தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ
“வாங்க வாங்க..” என்று வரவேற்ற விபாகரனின் அன்னை மஞ்சுளா அமைதியின் திருவுருவமாக இருந்தார். அவர் பின்னாலேயே ஆர்பரிப்புடன்,
“மதுரிமா ஆஆ.. வாவ் செம சர்ப்ரைஸ்..” என்றப்படியே வரவேற்றது அர்ச்சனா.. விபாகரனின் தங்கை,
அவளது அந்த ஆர்ப்பரப்பில் மதுரிமாவே கொஞ்சம் பயந்து போனாள். எப்போது தேவி இங்கு வர விருப்பமில்லை என்று தெரிவித்தலோ, அப்போதே மதுரிமாவும் வரவில்லையென்று பாலாவிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
“உன்னோட அண்ணன் முன்னாடியே அவங்கக்கிட்ட நாமல்லாம் வர்றதா சொல்லிட்டான் மதும்மா.. ஏற்கனவே தேவி வரலன்னு சொல்லிட்டா, இப்போ நீயும் வரலன்னா, அவங்க என்ன நினைப்பாங்க.. அதனால நீ மட்டுமாவது வாம்மா மது..” என்று கூறவும் தான், அவளும் வர சம்மதித்து இங்கு வந்தாள்.
அர்ச்சனாவுக்கும் மதுரிமா இங்கு வருவது தெரியாது, தெரிந்திருந்தால் இத்தனை இன்ப அதிர்ச்சியாக அவளுக்கு இருந்திருக்காது. பாலாவின் ஒன்றுவிட்ட தங்கை தான் மதுரிமா என்பது அவளுக்கு முன்பே தெரிந்தது தான், வியாபார விஷயமாக பாலா மும்பை போகும் போது, அங்கே விபாகரனின் அன்னையை பார்க்க வீட்டிற்கு செல்வான். அப்போது தன் குடும்பத்தை பற்றிய விவரங்களை சொல்லியிருக்கிறான்.
இருந்தும் இன்று பாலா தன் குடும்பத்தோடு வரப்போகும் விஷயத்தை விபா சொல்லும்போது கேட்டவளுக்கு, ஒன்றுவிட்ட தங்கையான மதுரிமா வருவாள் என்பது தெரியாது. ஒரு நடிகையாக மதுரிமா எப்போதும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருப்பாள், அவளுக்கு இதுபோன்ற சாதாரண விஷயங்களுக்காக எல்லாம் வரமுடியாது என்பது அவள் யூகம், அதனால் தான் இன்று மதுரிமாவை பார்த்ததும் அத்தனை மகிழ்ச்சி அவளிடத்தில்,
“மதுரிமா உங்கக் கூட ஒரு செல்ஃபி எடுக்கணும், அய்யோ இன்னைக்கு என்னோட பேஸ்புக் அக்கவுண்ட்ல லைக்ஸா குவியப் போகுது.. அப்புறம் உங்களோட ஆட்டோகிராஃப் கூட வேணும், ஒரு நிமிஷம் இருங்க இதோ வந்துட்றேன்..” என்றவள், இன்னும் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்ள நினைத்து தன் அறைக்குச் சென்றாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அர்ச்சனாவின் ஆர்ப்பாட்டத்தில் மஞ்சுளாவிற்கும், உடன் இருந்த அஜய்க்குமே என்ன இது என்று ஆகிவிட்டது. விருந்தினராய் வந்திருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பார்க்க, அனைவரும் அதை சாதாரணமாக தான் எடுத்துக் கொண்டனர். ஒரு நடிகையாக இதைவிட அதிகம் பார்த்திருக்கும் மதுரிமாவிற்கும் அதன்பின் அது பெரிய விஷயமாக தெரியவில்லை. அதை அமைதியாக எடுத்துக் கொண்டாள்.
“எல்லாம் ஏன் நிக்கிறீங்க.. உக்காருங்க..” என்று அஜய் தான் கூறினான்.
பாலா குடும்பத்தோடு வரவிருக்கும் விஷயத்தை மஞ்சுளா அவனிடம் சொல்லி வீட்டுக்கும் வர சொல்லியிருந்தார். அதனாலேயே இப்போது அவன் இங்கு வந்தான்.
“அம்மா இது தான் மஞ்சும்மா, விபாவோட அம்மா, அப்புறம் இது அஜய், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன் இல்ல” என்று பாலா இருவரையும் புவனாவிற்கு அறிமுகப்படுத்தினான்.
மஞ்சுளாவை பார்த்து ஒரு வணக்கம் வைத்தவர், அஜயை பார்த்து இவனை தான் தேவிக்கு வரனாக பாலா யோசித்து வைத்திருப்பதாக சொன்னது புவனாவிற்கு ஞாபகத்திற்கு வந்ததும் அவனை கொஞ்சம் ஆழந்து கவனித்தார்.
புவனாவை பார்த்து அஜயும் ஒரு புன்னகையை உதிர்த்தான். இவர்களின் நிறுவனத்திற்காக ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துக் கொடுத்த போது மதுரிமாவிற்கு அஜயை தெரியும், அதனால் அவனை பார்த்து ஒரு ஹாய் சொல்லியவள், பின் மஞ்சுளாவை பார்த்து வணக்கம் கூறினாள்.
அதேபோல் மஞ்சுளாவிடம் பாலா தன் குடும்பத்தைக் காட்டி ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினான்.
“உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம், முதல்ல உக்காருங்க..” என்ற மஞ்சுளா வேலையாட்கள் மூலமாய் அனைவருக்கும் பருக காபி கொடுத்தார்.
“அம்மா விபா எங்கம்மா..” என்று பாலா கேட்கவும்,
“இதோ இருக்கேன் டா” என்று சொல்லிக் கொண்டே விபாகரன் படிகளில் இருந்து இறங்கி வந்தான்.
விபாகரனை தான் மதுரிமாவிற்கு பார்த்திருப்பதாக பாலா சொல்லியிருந்ததால், அவனையும் கொஞ்சம் கவனத்தோடு புவனா உற்று நோக்கினார்.
மதுரிமாவும் முதன்முறையாக விபாகரனை நேரில் பார்ப்பதால், அவனது கம்பீரத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள். அதற்கேற்றார் போல்,
“வாவ் இதுதான் விபாகரனா? மேகஸின்ல பார்க்கறதை விட நேர்ல எவ்வளவு ஹாண்ட்ஸம்மா இருக்காருல்ல” என்று ரூபினியும் மதுரிமாவின் காதில் கிசுகிசுத்தாள்.