தொடர்கதை - தாரிகை - 23 - மதி நிலா
சேலத்து மாம்பழச்சுவை நாவில் ஸ்பரிசிக்கும் சமயம் கதிரோனின் சுட்டெறிக்கும் வெயில்கூட ஒரு சுகம்தான்..!!
ரோட்டோரக் கடையொன்றில் சின்னசின்னதாய் நறுக்கி வைக்கப்பட்டிருந்த மாம்பழத்தைக் கண்டதும் நிஷாவின் விழிகள் பளபளப்பதைக்கண்டு வாங்கியே கொடுத்துவிட்டார் பரத்வாஜ்..!! என்னவோ அந்தக் குழந்தை எதைக் கேட்டாலும் வாங்கிக்கொடுத்துவிடும் எண்ணம் அவரின் மனதிற்குள்..!!
இதழ்களில் எல்லாம் மாம்பழச்சாற் வழிந்துகொண்டிருக்க தன்னைப் பார்த்து அவள் வேண்டுமா என்று அழகாய் தலைசாய்த்து கேட்ட நொடிதனில் தாரிகையைப் போல் நிஷாவையும் தன் மகளாகவே பாவித்துக்கொண்டது மனது..!!
தன்னிலை எதுவென்று நன்றாய் உணர்ந்திருந்தபொழுதிலும் அவளிடமிருந்த ஒரு தெளிவு நிதானம் அனைத்துமே வயதிற்கு முதியதாய்..!! அவளை முதலில் கண்ட இரவும் அப்படித்தான்..!!
குருதி வழிந்தோடும் தாரிகையின் உடலைத் தனது பிஞ்சுக்கைகளால் தாங்கியபடி ரயில் நிலையத்தைத் தொட்டிருந்தாள் நிஷா..!! அப்பொழுதுதான் பரத்வாஜும் வெற்றியுடன் ரயிலில் வந்திறங்கியிருந்தார்..!!
ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி இருவரும் எட்டிப்போட அவர்களுக்கு எதிராய் நிஷாவும் தாரிகையும்..!! கண்டவுடன் பதறிவிட்டது இருவருக்கும்..!!
யாரென்றே அடையாளம் காணமுடியாமல் முகமெல்லாம் குருதி படர்ந்த ஒரு பதினைந்து வயதுக் குழந்தையை பத்து வயதுக் குழந்தை தாங்கி நிற்கும் காட்சி..!!
வெற்றிதான் முதலில் அவர்களை நெருங்கியிருந்தான்..!!
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“எ..ன்னா..ச்சு..??”, என்றவண்ணம் நிஷாவின் கைகளிலிருந்த தாரிகையை தன்னிடம் மாற்றிபடி அவன் கேட்டிட..
“நானும் அக்காவும் பேசிட்டு இருந்தோம் அங்கிள்.. திடீருன்னு மயங்கி விழுந்துட்டாங்க..”, முழுமையாக எதுவும் சொல்லாமல் வேண்டியதை மட்டும் செப்பினாள் நிஷா..
“அக்காவா..?? என்ன சொல்றான் இந்தப் பையன்..”, மனதில் தோன்றியபொழுதும் கேட்காமல் தாரிகையை ஒரு சிமென்ட் பெஞ்சில் படுக்கவைத்துவிட்டு தனது பேக் பேக்கிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறந்து கொஞ்சம் நீரை தாரிகையின் முகத்தில் தெளித்திட..
அதுவரை முகத்தில் திட்டுத்திட்டாய் படிந்திருந்த இரத்தம் விலகி அவளது முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியது..
அவ்வளவுதான்..!!
“த..ரண்..யா..”, அலறியே இருந்தார் பரத்வாஜ்..
வெற்றிக்கும் பரத்வாஜைப் போன்று அதிர்வுதான்.. ஆனால் சடுதியில் அதை மறைத்துக்கொண்டவன் தாரிகையைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு முன்னே நடக்க.. அவன் பின்னே பரத்வாஜின் கைகளைப் பிடித்தபடி நிஷா..!!
பரத்வாஜ் இருந்த நிலையில் தான் நிஷாவின் கைகளைப் பிடித்திருப்பது எல்லாம் மனதில் பதிந்திருக்கவில்லை.. என்னவோ தனக்கென்று ஒரு பிடிப்பு அச்சமயம் கிடைத்ததுபோல் அவளது கைகளை விடாமல் பிடித்திருந்தார்..!!
அவசரகதியில் ஒரு ஆட்டோவைப் பிடித்தவர்கள் அதில் ஏறியமர.. அவர்களுடன் தாரிகையின் முகத்தைப் பார்த்தபடி நிஷாவும் மௌனமாக..!!
மருத்துவமனையில் தாரிகையை சேர்த்தபின் மருத்துவர், “காயம்பட்ட அதிர்ச்சியில் மயங்கிவிழுந்திருகான்..”, என்று சொல்லும் வரையிலும் நிஷாவின் விரல்கள் பரத்வாஜின் பிடியில்தான்..!!
“அக்காக்கு ஒன்னுமில்லையே..??”, பரத்வாஜிடமிருந்து தனது கைகளைப் பிரித்தபடி வெற்றியிடம் நிஷா கேட்க..
“தரணுக்கு ஒன்னுமில்லை தம்பி..”, என்று நிஷாவின் உயரித்திற்கு ஏற்ப குனிந்திருந்தான் வெற்றி..
“நான் தம்பியில்லை அங்கிள்.. என் பேர் நிஷா.. அப்புறம்..”, என்றவள் தாரிகையைச் சுட்டிக்காட்டி, “இவங்க தரண்யன் இல்லை செந்தாரிகை அக்கா..”, என்றாள் புன்னகையுடன்..
ஒருநிமிடம் நிஷா என்ன சொன்னாள் என்றே புரிந்திடவில்லை வெற்றிக்கு.. அப்பொழுதும் இப்படித்தான் அக்கா என்றான்.. இப்பொழுதும் அதையே சொல்கிறானே என்பதுபோல் கேள்வியாய் பரத்வாஜைப் பார்த்திட அவரின் முகமோ உணர்ச்சிகளை முழுவதும் துடைத்தார்போன்று காட்சிதந்தது..!!
நிஷாவின் புறம் திரும்பிய வெற்றி, “என்ன சொல்றீங்க நீங்க..?? அக்காவா..??”, திரும்பத் திரும்ப அதேக் கேள்வியை அவன் எழுப்பிட.. திரும்பத் திரும்ப அவளும் சொன்னதையே திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தாள்..!!
நெற்றிப்பொட்டில் முடிச்சுக்கள் விழ பரத்வாஜை மீண்டுமொருமுறை பார்த்துவைத்தான் வெற்றி.. என்ன சொல்கிறான் இவன் என்பதுபோல..!!
இதற்குமேல் அமைதி காப்பது நல்லதல்ல என்று தோன்றிட, “இந்தக் குழந்தை சொல்றது உண்மைதான் வெற்றி.. நம்ம தரண் பையனில்லை.. அவ ஒரு திருநங்கை..”, வெற்றியின் கண்களைப் ஊடுருவியபடியே..