தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 28 - சித்ரா. வெ
சுடரொளியின் டைரியை படித்ததிலிருந்து மகி சுடரிடம் பழகுவதில் மாற்றங்கள் இருந்தது. அவள் மீது மிகவும் அக்கறையாக நடந்துக் கொண்டான். ஆரம்பத்தில் மூன்று நாட்கள் அவளை அவன் தான் வேலைக்கு அழைத்துச் சென்றான். அவள் தனியாக செல்ல திணறக் கூடாது என்பதற்காக, அடிக்கடி அவளை வெளியே அழைத்துச் சென்று அவளுக்கு அந்த ஊரை பழக்கபடுத்தினான். அடிக்கடி தனது ரெஸ்ட்டாரண்டிற்கும் அவளை அழைத்துச் செல்வான். அவனை வாங்க போங்க என்று மரியாதையாக அழைத்தவள், இப்போதெல்லாம் அவனை வா போ என்று அழைக்க ஆரம்பித்திருந்தாள். அந்த அளவிற்கு அவர்கள் நட்பில் நல்ல முன்னேற்றம் இருந்தது.
மகியாவது அவளது டைரியை படித்ததினால் அவளைப் பற்றிய தவறான எண்ணங்களை மாற்றிக் கொண்டான். ஆனால் பாட்டி, கலையரசி, அருள்மொழி தவிர அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் அவளிடம் நன்றாகவே பழகினர். முன்பு போல் அவர்கள் வீட்டிற்கு சென்றால், தயக்கத்தோடு இருப்பது போல் இல்லாமல், இப்போதெல்லாம் அந்த வீட்டில் அவள் சுதந்திரமாகவே இருந்தாள்.
பாட்டியோ கலையோ ஏதாவது கூறினாள் கூட அதை மற்றவர்களுக்காக ஏற்றுக் கொள்ள பழகிக் கொண்டாள். பூங்கொடி தன் மகளிடமும் கலையரசி மகள்களிடம் எப்படி நடந்துக் கொள்வாரோ அப்படியே சுடரிடமும் பழகினார்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அவள் தமிழை பாடமாக எடுத்து படிக்கப் போகிறாள் என்று தெரிந்ததிலிருந்து புகழேந்தி அவளை புகழ்ந்து தள்ளிவிட்டார், மற்றவர்களிடமும் அவளைப் பற்றி பெருமையாகவே கூறினார். மலர்கொடி, மணிமொழி, அறிவழகன் மூவரும் கூட அவளிடம் நட்பு பாராட்டினர். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் அருள்மொழியிடம் மட்டும் அவளால் நட்புடன் நெருங்க முடியவில்லை. மகியும் அறிவும் எவ்வளவு எடுத்து சொல்லியும் அருள்மொழி அப்படியே தான் இருந்தாள். சுடரை பிடிக்காததற்கு காரணம் கேட்டாலும் சொல்லவில்லை. ஏதாவது காரணம் இருந்தால் தானே கூறுவாள். எந்த காரண காரியங்களும் அன்றி சுடரை அவளுக்கு பிடிக்காமல் போனது. அவளே இன்னும் கொஞ்ச நாளில் மாறிவிடுவாள் என்று மற்ற இருவரும் அமைதியாகிவிட்டனர்.
ஒருநாள் மகி சுடரொளியை தங்களது ரெஸ்ட்டாரண்டிற்கு அழைத்துச் சென்றபோது, அவனது குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர் அங்கே சாப்பிட வந்திருந்தார். அவர் இப்போது வேறு ஊரில் வசித்தாலும், எப்போதெல்லாம் சென்னைக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் வேலை முடிந்ததும் கொஞ்சம் தொலைவில் இருந்தாலும் இங்கு வந்து தான் சாப்பிட்டு செல்வார். காரணம் காசில்லாமல் சாப்பிடுவதே, எப்போதாவது ஒரு சமயம் என்றால் பரவாயில்லை. ஆனால் அடிக்கடி என்றால், அதனால் மகியும் அறிவும் கொஞ்சம் எரிச்சலானாலும், புகழேந்தி தான் அவருக்காக பொறுத்துக் கொள்ள சொல்வார். அதனால் அவர்களும் கண்டும் காணாமல் செல்ல பழகிக் கொண்டனர்.
மகியோ அறிவோ அந்த நேரம் அங்கே இருந்தால், அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டே செல்வார். பல சமயங்களில் அவர் பேச்சு அறுவையாக தான் இருக்கும், இருந்தும் வயதில் பெரியவர் என்பதால் இருவரும் பொறுத்துக் கொள்வர். அன்றும் மகி மட்டுமில்லாமல் அவனோடு ஒரு பெண்ணும் இருப்பதை சந்தேக பார்வையோடு பார்த்தவர்,
“மகி யாருப்பா இந்த பொண்ணு” என்று கேட்கவும்,
அவனோ “என்னோட அத்தை பொண்ணு..” என்றான்.
அப்படியும் அவர் விடவில்லை, “அத்தை பொண்ணா..” என்று சந்தேகத்தோடு இழுத்தவர்,
“கலையோட பொண்ணா.. மணியா, அருளா.. மணிக்கு கல்யாணம் ஆகிடுச்சுல்ல.. அப்போ அருளா.. ஆனா பார்த்தா அப்படி தெரியலையே..” என்றார்.
“இல்ல மாமா இது எழில் அத்தை பொண்ணு..” என்று அவன் பதில் கூற,
“எழில்க்கு ரெண்டுப்பேரும் ஆம்பிள பசங்க தானே..” என்று மீண்டும் அவர் சந்தேகத்தோடு இழுக்க,
“அத்தை பொண்ணுன்னா அதோட விட்றாரா பாரு.. நோண்டி புளி கரைச்சிக்கிட்டு இருக்காரு..” என்று மனதில் திட்டியப்படியே,
“அதான் மாமா கதிர் மாமா பொண்ணு..” என்று சொல்லவும் புரிந்தவராக, அதோடு அமைதியாக போகாமல்,
“ஓ அவரோட மூத்த சம்சாரத்தோட பொண்ணா.. அந்த பொண்ணு வெளிநாட்டுல தானே இருந்துச்சு.. இங்க எபோ வந்துது.. இப்போ உங்க அத்தை வீட்டிலா இருக்கு?” என்றுக் கேட்டார்.
“என்ன இவர் சுடர் முன்னாடியே இப்படி கேட்கிறார்..” என்று மனதிற்குள் புலம்பியவன், சுடர் இதை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று பார்க்க, அவளோ இந்த உலகத்திலேயே இல்லாதது போல் இருந்தது. அவள் தான் அவன் அத்தை பொண்ணு என்று சொன்னதிலேயே உறைந்து போயிருந்தாலே!!