தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 29 - சித்ரா. வெ
அந்த பெரிய கட்டடத்தின் முன் நின்று அதை அண்ணாந்து பார்த்த அருள்மொழியும் இலக்கியாவும் மனதில் கொஞ்சம் திகிலோடு தான் அதன் உள்ளே நுழைந்தனர். அவர்கள் படிப்பு சம்பந்தமாக ஒரு மாதம் இண்டர்ன்ஷிப் செய்வதற்காக தான் அந்த நிறுவனத்திற்கு இருவரும் வந்திருந்தனர்.
அருள்மொழி முன்னரே தன் தோழிகளுடன் சேர்ந்து ஒரு தோழியின் தந்தை மூலமாக ஒரு பெரிய கம்பெனியில் இண்டர்ன்ஷிப் செய்வதற்காக ஏற்பாடு செய்திருந்தாள். ஆனால் அங்கே ஊரில் இலக்கியாவும் இண்டர்ன்ஷிப் செய்ய வேறு ஊருக்கு செல்ல வேண்டியிருக்க, அவளை அவ்வளவு தூரம் தனியாக அனுப்ப மாணிக்கம் யோசித்தார். அதன்பின் அருள்மொழியும் வீட்டில் உள்ளவர்களும் பேசி இலக்கியாவை இங்கு வரவழைத்து அருள்மொழியோடு சேர்ந்தே இண்டர்ன்ஷிப் செய்ய சொன்னார்கள். படிப்பு விஷயம் என்பதால் முதலில் தயங்கிய மாணிக்கமும் பிறகு அருள்மொழியுடன் சேர்ந்து செல்லப் போகிறாள் என்பதால் அதற்கு ஒத்துக் கொண்டார்.
தோழியின் தந்தை சொல்லிவைத்திருந்த நிறுவனத்தில் அருள்மொழியோடு சேர்த்து ஐந்து பேர் இண்டர்ன்ஷிப் செய்ய வேண்டும், ஆனால் ஆறாவதாக இலக்கியா மட்டுமல்லாமல், ஏழாவதாக இன்னொரு தோழியும் இவர்களோடு வர விருப்பப்படுவதால், ஏழு பேரும் அங்கே செல்ல முடியாது என்ற காரணத்தால் அந்த தோழி தன் தந்தையிடம் சொல்ல, அவர் இன்னொரு பெரிய நிறுவனத்திலும் பேசி இவர்கள் இண்டர்ன்ஷிப் செய்வதற்காக அனுமதி வாங்கினார்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
ஏற்கனவே செல்ல இருந்த நிறுவனத்தில் ஐந்து பேர் வருவதாக சொல்லி வைத்திருந்ததால், அதன்படி அங்கே முன்பு போக இருந்த ஐந்து பேர் செல்லலாம் எனவும், மற்ற இரண்டு பேர் புதிய நிறுவனத்திற்கு செல்லவும் தோழிகள் முடிவு செய்தனர். ஆனால் அருளும் இலக்கியாவும் உறவினர்கள் என்பதால் அவர்கள் ஒன்றாக இருக்க ஆசைப்பட்டதால், அந்த புதிய நிறுவனத்திற்கு இவர்கள் இருவரையும் செல்ல சொல்லி தோழிகள் சொன்ன போது, இருவர் மட்டும் தனியாகவா என்று ஆரம்பத்தில் இருவரும் தயங்கினர். வேறு யாராவது உடன் வருவார்களா என்று அருள் உடன் படிக்கும் இன்னும் சில மாணவிகளிடம் கேட்க, அவர்கள் முன்னமே அதற்கான ஏற்பாடுகள் செய்துவிட்டதால், யாரும் உடன்வர தயாரில்லை.
தந்தைக்கு தெரிந்த நிறுவனம் என்பதால் பாதுகாப்பான இடம் தான், தைரியமாக சென்று வாருங்கள் என்று அந்த தோழி கூறினாள். அவர்களுக்கு தனிப்பட்ட அளவில் எந்த பயமும் இல்லையென்றாலும், அருள்மொழியின் அன்னை கலையோ இல்லை இலக்கியாவின் தந்தை மாணிக்கமோ இப்படி இருவர் மட்டும் தனியாக செல்ல வேண்டுமென்றால், அனுப்ப யோசிப்பார்களோ என்ற காரணத்தால் தான் அவர்கள் முதலில் யோசித்தனர்.
