இன்னும் சில நிமிடங்கள் நின்று அந்த பெரியவர் பேசிவிட்டு தான் சென்றார். இதில் தனியாக அவனை அழைத்து, “எழில்க்கு என்ன மூளை கெட்டுப் போச்சா.. எதுக்கு இந்த பெண்ணை கூட கூட்டிக்கிட்டு வந்து வச்சிருக்கா.. அதுக்கு நீங்களும் எதுவும் கேக்கலையா?” என்றவர்,
“அதான் கூட சேர்த்துக்கிட்டு சுத்தறதுலயே தெரியுதே.. நீங்க எங்க கேட்ருக்க போறீங்க. இது எங்க போய் முடியப் போகுதோ..” என்று புலம்பியப்படியே போய்விட்டார்.
அதன்பின் அவள் அருகில் வந்தவன், “சாரி சுடர்.. அவர் இப்படியெல்லாம் பேசுவார்னு நினைக்கல..” என்று மன்னிப்பு கேட்டான்.
“அப்படி என்ன பேசிட்டு போனார்?” என்று அவள் தெரியாதது போல் கேட்க,
“சுத்தம் அப்போ நான் நினைச்சது போல நீ இந்த உலகத்துல இல்லை போலயே.. அப்படி என்ன யோசிச்சிட்டு இருந்த?”
“எதுவும் யோசிக்கல நீங்க என்னை உங்க அத்தை பொண்ணுன்னு சொல்வீங்கன்னு நான் எதிர் பார்க்கல..”
“அப்படி தானே சொல்லணும், நமக்குள்ள இருக்க உறவு முறை அப்படித்தானே, ஆனா அப்பவும் அவர் விடவேயில்லை.. நோண்டி நோண்டி கேட்டுக்கிட்டு இருந்தார்..” என்று அவள் முழு விஷயத்தையும் விளக்க,
“ம்ம் பரவாயில்ல விடுங்க.. இப்படில்லாம் யாரும் பேசலன்னா தான் அது அதிசயமா இருக்கும்.. இதுக்குல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்..” என்றாள்.
“ம்ம் சூப்பர் இப்படி தான் இருக்கணும்..” என்று அவன் பாராட்டினான்.
ஒருப்பக்கம் இந்த ஊரும் எழிலின் பிறந்த வீட்டு குடும்பமும் அவளுக்கு பழகிவிட்டாலும், இன்னொரு பக்கம் அமுதனின் வருகையை அவள் மனம் ஆவலோடு எதிர்பார்த்தது.
அவன் வருவதாக சொல்லியிருந்த நாளில் அமுதனால் வர முடியாமல் போய் அப்படி இப்படியென்று இன்னும் சில நாட்கள் கழித்து தான் அவன் இந்தியா வந்து சேர்ந்தான். முன்பே அவளிடம் வேலைக்காக மட்டுமல்லாமல், அவளுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்குவதாக கூறியதால், அதற்கேற்றார் போல் அவன் அவளுக்கான நேரத்தை ஒதுக்கி தான் வந்திருந்தான்.
அவள் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அவள் அமுதனோடு தான் நேரத்தை செலவழித்தாள். வேலைக்கும் அவனே அவளை அழைத்துச் சென்றான். அந்த நாட்களில் மகியின் வீட்டுக்கு கூட அவள் செல்லவில்லை. மகியையும் வேறு இடங்களிலும் அவள் பார்க்கவில்லை.
முன்பே மகியிடம் அமுதன் வரப் போகும் விஷயத்தை கூறி, அவனோடு ஒரு வாரம் சேர்ந்து ஊர் சுற்றப் போவதாகவும், எந்தந்த இடங்களுக்கு செல்லப் போகிறோம் என்பதையும் சொல்லியிருந்தாள். அவனும் சரியென்று தான் சொல்லியிருந்தான். ஆனால் இரண்டு நாட்கள் அவளை பார்க்காமல் இருப்பதே அவனுக்கு என்னவோ போல் இருந்தது. இதில் பூங்கொடி, புகழேந்தி இருவரும் அவனிடமே ஏன் சுடர் வரவில்லை என்று கேட்டனர்.
