தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 07 - மது
நமது வாழ்வில் மிகப் பெரிய ஆசீர்வாதம் எது? திறமையா, நற்பெயரா, புகழா, பணமா, சமூகத்தில் அந்தஸ்தா. இவை அனைத்தையும் நாம் நமது முயற்சி தன்னம்பிக்கை இவற்றின் மூலம் சம்பாதித்துக் கொள்ளலாம். அதே சமயம் இவை அனைத்தும் நிலையானவையும் அல்ல. ஒரு நிமிடம் போதும் தலைகீழாக மாறிப் போக.
ஆனால் நல்லதொரு குடும்பம் மிகப் பெரிய கொடுப்பினை. நமது பெற்றோரை, நமது உடன்பிறப்புகளை, சொந்தங்களை நாம் தேர்ந்தெடுக்க இயலாது.
ஆணோ பெண்ணோ நல்லக் குடும்பச் சூழலே ஒருவர் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பலன் எனலாம். வாழ்வின் எந்த ஒரு கடுமையான சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஆதாரமாக இருப்பது குடும்பம்.
இன்றைய காலகட்டத்தில் உலகத்தில் வளர்ந்த நாடுகளில் குடும்பச் சூழல் சிதைந்து மனிதர்கள் அனைவரும் தனித்தனி தீவுகளாக வாழ்ந்து வரும் நிலை மெல்ல மெல்ல நமது நாட்டிலும் பரவி வருகின்றது.
வாழ்க்கை எனும் மிகப் பெரிய சமுத்திரத்தில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் குடும்பம் கலங்கரை விளக்கமாக, நங்கூரமாக, துடுப்பாக அந்த அந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உறுதுணையாக இருந்து கரையை அடைய உதவியாக இருக்கின்றது,.
அப்படி ஒரு ஆதாரம் இல்லாமல், வழிக்காட்டுதல் இல்லாமல் போகுமானால் சமூகம் வீழ்ச்சியின் சுழலில் சிக்கி மூழ்கிப் போகும்.
எல்லோருக்கும் நல்ல குடும்பச் சூழல் அமைவதில்லை. ஆனால் ஒவ்வொருவரும் நல்ல குடும்பத்தை உருவாக்கிட முடியும்.
ஒரு நல்ல மனிதனாக, நல்ல வாழ்க்கைத் துணையாக, சிறந்த பெற்றோராக இருக்க வேண்டும் என்பது முதன்மையான லட்சியமாக இருக்க வேண்டும்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
பணம், புகழ், அந்தஸ்து தானாகவே வீடு தேடி வந்து வாசம் செய்யும்.
கயல் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் நூறாவது படப்பூஜை கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஆரம்ப நாட்களில் பல கடினங்களை சந்தித்த போதும் குடும்பத்தின் பரிபூரண ஆதரவு இருந்தமையால் முத்துக்குமரனால் இந்த நிறுவனத்தை திறம்பட நடத்த முடிந்தது. இளங்கோவால் மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்ல முடிந்தது.
மூன்று மொழிகளில் முத்துக்குமரன் தயாரித்து இயக்கும் நூறாவது படத்தில் இசையமைப்பாளராக இளமாறன் அறிமுகமாக, கயல்விழி ஆடை வடிவமைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.
“தயாரிப்பில் அப்பா பேரோட இளங்கோ பேரையும் சேர்த்து போடுங்க, ஆடை வடிவமைப்பு கயல்விழி வானதின்னு போடுங்க” குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருக்க கயல்விழி கணவனிடம் கூறினார்.
“அதெல்லாம் எதுக்கு அத்தை” வானதி கூற இளங்கோவும் மனைவியின் சொல்லை வழிமொழிந்தான்.
“இருக்கட்டும் அவரவர் செய்யும் செயலுக்கான அங்கீகாரத்தை கண்டிப்பாக குடுக்கணும். ஊர் உலகம் குடுக்குதோ இல்லையோ அம்மாவும் அப்பாவும் கண்டிப்பா அதை உங்களுக்கு குடுப்போம். நீங்க போடுங்க” கணவரிடம் உறுதியாக சொன்னார் கயல்விழி.
“குடும்பத்தில் எல்லோருடைய பேரும் இருக்கு. பாப்பா பேர் மட்டும் இல்ல” இளங்கோ கூற தேன்மொழி தமையனிடம் ஓடி வந்து அவன் தோளைப் பற்றிக் கொண்டாள்.
“என் பேர் எதுக்கு தனியா. உங்க எல்லோர் பேரும் இருந்தா அதில் நானும் இருக்க மாதிரி தானே. எனக்கு மரைன் போட்டோகிராபி படிக்கணும். அதில சேர்த்து விடு” அடுத்த அஸ்திரத்தை எய்தாள்.
இளங்கோ தனது செல்லச் தங்கையை திரும்பிப் பார்த்து பின் தந்தையை நோக்கினான்.
கடந்த சில தினங்களாக படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அப்பாவையும் அண்ணனையும் வால் பிடித்துக் கொண்டு அங்கே ஆஜராகி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
“சேகர் மாமா, இதுல போகஸ் எப்படி செய்யறது. நீங்க எந்த ஆங்கிள்ல லைட்டை பிடிப்பீங்க” பல ஆண்டுகளாக லைட் பாயாக இருந்து அப்போது ஒளிப்பதிவில் உதவியாளராக இருந்த சேகரிடம் படப்பிடிப்பு முடிந்ததும் கற்றுக் கொண்டாள்.
“அப்பா நம்ம அடுத்த படத்தில் சேகர் மாமாவை கேமராமேனா போடுங்க. மாமா சன்செட் காட்டினார்ப்பா. ரொம்ப அழகா இருந்தது” தேன்மொழி கூறவும் முத்துக்குமரன் மகனிடம் ஆலோசித்தார்.
“எனக்கும் அந்த யோசனை இருந்ததுப்பா. சேகர் மாமா ரொம்ப வருஷமா நம்ம ப்ரொடக்ஷன்ல இருக்கார். படிப்படியா நிறைய நுணுக்கங்களை கத்துட்டு இருக்கார். பாப்பாவே சொல்லியாச்சு” எனவும் சேகரிடம் ஆலோசித்தனர்.
“நூறாவது படம் மாமா. நீங்க தான் ஒளிப்பதிவாளரா இருக்கணும்னு எங்க ஆசை என்பதை விட பாப்பாவோட ஆசை” இளங்கோ சொல்லவும் சேகர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.
அவரது பல வருட உழைப்பிற்கு பலன் கிடைத்திருந்தது. முத்துக்குமரனுக்கு மட்டுமல்ல சேகருக்கும் குல தெய்வமாக ஆகிப் போனாள் தேன்மொழி.