ஏற்கனவே குடும்ப பாசத்தை தொலைத்து தான் இங்கு தனியாய் வாடுகிறாள் இதில் மேலும் தன்னால் எந்த வருத்தமும் வந்துவிட கூடாதே என்று சற்றே தயங்கினான்.
தானாய் எதையும் கூறப் போவதில்லை எது நடக்குமோ அது நல்லதாய் நடக்கட்டும் என விட்டுவிட வேண்டும் என முடிவெடுத்தான்.நினைப்பதையெல்லாம் செய்ய முடிந்தால் நன்றாகத் தான் இருக்கும்.
அந்த நாளின் நினைவில் கரைந்தவள் அக்கம்பக்கம் உணராமல் அப்படியே அமர்ந்திருக்க மூன்று நான்கு ஆண்கள் அவளை விட்டுசற்றுதூரத்தில் அமர்ந்து அவளைப் பார்த்து பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.தற்செயலாய் தன்னை சுற்றிப் பார்த்தவளுக்கு அவர்களின் முகபாவமே தன்னை பற்றி நல்ல பேச்சும் பார்வையும் அவர்களிடத்தில் இல்லை என்பதை உணர்ந்தவள் இயல்பாய்தன் கைப் பையை எடுத்து நடக்க ஆரம்பித்தாள்.
ஆள் நடமாட்டம் குறைவாய் இருக்க அவர்களும் இவளை பின் தொடர அப்போது தான் வண்டியை நிறுத்தியிருந்த இடத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டிருந்த தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்துகொண்டாள்.
இருப்பினும் பயத்தை மறைக்க நினைத்தவளுக்கு கை அதுவாய் தன் அலைப்பேசியை எடுத்து மறுயோசனையின்றி திவ்யாந்தை அழைத்தாள்.
தன் வீட்டிலிருந்து காரை கிளப்பி வெளியே செல்ல தயாரானவன் அலைப்பேசி அழைப்பில் அதை எடுத்துப் பார்த்தவனின் கண்கள் அடுத்த நொடி அவளுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்துவிட்டிருந்தான்.
“கண்ணம்மா எங்கயிருக்க என்னாச்சு?”
அத்தனை பதட்டத்திலும் அவனின் அந்த காதலும் அக்கறையும் கண்ணை நிறைத்தது.
“கண்ணம்மா லைன்ல இருக்கியா?”
“திவா பீச்க்கு வந்தேன்.இங்கே மூணு பேரு..சமாளிச்சுருவேன் இருந்தாலும் பயமா இருக்கு..அதான்..”
“சரி டென்ஷன் ஆகாம நடந்துட்டே இரு.நா வீட்ல இருந்து கிளம்பிட்டேன் 5 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்..ரிலாக்ஸ் டா..நா லைன்லயே தான் இருக்கேன்.கவலபடாத..”
அவன் வருவதாய் கூறியதே ஏதோ அவன் தன் கூடவே இருப்பதாய் ஒரு தைரியத்தை கொடுக்க அப்படியே நடையில் வேகத்தை கூட்டினாள்.
ஓட்டமும் நடையுமாய் அவள் செல்வதை உணர்ந்தவர்கள் அடுத்த இரண்டே எட்டில் அவளை நெருங்கியிருக்க ஒருநொடி அதிர்ந்து போனவள் சட்டென தன் பைக்குள் வைத்திருந்த அந்தபாட்டிலை எடுக்க,
“என்ன ஆசிட் பாட்டிலா பெரிய ஆளு தான் கையிலேயே பல விஷயம் இருக்கும் போலயே”,என ஒருவன் கேவலமாய் சிரிக்க மற்றவர்கள் கூட சேர்ந்து சிரித்தனர்.
“உன் மூஞ்சிக்கு ஆசிட் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி”,என்றவாறு பெப்பர் ஸ்ப்ரேயை அவர்கள் முகத்தில்அடிக்க அவள் கையை விடுவித்துவிட்டு அவர்கள் ஆளுக்கொருபுறம் அலற வேகமாய் அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள்.
சற்று தூரம் வந்து அவர்கள் வருகிறார்களா என உறுதிப்படுத்தியவாறு திரும்பிவள் யார் மீதோ மோதி நிற்க மீண்டுமாய் முகத்தருகில் பாட்டிலை அழுத்தப் போனவளை வேகமாய் தடுத்தவன்,
“கண்ணம்மா நா தான்..”
அடுத்த நொடி ஒரு வார்த்தை பேசாமல் அவனோடு அப்படியே தன்னை இறுக்கியிருந்தாள்.
“ரிலாக்ஸ் டா..”
“ரொம்ப பயந்துட்டேன் திவா..உன்னை தவிர யாருக்கும் கால் பண்ண தோணல.சிந்தாம்மா நீ ட்ரிப் போயிருக்குறதா சொன்னாங்களே?ஒரு வேளை நீ ஊர்ல இல்லாம போயிருந்தா..”
“அதான் அப்படி ஒண்ணும் நடக்கலயே டா..இன்னைக்கு எர்லி மார்னிங்தான் வந்தேன் சிந்தாம்மாக்கு நா கால் பண்ணல.அதான் அவங்களுக்கு தெரிஞ்சுருக்காது..சரி வா காருக்கு போலாம்..”
காரினுள் அமர்ந்தவளுக்கு அப்போதும் மனம் படபடக்க வியர்வை வழிய காரிலிருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்து குடிக்க வைத்தவன் மெதுவாய் வியர்வையை ஒத்தி எடுத்தான்.
மீண்டுமாய் அவன் தோளில் தஞ்சமடைந்தவளின் கண்கலங்க அவன் கையை இறுக்கிக் கொண்டாள்.
“மிஸ் யூசோ மச் கண்ணம்மா நம்ம வீட்டுக்கு வந்துரு டா..நீ இல்லாத ஒவ்வொரு நாளும் நரகம் டா..”
“ஏன் திவா ஏன் இத்தனை காதலை எனக்கு கொடுக்குற..நா அதுக்கு தகுதயானவளா இல்லையே திவா..இப்போ வர நா உங்ககிட்ட வராம இருக்குறதுக்கு காரணமும் என் மேல இருக்குற குற்றவுணர்ச்சியால தான்.உனக்கான என் பழைய காதலை நானே அழிச்சுட்டேன் திவா..”
“கண்ணம்மா ஏன் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுற.மனுஷனா பிறந்த யாரும் தப்பு பண்றது சகஜம் தான்.தெரிஞ்சே எத்தனையோ பேர் தப்பு பண்றாங்க.நீ பண்ணது உன்னை அறியாம பண்ணிண தப்பு அப்படியிருக்க அதுக்காக ஏன் டா உன்னை நீயே போட்டு வருத்திக்குற.இப்பவும் நீ என் பழைய கண்ணம்மா தான்.போதும்டா எனக்கான தண்டனை என் கண்ணம்மாவா என்கிட்டேயே வந்துரு..”