண்டு இருந்த ஷ்யாமின் முகமே. அந்த முகத்தில் தெரிந்த மென்மை அவளை ஈர்த்தது. அதில் தெரிந்த ஒருவிதமான குழந்தைத்தனம் பார்க்க அழகாக இருந்தது.
அவள் பிறந்தது முதல் பார்த்துப் பழகிய முகம் தான். ஆனால் இத்தனை அருகில் பார்த்தது இல்லை. அதிலும் இப்படி உறங்கும்போது பார்த்தது இல்லை.
சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் கைகள் அவள் அறியாமல் அவன் சிகையில் படர்ந்தது.
அந்த இதத்தில் ஷ்யாம் அசைய, மித்ரா தன் கையை விலக்கி ரெப்ரெஷ் செய்ய சென்றாள்.
அவள் வெளியில் வரும்போதும் அவன் விழித்து இருக்கவில்லை என்பதால், வழக்கம் போல் தன் வின்னிக்கு குட் மார்னிங் சொல்ல சென்றாள். அதனிடத்தில் சென்று கைகளில் எடுத்தவள்
“குட் மார்னிங் வின்னி.” என்றவள் அப்போது தான் நினைவு வந்தவளாக,
“ஹேய்.. அத்தானுக்கு இன்னிக்கு பனிஷ்மென்ட் இருக்கு இல்லை. இரு இதோ வரேன்” என்றவள் சென்று அவனின் வாட்ச் எடுத்து அவள் வின்னியின் பின்புறம் இருக்கும் ஜிப்பை திறந்து அதற்குள் வைத்து விட்டு, வின்னியைப் பார்த்து ப்ரியா வாரியர் போல் கண்ணடித்து சென்றுவிட்டாள்.
கீழே சென்றபோது மைதிலி ஷ்யாம் பற்றி விசாரிக்க,
“நைட் அத்தான் வேலை பார்த்துட்டு இருந்தாங்க அத்தை. இன்னும் எழுந்துக்கலை” என்று கூறவே, சரி என்று விட்டாள்.
ராம் மட்டும் ஜாகிங் செய்து விட்டு திரும்பியவுடன் எல்லோரும் காபி குடித்து முடித்தனர். அதுவரையிலும் அவன் கீழே வரவில்லை எனவும் மைதிலி,
“மித்ரா, இந்த காபி எடுத்துட்டு போ. அவனை எழுப்பிக் குடு” என்று கூறினார்.
அதற்குள் சுமி “இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கஷ்டப்பட்டு கண்ணு முழிச்சு படிச்சுட்டு , காலையில் லேட்டா எழுந்த எனக்கு என்னிக்காவது இப்படி காபி குடுத்து இருக்கீங்களா? இன்னைக்கு உங்க பிள்ளைக்கு மட்டும் இப்படி செய்யலாமா? இது தகுமோ? இது முறையோ? இது தர்மம் தானோ? “
என்று பாட்டாகப் பாடினாள்.
ராமின் குடும்பத்திற்கு தொழில் ஒரு கண் என்றால், இசை மறு கண். குடும்ப ஒற்றுமை தான் சுவாசம். அதனால் சுமித்ராவும் சாஸ்திர இசை கற்றுக் கொண்டு இருப்பதால், அந்த வரிகளை பாட்டாகவே பாடினாள்.
அதைக் கேட்டு சிரித்தபடியே சென்றாள் மித்ரா.
தங்கள் அறைக்கு சென்று பார்க்கும் போது, ஷ்யாம் எழுந்து பாத்ரூமில் இருப்பது தெரிந்தது. அவனுக்காகக் காத்து இருந்தாள்.
அவன் வரும்போது காபி வாசனையில், மித்ராவின் முகத்தைப் பார்க்காமல்,
“தேங்க்ஸ் மிது. ரொம்ப லேட் ஆயிடுச்சு. இனி கீழே போகனுமானு யோசிச்சுட்டு இருந்தேன். இங்கியே கொண்டு வந்ததற்கு ரொம்ப தேங்க்ஸ்.”
“அத்தை தான் எடுத்துட்டு போக சொன்னாங்க அத்தான்.” என்றவள்,
“நைட் சரியா தூங்கலையா?
“லேட்டாதான் தூங்கினேன். ஆனால் நல்ல தூக்கம். தூக்கத்திலே நல்ல நல்ல கனவு வேறேயா. சோ அத இன்னும் கொஞ்ச நேரம் கன்டினியு பண்ணிட்டேன்”
“ஹ.. என்ன கனவு?
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“ஹ்ம்ம்.. –“ என்று யோசித்தவன், “கனவு வெளியில் சொன்னா பலிக்காதாமே.. கனவு பலிக்கிற அன்னிக்கு நான் உன்கிட்ட சொல்றேன்” என்று அவள் தலையில் முட்டிக் கூறவும், அவனுக்கு அழகு காட்டினாள்.
அவளின் செயலில் சிரித்தவன், மணியைப் பார்த்துவிட்டு
“ஐயோ.. நான் சீக்கிரம் கிளம்பனும். ஏற்கனவே லேட். “ என்றபடி குளிக்கச் சென்றான்.
அவனின் அவசரம் பார்த்தவள், அவன் டிரஸ் லேப்டாப் பேக், அதன் அருகில் இருந்த பைல் எல்லாம் அடுக்கி ஒரே இடத்தில் வைத்தாள். அதே போல் அவன் பர்ஸ் , பெல்ட் எல்லாமும் எடுத்து வைத்தாள்.
அவன் வெளியில் வரும்போது எல்லாம் தயாராக இருப்பதைப் பார்த்தவன்
“வாவ்.. சூப்பர் டார்லிங்” என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் செய்ததை அவள் உணரும் முன்னரே சென்று இருக்க, ஒருமுறை தலையை உலுக்கி கொண்டவள், சட்டென்று குளியல் அறையில் புகுந்து விட்டாள்.
அவள் குளித்துக் கொண்டு இருக்கும்போது,
“மித்ரா, வாட்ச் எடுத்து வைக்கலையா? “ என்று கேட்டான்.
“நான் அதைப் பார்க்கலை” என்று மட்டும் கூறிவிட்டு உள்ளேயே இருந்தாள்.
அதை தேடிப் பார்த்த ஷ்யாம் . எங்கும் கிடைக்காமல் போகவே, மீண்டும் மித்ராவிடம் கேட்க, அவள் அதே பதிலையே சொன்னாள்.