தொடர்கதை - காதல் இளவரசி – 23 - லதா சரவணன்
பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு தாங்கள் வந்ததன் நோக்கத்தை அலெக்ஸீம் ஏஞ்சலினாவும் தெரிவித்தார்கள்.
உத்ராவின் பதட்டத்திற்கு காரணம் அறிந்தபோது கடலுக்குள் நடந்திருக்கும் மாற்றத்தையும் அவர்கள் தெரிவிக்கவும் பத்மினியின் நிலை குறித்து தனித்தனியாகவே ஒவ்வொருத்தர் மனதிற்குள்ளும் பெருத்த கவலை குடிகொண்டது.
அடுத்ததா உங்க மூவ் என்ன அலெக்ஸ் ?
அரசாங்கம் ஒரு சப்மரைன் அரெஞ்ச் பண்ணியிருக்காங்க இன்றைக்குள்ளே அதுவும் எங்களுக்கு வந்துடும் அதன்பிறகு எங்களின் தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கலான்னு இருக்கோம்
அலெக்ஸ் எனக்கொரு யோசனை நாமயேன் உத்ராவையும் பரத்தையும் நம்ம கூடவே அழைத்துக்கொண்டு போகக் கூடாது இரண்டுபேருக்கும் நல்ல நீச்சல் பயிற்சி இருக்கு தைரியமானவங்களும் கூட அதனால....
எனக்கும் அவங்க சொல்றது நல்ல யோசனையாபடுது பரத்... பத்மினிக்கு என்னாச்சுன்னு ஒவ்வொரு நேரமும் என் மனசு பதறுது அவ காணாம போய் 10 மணி நேரத்திற்கும் மேலாகுது. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமான பிரியனையும் காணோம். அவனால பத்மினிக்கு ஏதாவது ஆபத்து வந்திடுமோன்னு எனக்கு பயமா இருக்கு.
பதறியபடி நின்றவளை அணைத்துக் கொண்டான் பரத்,
நிச்சயமாய் நாம போகலாம்.
ப்ரியனின் வேலைகள் எதுவும் நின்றுவிடாமல் இருக்க அதை தொடருமாறு மற்றொரு ஆளுக்கு உத்தரவிட்டுவிட்டு கடல் நோக்கிச் செல்ல ஆயத்தமானார்கள் நால்வரும்..
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
சிறு கண்ணாடித்திரைக்கு வெளியே ப்ரியனின் விகாரமான முகத்தைப் பார்த்தும் பத்மினிக்கு ஒருகணம் மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. இருந்திருந்து மீண்டும் இவனிடமே மாட்டிக்கொண்டோமே என்ற வருத்தம் அவள் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.
ஆனால் பார்வை விலகாமல் பத்மினியைப் பார்த்துக் கொண்டிருந்தானே தவிர உள்ளே வரவோ அல்லது அந்தக் கண்ணாடித்திரையை உடைக்கவோ என்று எந்த முயற்சியும் ப்ரியன் எடுக்கவில்லை அவன் கண்கள் நிலைகுத்தியிருந்தது சற்றைக்கெல்லாம் ஒரு குறும்புக்கார மீன் அவன் கண்ணைக் குத்திகிழித்துவிட்டு எந்த உறுத்தலும் இல்லாமல் மிதந்து சென்றது.
ஆனால் வலி மிகுந்த கேவலோ தடுக்கும் உக்தியோ என்று அவனிடம் எந்த அசைவும் இல்லை
அப்படியென்றால் ....
உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது பிரியன் சத்தியமாய் இறந்து போயிருந்தான்
தான் இருந்த அறைக்கதவை பூட்டியது யார் என்ற ஆராய்ச்சியில் எல்லாம் ப்ரியன் இறங்கவில்லை, நிச்சயம் இது உத்ரா அல்லது பரத்தின் வேலையாகத்தான் இருக்கும். அவர்களுக்கு தன்னைப்பற்றி தெரிந்திருக்கும் பட்சத்தில் மேற்கொண்டு இங்கிருப்பது மிகவும் ஆபத்து என்ற நினைப்பில்தான் பத்மினியால்தான் இந்த நிலைக்கு ஆளாக வேண்டிவந்தது என்றும் அவளைக் கொல்லும் நோக்கத்துடன்தான் பூட்டிய அறைக்குள் இருந்து ப்ரியன் தப்பித்ததே ?! ஆனால் தப்பிக்கும் அவசரத்தில் அவன் சில முக்கிய ஆவணங்களை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டான்,
சத்யா பரத்தின் நண்பன் இந்த சிக்கலில் ஒருவேளை நான் மாட்டிக்கொண்டாலும் பரத் அவன் நண்பனைத்தான் நம்புவானேத் தவிர தன்னை நம்ப மாட்டான், அப்போது சத்யாவின் சுயரூபத்தை நிரூபிக்கத்தான் அவனின் கூட்டாளிகளில் ஒருவரான ரவியை கைக்குள் போட்டுக் கொண்டது. சத்யா நடத்தும் அண்டர்வாட்டர் ஆபரேஷன், நிக்கோலஸ் பற்றி செய்திகளையும் அவனுக்கு யாராருடன் தொடர்பு இருக்கிறது என்பதைப் பற்றியும் தகவல்களையும் அவன் சேகரித்து அனுப்பியிருக்கிறான் அந்த ஆதாரமும் இப்போது என்னுடைய சிஸ்டமிலேயே மாட்டிக்கொண்டதே, அந்தளவிற்கு பரத் ஆராய மாட்டான் என்ற நம்பிக்கையும் ப்ரியனுக்கு இருந்தது.
இப்போதைக்கு கண்முன் நிற்பது தனக்கு வந்த ஆபத்து அதிலிருந்து தப்பியாயிற்கு அடுத்தது பத்மினி அவளை முதலில் அந்த சுரங்கத்திற்குள்ளேயே வைத்து முடித்துவிடவேண்டும். ப்ரியனின் கண்முன்னால் பத்மினியின் முகம்தான் நிழலாடியது.
கோபமும் குரோதமும் தன்னையே அழித்திடும் ஆயுதத்தைப் போன்றது. அப்படித்தான் ப்ரியனின் கோபம் அவனைப் பற்றியே எதையும் யோசிக்கவிடவில்லை சுரங்கத்தை நோக்கி நீந்திக் கொண்டு இருந்தான். அத்தனை அடி ஆழத்திற்கு செல்லும்போது தகுந்த முன்னேற்பாடுகளைக் கூட செய்து கொள்ள முடியவில்லை என்று வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் சுரங்கப்பாதைக்கு சீக்கிரம் சென்றடைந்திட முடியும் என்ற நம்பிக்கையோடு பத்மினியின் மேல் கொண்ட வெறியும் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகிக்கொண்டே வந்தது ப்ரியனுக்கு !
அந்த வெறியில் தன் பாதை மாறியதைக் கூட அவன் மறந்து போயிருந்தான். கருங்குவியலாய் எதோவொன்று அவனைச் சுற்றிக் கூட்டமாய் வந்து கொண்டிருந்தது வெகு சமீபமாய் வந்த பிறகுதான் அது கடல் அட்டைகள் என்பதை ப்ரியன் உணர்ந்திருந்தான்.