அவர்களிடம் காரணத்தை கூறினாலும், “ப்ரண்ட் வந்துட்டா அதுக்கு எல்லோருமா மறந்துடுவாங்க.. நடுவுல இப்படி ஒருநாள் வந்துப் போனா என்ன?” என்று மனதிற்குள் புலம்பினான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை பத்து நாட்களுக்கு மேல் கூட பிரிந்திருக்கிறான்.. படிப்பு விஷயமகவோ இல்லை வேலை விஷயமாகவோ கூட பலமுறை குடும்பத்தை விட்டு பிரிந்திருகிறான். அப்போது கூட அவன் இப்படியெல்லாம் இருந்ததில்லை. ஆனால் சுடரொளியின் இந்த சாதாரண பிரிவு கூட அவனை ஏன் வேதனைப்படுத்துகிறது? அந்த ஆராய்ச்சியிலெல்லாம் அவன் இறங்கவில்லை. ஆனாலும் அவளையே எப்போதும் நினைத்துக் கொண்டு இருந்தான். இரண்டு முறை அத்தை வீட்டிற்கும் சென்று வந்தான். ஆனால் அவன் போகும் நேரத்தில் சுடர் வீட்டில் இல்லை. தெரிந்த விஷயம் தான், இருந்தாலும் நூற்றில் பத்து சதவீதம் அவள் வீட்டில் இருக்கமாட்டாளா என்ற எதிர்பார்ப்பில் தான் அவன் விட்டிற்கு சென்று பார்த்தது.
சுடரொளியை பார்க்காத இத்தனை நாட்களில் அவனிடம் இருந்த மாற்றத்தை அவனே உணரவில்லையென்றாலும், அவனுக்கு என்னவோ பிரச்சனை என்பதை அறிவழகன் உணர்ந்துக் கொண்டான்.
“என்னடா ஒருமாதிரி இருக்க” என்றுக் கேட்டதற்கு, அவர்கள் புதிதாக விலைக்கு வாங்க நினைக்கும் ஹோட்டலை அவர்களால் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாங்க முடியுமா? என்ற குழப்பம் தான் என்று மகி சமாளித்தான்.
“நீயே இப்படி பயப்பட்டா அப்புறம், நான் என்னடா செய்றது.. எல்லாம் நல்லா நடக்கும்னு நம்புவோம்” என்று அறிவும் தைரியம் கூறினான்.
சுடரை பார்க்காமல் மகி இப்படி இருக்க, அங்கு சுடரோ மகிழ்ச்சியுடன் அமுதனோடு பொழுதை கழித்தாள். நெடு நாட்கள் கழித்து அவளை பார்த்ததால் மட்டும் வந்த மகிழ்ச்சி இல்லை அது, ஏற்கனவே மனதில் நிறைந்திருந்த மகிழ்ச்சியும் ஒரு காரணம் தான், அதை அமுதனிடம் பகிர்ந்துக் கொள்ளும் ஆர்வத்தில் தான் அவனை அதிகமாக எதிர்பார்த்தாள்.
அவளை இப்படி பூரிப்போடு பார்த்ததில் அமுதனும் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ஆரம்பத்தில் இங்கு வந்த போது, அவளை யாருக்கும் பிடிக்கவில்லை என்று புலம்பியவள், இப்போதோ மகி மற்றும் அவன் வீட்டாரை பற்றியே அடிக்கடி பேசிக் கொண்டிருந்தாள்.
“அப்பாவை பார்க்க வந்தது கூட நல்லதுக்குதான் சார்லி.. இல்லன்னா இப்படி ஒரு பேமிலி எனக்கு கிடைச்சிருப்பாங்களா?
சண்டேன்னா பார்க்கணுமே எல்லோரும் எவ்வளவு ஜாலியா இருப்பாங்க தெரியுமா? ஒன்னா சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவாங்க.. இதுவரைக்கும் நான் விளையாடினதில்ல, ஆனா மகிழ் சொல்லியிருக்கான்.. அடுத்த முறை நானும் கண்டிப்பா விளையாடணும்னு, அவங்களை பார்த்து எனக்கும் கிரிக்கெட் விளையாட ஆசை வந்துருக்கு, எனக்கு அந்த குடும்பத்தோடவே எப்போதும் இருக்கணும் போல இருக்கு..” என்று குதூகலத்துடன் கூறினாள்.
அடிக்கடி அவள் வாயிலிருந்து மகிழ் என்ற பேரை தான் உச்சரித்தாள். அமுதனுக்கு கண்டிப்பாக அதை பார்த்து பொறாமை எழவில்லை. இங்கு அவளை தனியாக அனுப்பி வைத்துவிட்டு அவன்படும் வேதனை அவனுக்கு தான் தெரியும்,
அப்படியிருக்க முன்பு இருந்த சூழ்நிலை மாறி, இப்போது சுடர் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு அந்த மகிழ்வேந்தனும் ஒரு காரணம் என்பது அவனுக்கு புரிந்தது. மனதிற்குள்ளேயே மகிக்கு அவன் நன்றி சொல்லிக் கொண்டான்.
ஒருவாரம் சுடரோடு நன்றாக பொழுதை கழித்தவன், அடுத்து அலுவக வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். ஓய்வு நேரம் கிடைத்தால் சந்திப்பதாக சுடரிடம் கூறிவிட்டு அவன் முழு மூச்சாக அலுவலக வேலைகளில் இறங்கிவிட்டான்.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}