“ஹலோ சுஜனா எப்படியிருக்கீங்க?” என்று அவளை விசாரிக்கவும், அவளுக்கு பாலாவை அடையாளம் தெரியாததால், புரியாத பார்வை பார்த்தாள். அஜயும் கூட சுஜனாவை பாலாவிற்கு தெரியுமா என்பது போல் பார்த்தான்.
“என்ன என்னை அடையாளம் தெரியலையா? உங்க ப்ரண்ட் ரூபினியோட ஹஸ்பண்ட்.. ஒருமுறை நாம மீட் பண்ணியிருக்கோம்” என்று பாலா சொன்னதும், நினைவு வந்தவளாக,
“ஓ சாரி.. எனக்கு உடனே ஞாபகத்துகு வரல.. நான் நல்லா இருக்கேன்.. ம்ம் ரூபி எப்படி இருக்கா?”
“நல்லா இருக்கா.. ஆமா நீங்க எங்க இங்க..” என்றுக் கேட்டவன்,
“அஜய் உனக்கு சுஜனாவை தெரியுமா?’ என்று அஜயை பார்த்து கேட்டான்.
“ம்ம் ஆமாம் ரெண்டுப்பேரும் காலேஜ் மெட்.. ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் பார்க்கிறேன்..” என்று அவன் சொல்லவும்,
“அப்படியா.. ரூபியும் சுஜனாவோட காலேஜ்மெட் தான், அப்போ உனக்கு என்னோட வைஃப் ரூபினியை தெரியுமா?” என்றுக் கேட்டான்.
“இல்ல Mr. பாலா.. நான் யூஜி படிச்ச காலேஜ்ல அஜய் பிஜி படிச்சாரு.. அப்புறம் நான் சென்னை வந்து பிஜி படிச்சேன்.. அங்க தான் ரூபி என்னோட ப்ரண்ட்..” என்று சுஜனாவே விளக்கம் கொடுத்தாள்.
“ஓ ரமணா படம் போலன்னு சொல்லுங்க..” என்று சிரித்தான். கூடவே மற்ற இருவரும் சிரித்தனர்.
“ஆ அஜய் உனக்கு இந்த விஷயம் தெரியுமா?” என்று பாலா கேட்கவும், என்ன என்று அஜய் பார்த்தான்.
“அஜய் சார்மிங் ஸ்டார் சாத்விக் தெரியுமில்ல, அவரை மேரேஜ் செஞ்சுக்க போற லக்கி கேர்ள் சுஜனா தான்..” என்றவன்,
அவளை பார்த்து, “வாழ்த்துக்கள்” என்றான். ஆனால் அந்த விஷயம் அஜய்க்கு எவ்வளவு வருத்தத்தையும் பாதிப்பையும் கொடுத்தது என்று பாலாவுக்கு மட்டுமல்ல, சுஜனாவுக்கு கூட தெரியாது.
“ஓ அப்படியா வாழ்த்துக்கள்.” என்று தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு அவன் கூறவும், அவள் லேசாக புன்னகைத்தாள்.
“ஆமாம் யாரை அழைச்சிட்டு போக வந்திருக்கீங்க சுஜனா..” என்று பாலா திரும்பவும் கேட்க,
“சாத்விக் தான் இப்போ பாரீஸ்ல இருந்து வர்றாரு..” என்று பதில் கூறினாள்.
அதற்குள் விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பு வரவும் மூவரும் அதில் கவனம் செலுத்தினர். அது சாத்விக் வரும் விமானம்.. சிறிது நேரத்திற்கெல்லாம் சாத்விக் வெளியே வந்தான். அதற்குள் அவனை கண்டுக் கொண்ட அவனது ரசிகர்கள் பல பேர் அவனை சூழ்ந்துக் கொண்டனர். சில ரசிகைகளும் அதில் அடக்கம்.. அவனை நேரில் கண்ட ஆர்ப்பரிப்போடு ஆளாளுக்கு அவனிடம் ஆட்டோகிராப் வாங்க, இங்கு மூவரும் அவனை வேடிக்கை பார்த்தப்படி நின்றிருந்தனர்.
ரசிகைகள் அவன் மேல் விழுந்தப்படி ஆட்டோகிராப் வாங்குவதை பார்த்து அவன் மேல் சுஜனாவிற்கு ஒன்று பொறாமை வந்திருக்க வேண்டும். இல்லை தன் வருங்கால கணவன் ஒரு செலப்ரிட்டி என்பதில் பெருமையாவது பட வேண்டும். ஆனால் எந்தவித ஒரு உணர்வுமில்லாமல் அவனை பார்த்தப்படி அவள் நின்றிருந்தாள்.
ரசிகர்களை விலக்கிவிட்டு அவன் வருவதற்குள் சிறிது நேரம் கடந்துப் போயிருந்தது. அவன் வருவதை பார்த்து சுஜனா ஒரு எதிர்பார்ப்போடு நிற்க, சுஜனாவை இதுவரை பார்க்காத காரணத்தால், அவளை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அதனால் அவன் அவளை கவனிக்கவேயில்லை. ஆனால் அங்கே அவளோடு நின்றிருந்த பாலமுருகனை அவனுக்கு நன்றாக தெரியும், மதுரிமாவோடு இணைந்து நடித்த போது சிலமுறை பாலாவை அவன் பார்த்திருப்பதால், அவனை அந்த இடத்தில் கவனித்த சாத்விக் அவர்கள் அருகில் வந்தான்.
“ஹாய் பாலா இங்க என்ன?’
“என்னோட ப்ரண்ட ரிஸீவ் செய்ய வந்தேன்.. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க புதுப்பட ஷூட்டிங்க்ல்லாம் எப்படி போச்சு..’
“ம்ம் எல்லாம் நல்லா போச்சு என்றவன், உடன் இருந்த இருவரையும் பார்த்து,
“இவங்கல்லாம்…” என்று இழுத்து தெரியாதது போல் கேட்க, அதில் சுஜனாவின் முகம் வாடிவிட்டது. சாத்விக் அவர்கள் அருகில் வந்ததிலிருந்து சுஜனாவையே கவனித்துக் கொண்டிருந்த அஜய்க்கு அவளின் முகமற்றம் நனறாகவே தெரிந்தது. அதுவுமில்லாமல் அவளை யாரென்று தெரியாதது போல் சாத்விக் கேட்டது மற்ற இரு ஆடவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.