குட்டியான எட்டுக்களோடு இரு பாதங்கள் அவனை பின் தொடர்ந்தன. மல்லிகை மணமும். கொலுசொலி சப்தமும் தனக்குப் பின்னால் கேட்க,
‘ஆஹா வந்து விட்டாள் போலிருக்கிறது? என உற்சாகமாய் திரும்பினான். வழக்கமாய் வெஸ்டர்ன் ட்ரெஸ்களில் கலக்குபவள், அன்று காட்டன் சேலையில் மிகவும் பாந்தமாய் இருந்தாள்.
திவ்யா சுண்டி விட்டால் ரத்தம் வருகிறதொரு நிறம். ஐந்தேகாலடி உயரம், துறுதுறு கண்களும், குழி விழும் மோவாயுமாய் கண்ணை பறிப்பவள். சுருட்டை முடி அவ்வப்போது முகத்தில் வந்து விளையாடும். அன்று இன்னும் அழகாய், புதிதாய் பூத்த பூவாய் அவன் கண்ணை பறித்தாளவள்.
மல்லிகைப்பூ சூடியிருந்தாள் நெற்றியில் கோயிலுக்கு சென்று வந்த அடையாளமாக குங்குமம் மற்றும் விபூதி இருந்தன.ஓ இன்னிக்கு அவளோட ஸ்பெஷல் டே போலிருக்கு, வெள்ளிக் கிழமையா? மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
அங்கு நின்றவள் தனக்கு அண்ணார்ந்துப் பார்க்கும் உயரத்தில் இருப்பவனை அங்கிருந்த சேர் ஒன்றில் அமரச் சொல்லி விரல்களாலேயே வழி நடத்தினாள்.
வாரமொன்று கழிந்து அவளைப் பார்க்கும் ஆவலில், அதுவும் சேலையில் மனம் மயக்குகின்ற பாவையாக எதிர் நிற்பவளைக் காண தெவிட்டாத நிலையில் அவள் சொல்லுக்கு அவன் அப்படியே அடி பணிந்தான்.
எதிரில் அமர்ந்து இருப்பவனுக்கு குனிந்து அவன் நெற்றியில் கவனமாய் விபூதி வைத்து விட்டாள், அவளது கைகள் செல்லும் பாதையில் கருவண்டுக் கண்களும் பயணிப்பதை தன் கண்களுக்குள் இவனோ நிரப்பிக் கொண்டான்.
அவனுக்கு விபூதி வைத்தவள் அந்த கேபினில் இருந்த ‘ஏசு மரியாள்’ படத்தின் முன் நின்று ஏதோ வேண்டி வந்தாள்.
திரும்ப வந்தவளிடம் அமர்ந்தவாறே,
ஊரிலருந்து திங்கட்கிழமை தான் வருவேன்னு நினைச்சேன் திவ்?
ஆச்சரியத்தில் மொழிந்தான்.
நான்கூட திங்கள் கிழமை வருவதாகத்தான் நினைச்சேன். ஆனா எங்க பாஸ் எப்ப பாரு லீவு கொடுக்க மூக்கால அழுவாரா? அதான் எதுக்குப் பிரச்சனைன்னு இன்னிக்கே வந்திட்டேன்,.. கண் சிமிட்டினாள்.
அவனைப் பாராமல் இன்னும் மூன்று நாட்களா என்று அவள் மனம் துடித்ததை எல்லாம் விலாவரியாக அவனிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்ன?
வேணும்னா சொல்லு, உன் பாஸை மாத்திடலாம், இல்லேன்னா அவன் கையை காலை முறிச்சு…..
சொல்ல விடாமல் இடைமறித்தவள்..
பொழைச்சு போகட்டும் அந்த பாஸ், நல்லா இருந்துட்டு போகட்டும் விடுங்க…
விளையாட்டாய் சொல்லி நிமிர்ந்தவள் தன் இரண்டு கைகளையும் அவளுக்காக விரித்துக் கொண்டு புன்முறுவலோடு நின்றுகொண்டிருந்த அவனருகே சென்றாள்.
அருகே சென்றதும், என்ன? என அவனிடம் திவ்யா புருவம் தூக்கி கேட்க,
ஒரே ஒரு ஹக் டி ப்ளீஸ்…. என்றான் ஜீவன்.
இப்ப என்னவாம்? அவனது கொஞ்சலாம் கெஞ்சலில் இவளுக்கு திமிரேற கெத்தாக கேட்க,
ஒரு வாரம் நீ இல்லாம ரொம்ப மிஸ் பண்ணேன் ப்ளீஸ்’’ என மறுபடி கெஞ்சினான்.
நாம ஆபீஸ்ல இருக்கிறோம் அதாச்சும் ஞாபகம் இருக்கா உங்களுக்கு? முகம் சிவந்தாள்.
இது ஓரத்தில இருக்கிற கேபின் இங்க யாரு வரப்போறா? இந்த கண்ணாடியில வேற வெளியே யாருக்கும் உள்ளே யார் இருக்கான்னு ஒன்னும் தெரியாது.
ம்ஹீம்… மறுப்பாக தலையசைத்தாள். யாராவது வந்தா மானமே போயிடும்… முகத்தில் கலவரம்.
என்னை இப்படி கெஞ்ச விடறே இல்ல, பொறு உன்னை இதெல்லாம் கணக்கு வச்சு கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கறேன்…. என்றான்…
குரலில் இருந்த கோபம் கண்களில் இல்லை, மனமோ எப்படியாவது சில நொடிகள் அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தது.
ஒரு ஐடியா…
என்றவனாக கேபினின் கதவருகே சென்று கதவோடு சேர்ந்து சாய்ந்து நின்றுக் கொண்டான்.
இப்ப வா, யார் வந்தாலும் நான் இங்க நிக்கிறதனால உடனே கதவை திறக்க முடியாது …
அவனது முன்னெச்சரிக்கையை பார்த்து அவளறியாமல் சிரிக்க, மோவாய்க் குழியில் மற்றொரு முறை விழுந்து எழுந்தான் ஜீவன்.
சிரித்தவாறெ அவன் கரங்களுக்குள் புகுந்தாள் திவ்யா.
காமமற்ற அணைப்புக்குள் அமிழ்ந்தாள். எப்போதுமே ஜீவன் அவளை இவ்வாறுதான் தேடுவான். கைகளை அவள் தோளை சுற்றி போட்டு இருந்தவன், குனிந்து அவள் நெற்றியை முட்டி தலையில் முத்தமிட்டான்.
அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை பூவில் மூக்கை உரசி ம்ஹா மூச்சை இழுத்தான்.