தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 16 - சுபஸ்ரீ

சுவாதி நலமாக வீடு திரும்ப வேண்டும். ஆசிரமத்தில் உள்ள ரகசியம் என்னவென்று தெரிய வேண்டும். சாருவின் கோபம் மறைய வேண்டும். தனக்கும் சாருவுக்கும் திருமணம் நடக்க வேண்டும். இப்படி பல வேண்டுதல்கள் ஆகாஷ் மனதில் சுனாமி அலையாய் பாய்ந்தபடி இருந்தது.
இந்த வேண்டுதல்களில் எது நடக்கும் நடக்காது என்ற வினாவிற்கு அவனிடம் விடை இல்லை. இரவு எண்ண அலைகளின் தாக்கத்தால் உறக்கமே இல்லாமல் போனது.
ஸ்ரீவில்லிபுத்துரில் இருந்து மறுநாள் விரைவாக தயாராகி ஆசிரமம் சென்றான். “ரீச்சுடு ஹோம்” என சாருவிடம் இருந்து வாட்ஸ்அப் செய்தி கிடைத்தது. அவளுக்கு பேச விருப்பமில்லை என்ற செய்தியும் அதில் அடக்கம். அவளைப் பற்றிய எண்ணங்களை தற்காலிகமாக தள்ளி வைத்தான்.
ஆசிரமத்திற்க்குள் நுழைந்தவன் நேராக சுவாமிஜியிடம் சென்று வணங்கினான். அவர் புன்னகையுடன் “வாங்க தம்பி . . ” என சாந்தமான மனோபாவத்துடன் வரவேற்றார்.
“நான் இங்க ஒரு வாரம் இருக்கலாம்னு . . நேத்து கேட்டிருந்தேன்” என அவன் அவருக்கு தன்னை நினைவிருக்குமா என்கிற சந்தேகத்தில் தயக்கமாக ஆராம்பிக்க . .
“உங்களுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு . . நீங்க நிம்மதியா இங்க இருக்கலாம்” என்றார் புன்னகை மாறாமல். அருகில் உள்ள ஒருவரை அழைத்து காதோடு எதையோ சொல்ல . . அவர் அவசரமாக உள்ளே சென்றார். அங்கே அமர்ந்திருந்தவர்கள் அவனை கண்களால் ஸ்கேன் செய்தபடி இருந்தனர்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
சுவாமிஜி “நீங்க இங்க இருந்து கிளம்புற சமயத்துல உங்க மனசுல இருக்கிற சந்தேகங்கள் குழப்பங்கள் நீங்கி சந்தோஷமா ஒரு புது மனுஷனா போவீங்க” என்றார். அவர் பார்வை அவன் உள்ளத்தை ஊடுருவதுப் போல இருந்தது.
மற்றொரு ஆள் வந்து ஆகாஷின் பேக்கை எடுத்துக் கொள்ள யத்தனிக்க “நோ தேங்க்ஸ்” என தானே எடுத்துக் கொண்டான். சுவாமிஜியிடம் புன்னைகையோடு விடைப் பெற்று மற்றவனோடு சென்றான். தன் மனதில் இருப்பதை சுவாமிஜி அப்படியே சொன்னது கொஞ்சம் வியப்பாக இருந்தது.
பழங்கால கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு தனி அறைக்கு அவன் அழைத்து வரப்பட்டான். அறைக்குள் தன் பேக்கை வைத்தவிட்டு நோட்டமிட்டான். அழைத்து வந்தவன் தன் பணி முடிந்ததென சென்றுவிட்டான். ஒரு கால் ஊனமான பழைய மரகட்டில். அருகே ஒரு மரடேபிள். சுவற்றில் உள்ளடங்கிய இரண்டு தட்டுகளைக் கொண்ட அலமாரி. இத்தனைதான் அந்த அறையின் பொக்கிஷங்கள். ஆங்காங்கே அறையின் சுவர் பல் இளித்தபடி இருந்தது.
கட்டிலில் அமர “கிரிச்” சென சத்தம் செய்தது. ஊனமான கட்டில் காலுக்கு கட்டுக்கள் பலமாகவே இருந்தது. ஜன்னல் வழியே கீழே பார்த்தான். எல்லோரும் அமைதியாக தங்களுக்கான பணிகளை செய்துக் கொண்டிருந்தனர். அறையை விட்டு வெளிவந்தவன் காரிடாரில் நின்றபடி ஆசிரமத்தை அளவெடுத்தான். தன் அறையை போல நான்கைந்து அறைகள் இருந்தது.
நிரந்தரமாக தங்குபவர்களுக்கு ஆசிரமத்தின் பின்பகுதியில் இரண்டு தளங்களைக் கொண்ட கட்டிடங்கள் இருந்தன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் என தனி தனியே இருந்தது. அதனோடு சேர்ந்தார் போல ஒரு பெரிய அறை இருந்தது. அது என்னவென்று தெரியவில்லை.
முன்தினம் சுவாமிஜியுடன் நடந்த நிகழ்வுகள் மனதை குடைந்து மீண்டும் வெளி வந்தன.
நேற்று சுவாமிஜி பின்னாலேயே வந்த ஆகாஷ் அவர் மூலிகையை பரிப்பதைப் பற்றி மாணவர்களுக்கு பயிற்றுவித்துக் கொண்டிருப்பதை கவனித்தபடி இருந்தான். அப்போது சாருவோடு போனில் பேசிவிட்டு சுவாதி ஏன் அடம்பிடிக்கிறாள்? என எண்ணிக் கொண்டிருந்தவன் பார்வையில் தென்பட்டார்கள் இருவர்.
அப்போது அவன் கண்ணில் பட்டவை எல்லாம் சற்று வினோதமாக இருந்தது. இருவர் அந்த இடத்தை சுற்றி வந்தனர். அவர்களை பார்க்க பக்தர்கள் போலவும் இல்லை. இயற்கையை ரசிப்பதற்காக வந்தவர் போலவும் இல்லை. மனிதரின் நடவடிக்கைகளை அவனால் புரிந்துக் கொள்ள முடியும். பொய் புரட்டு பேசும் எத்தனை நபர்களை அவன் சந்தித்து இருக்கிறான். அவ்வகையில் அவ்விருவர் நல்ல எண்ணத்தோடு இருப்பவர்களாக அவனுக்கு தோன்றவில்லை.
சுவாமிஜி மாணவர்கள் முன் மூலிகை காப்பு கட்டுதலை தானே செய்ய தொடங்கி இருந்தார். அவரோ அல்லது அவரை சுற்றி இருந்தவரோ இவ் விருவரை கவனிக்கவில்லை. சுவாமிஜி மூலிகைப் பற்றி விளக்கம் கொடுத்துவிட்டு மாணவர்களுடன் கிளம்பினார்.
என்ன தோன்றியதோ ஆகாஷ் சட்டென சுவாமிஜி அருகில் செல்ல . . . அவரும் யார் இந்த புதியவன் என திரும்பி பார்த்தார்.
“நமஸ்காரம்” என நின்றான்
“இறைவன் உனக்கு அருள் புரியட்டும் . . . யார் நீங்க?” அகமும் புறமும் அமைதி தவழ கேட்டார்.
“என் பேரு ஆகாஷ் . . யு.எஸ்ல அட்வகேட்டா இருக்கேன்”
“ரொம்ப சந்தோஷம் தம்பி”
“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் சுவாமிஜி”