தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 09 - மது

காணும் இடமெல்லாம் நீல வண்ணக்கடல் இருந்தும் அதற்குள் அமிழ்ந்து போக கொள்ளை ஆசை இருந்தும் தேன்மொழி மிகவும் அமைதி காத்திருந்தாள்.
“பாப்பா ஸ்கூபா டைவிங் கூட்டிட்டு போறியா” இளங்கோ கேட்கவும் தானும் செல்ல விருப்பம் கொண்டான் இளமாறன்.
ஸ்கூபா டைவிங் பற்றி எடுத்துச் சொன்னவள் நீருக்குள் தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் கை சைகைகளையும் கற்றுத் தந்தாள்.
பின்னர் வாய் வழியே சுவாசிக்கவும் பயிற்றுவித்தாள்.
முத்துக்குமரன் தனிப்படகை தனது குடும்பத்தினருக்கு ஏற்பாடு செய்திருந்தமையால் மறுநாள் அனைவரும் கடலுக்குள் பயணம் சென்றனர்.
“இந்த இடத்தில் அழகு மீன்கள், கடல் தாவரங்கள் மற்றும் பவழப் பாறைகளும் காணக்கிடைக்கும். அதுவும் குறைந்த ஆழத்திலே. இங்கே கடலுக்குள் மூழ்கி அதன் அழகை கண்டு ரசிக்கலாம்” உடன் வந்த தேர்ச்சி பெற்ற ஸ்கூபா டைவர் கூறவும் இளங்கோ இளமாறன் இருவரும் ஸ்கூபா சூட் அணிந்து வர தேன்மொழி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“பாப்பா நீ வரலையா” இளங்கோ கேட்கவும் தலையசைத்து மறுப்புத் தெரிவித்தாள்.
“இவங்களுக்குத் தான் இங்கே உள்ள கடல் பரிச்சயம் அண்ணா. அதனால நீங்க இவங்களோட போயிட்டு வாங்க” என்று காரணம் கூறினாள்.
தேன்மொழிக்கு இந்து மகாசமுத்திரத்தின் இப்பகுதி புதிது. அங்குள்ள கடலின் பொக்கிஷங்களை, அதன் அழகை அவள் கொஞ்சம் கொஞ்சமாக சென்று ஆராய்ந்து அறிய வேண்டியிருந்தது.
மேலும் கடலுக்குள் அவள் அமிழ்ந்து பல தினங்கள் ஆகியிருந்தன. அந்த நீண்ட காலப் பிரிவை ஈடுசெய்ய அவளுக்கு கடலோடு ஏகாந்தம் தேவையாக இருந்தது.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
வெறும் அரை மணி நேரம் பத்து பதினைந்து அடி ஆழம் வரை சென்று விட்டு வர அவளால் முடியாது என்று உணர்ந்திருந்தாள்.
ஒரு வாரக் காலம் கடந்திருந்த நிலையில் முத்துக்குமரனும் இளமாறனும் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தனர்.
“வானதியும் இளங்கோவும் மொரிஷியஸ்க்கு போயிட்டு பத்து நாள் கழித்து வரட்டும். நீயும் மாமாவும் பாப்பாவோட இருங்க” மனைவியிடம் அவர் கூற தேன்மொழி சற்றே அதிர்ந்தாள்.
அன்னை உடன் இருந்தால் அவள் எங்கே கடலாடிக் கொண்டிருப்பது. தாத்தாவைப் பார்த்து ஏதேனும் செய்யச் சொல்லி விழிகளாலேயே கெஞ்சினாள்.
“கயல் நீயும் முத்துவோடு கிளம்பிப் போகலாமே. இங்கே இருந்து என்ன செய்யப் போகிறாய்” தாத்தா உடனேயே புரிந்து கொண்டு அன்னையிடம் கேட்கவும் தேன்மொழி மகிழ்ச்சி அடைந்தாள்.
ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை.
“அப்பா பாரீஸ் போட்டிக்கு நான் வடிவமைக்கும் ஆடைகளை பாப்பாக்கு போட்டு பார்க்கணும். ஓரளவு நானும் வானதியும் சில டிசைன்ஸ் முடிவு செய்திட்டோம். இன்னும் கொஞ்சம் வேலைப்பாடு செய்ய வேண்டியிருக்கு” கயல்விழி இன்னும் பத்து நாட்களுக்கு அங்கே தான் தங்கப் போவதாகக் கூறவும் தேன்மொழி ஓய்ந்த அலையானாள்.
“பாப்பா எல்லாம் நன்மைக்கே. முதல்ல இங்கே இருக்கும் டைவர்ஸ் கிட்ட கற்றுக் கொள். இந்த மகாசமுத்திரம் பற்றி அறிந்து கொள். எப்போதுமே அப்படி செய்வது தானே உன் பழக்கம்” தாத்தா அறிவுரை கூறினார்.
ஜப்பானுக்கு அமா பயிற்சி பற்றி கற்றுக் கொள்ள சென்ற போதும், லண்டன் சென்று ஆழ்கடல் டைவிங்கில் பயிற்சி பெற்ற போதும் தேன்மொழி முதலில் அங்கிருந்த கடலோர ஊர் மக்களிடம் குறிப்பாக மீனவர்களிடம் சென்று சிறிது காலம் செலவிட்டு கடல் பற்றி அறிந்து கொண்டு பின்னரே முறையான பயிற்சி பெற சென்றாள்.
மற்றவருக்கு டைவிங் என்பது தொழிலாக, விருப்பமாக, பொழுது போக்கு அம்சமாக இருக்கும். ஆனால் கடலே வாழ்வின் ஆதாரமாக, கடலை அன்னையாக பாவித்து அதன் மடியில் குழந்தைகளாய் தவழ்கின்றவர்கள் மீனவர்களே.
இத்தனை ஆழத்தில் இவ்வாறு காற்றின் அழுத்தம் இருக்கும். கடலில் இருந்து வெளியே படகிற்கு எப்படி படிப்படியாக திரும்ப வேண்டும், என்ன முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவியல் முறைகளை டைவிங் பயிற்சியில் கற்றுத் தருவார்கள்.
மேலும் அசாதாரண சூழ்நிலைகளில் எவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் சொல்லிக் கொடுப்பார்கள்.
ஆனால் கடல் அன்னையின் ஒவ்வொரு தன்மையையும் உணர்வினில் கொண்டு வாழ்பவர்கள் மீனவர்கள் மற்றும் மாலுமிகள்.
ஆதலால் அவர்களோடு சிறிது காலம் சென்று தங்கியிருந்து கடலைப் பற்றி அறிந்து கொள்வது தேன்மொழியின் வழக்கமாக இருந்தது.
தாத்தா அதை நினைவூட்டவும் தெளிவு பெற்றாள்.
பத்து நாட்களும் மிக உற்சாகமாகவே சென்றன.