அதேபோல் கலையும் மாணிக்கமும் முதலில் தயக்கம் காட்ட, “படிப்புக்காக என்றால் சென்று தான் ஆக வேண்டும், அங்கே பெண் ஊழியர்களும் வேலை செய்வார்கள் தானே, பிறகு என்ன பயம்?” என்று புகழேந்தி, மகி, அறிவு மூவரும் எடுத்து சொல்லி இருவருக்கும் புரிய வைத்தனர்.
பெற்றவர்களின் அனுமதியோடு இருவரும் இங்கு வந்து விட்டாலும், இவ்வளவு பெரிய நிறுவனத்தில் ஒரு மாதம் இண்டர்ன்ஷிப்க்காக என்றாலும், ஒரு படபடப்போடு காணப்பட்டனர்.
இருவரும் உள்ளே நுழைந்து அங்கே இண்டர்ன்ஷிப் செய்வதற்கான அனுமதி கடித்தத்தோடு யாரை பார்க்க வேண்டும் என்று விசாரித்து அவரிடம் அந்த அனுமதி கடிதத்தை காண்பித்தனர். அவர் அதைபார்த்துவிட்டு சிறிது நேரம் காத்திருக்க சொன்னவர், இன்னொருவரை அழைத்து விஷயத்தை சொல்ல, அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டனர். அருளும் இலக்கியாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர். அதற்குள் பேசிவிட்டு இவர்களை பார்த்தவர்,
“உங்களை ட்ரெயின் பண்ண போறவர் நேத்துல இருந்து மெடிக்கல் லீவ்ல போயிருக்காரும்மா.. அது தெரியாம உங்களை வரச் சொல்லிட்டோம், மத்த ஸ்டாஃப்ஸ்க்கும் நிறைய வேலை இருக்கு.. இப்போ என்ன செய்றதுன்னு தெரியலையே..” என்று அவர் விஷயத்தை சொல்லவும்,
இப்போது என்ன செய்வது, நம்மால் இண்டர்ன்ஷிப் செய்ய முடியுமா?’ என்று இருவரும் கவலைக் கொள்ள, அதற்குள் இவர்கள் இருவரோடு பேசிக் கொண்டிருந்தவரை இண்டர்காமில் யாரோ அழைக்க,
“கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்கம்மா.. இதோ வரேன்..” அவர் கூறிவிட்டு செல்லவும்,
“இப்போ என்ன செய்றது மச்சி..” என்று இலக்கியா கேட்க,
“இருடி பார்ப்போம் வெய்ட் பண்ண சொன்னாங்கல்ல..” என்று அருள் கூறினாள். பின் இருவரும் சிறிது நேரம் காத்திருக்க ஆரம்பித்தனர்.
சில நிமிடங்கள் கடந்திருக்க திரும்ப வந்தவர், புன்னகை முகமாய் திரும்பி வந்தார்.
“உங்களுக்கு லக் தான்ம்மா.. உங்களை பத்தி சொல்லி ஐடியா கேட்டப்போ, இன்னொருத்தர் உங்களை ட்ரெயின் பண்றேன்னு சொல்லியிருக்கார்.. நீங்க அவர்க்கிட்டேயே உங்க இண்டர்ன்ஷிப்ப முடிச்சிக்கலாம்..
உங்களை ட்ரெயின் பண்ண போறவர் சாதாரண ஆள் இல்லம்மா.. மிஸ்டர் சார்லஸ், லண்டன்ல இருந்து வந்திருக்கார். இந்த கம்பெனியோட மெயின் ப்ராஞ்ச் லண்டன்ல தான் இருக்கு.. முக்கியமான ப்ராஜக்ட் முடிக்கணும்னா தான் அவர் இந்தியா வருவாரு.. இந்த வேலையெல்லாம் பார்க்கணும்னு அவருக்கு அவசியமே இல்ல.. இருந்தாலும் உங்களை வரச் சொல்லிட்டதால, கண்ணன் மெடிக்கல் லீவ் முடிஞ்சு வர வரைக்கும் உங்களுக்கு ட்ரெயினிங் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்காரு..
அவரோட வொர்க் பண்ணீங்கன்னா, ஒரு மாசத்துல நீங்க நிறைய கத்துக்கலாம்.. படிப்பு முடிஞ்சு ஜாப் போனீங்கன்னாலும் உங்களுக்கு இந்த எக்பீரியன்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும்.. இதோ ரைட் திரும்பி உள்ள போனீங்கன்னா பர்ஸ்ட் கேபின் தான் அவரோடது, போய் பாருங்க..” என்று அனுப்பி வைத்தார்.