தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 41 - சித்ரா. வெ
தன் அன்னைக்கு எதிரான ஒரு பதிலை கூறியதில் அருள்மொழிக்கு ஒருமாதிரி உறுத்தலாக இருந்தது. இதுவரை அன்னை பேச்சை எதற்காகவும் மீறியதில்லை, அப்படியிருக்க இன்று அவர் மனம் கஷடப்படும் என்று தெரிந்தும் அப்படி ஒரு பதிலை கூறியிருக்கிறாள்.
இத்தனை விரைவாக தன் அன்னை தன் திருமணம் குறித்து யோசிப்பார் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று இந்த குடும்ப கஷ்டத்தில் தானும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை நிராசையாக ஆக்க அவளுக்கு விருப்பமில்லை. அதுவும் இல்லாமல் திருமணம் என்ற பெயரில் இப்போதே இன்னொரு வீட்டிற்கு செல்லவும் அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
சரி திருமணத்திற்கு பிறகு கூட வேலை செய்து தன் குடும்பத்திற்கு உதவலாம் என்றால் அது சாத்தியமாகுமா? என்பதும் சந்தேகம் தான், ஒரு நல்ல வேலை அதிக சம்பளம் என்றால் கூட பாதி சம்பளப் பணத்தை இங்கு கொடுக்கலாம், ஆனால் அதற்கு கூட ஒரு டிகிரி பத்தாது. இன்னும் மேலும் படித்தால் தான் நல்ல வேலை கூட கிடைக்கும். அப்படியிருக்க இன்னும் இரண்டு வருடங்கள் படித்து முடித்தால் கூட அன்னைக்காக திருமணத்தை பற்றி யோசிக்கலாம். ஆனால் இப்போதே எப்படி? என்ற எண்ணத்தில் தான் மற்றவர்கள் உன் விருப்பம் என்று சொன்னதால் அவளும் திருமணம் வேண்டாம் என்று கூறினாள். ஆனால் இதுவரை அன்னை பேச்சை எதற்காகவும் மீறியதில்லை என்பதால் தான் அது அவள் மனதிற்கு வெகு உறுத்தலாக இருந்தது.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அவள் ஏதோ சிந்தனை வயமாக இருந்ததை பார்த்து அவளருகில் வந்த இலக்கியா, “ஏன்ன மச்சி தீவிர சிந்தனை..” என்றுக் கேட்டாள்.
“நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னதால அம்மா மனசு கஷ்டப்பட்டிருக்கும்னு நினைக்கும் போது ஒருமாதிரி உறுத்தலா இருக்கு மச்சி..”
“அப்போ ஏன் வேண்டாம்னு சொன்ன.. ஒத்துக்க வேண்டியது தானே..”
“என்னடி சொல்ற.. எனக்கு மேல படிக்க ஆசையிருக்குன்னு உன்கிட்ட சொல்லியிருக்கேன் இல்ல.. நல்ல வேலைக்கு போகணும்.. மாமா, மகி போல நானும் இந்த குடும்பத்துக்கு உதவணும் இப்படியெல்லாம் உன்கிட்ட சொல்லியிருக்கேன் அப்பவும் இப்படி கேட்டா என்ன அர்த்தம்?”
“இதுக்காக மட்டும் தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னீயா?”
“ஆமாம் பின்னே வேற எதுக்காம்..”
“உண்மையிலேயே இது மட்டும் தான் காரணமா மச்சி..”
“நீ கேட்பது எனக்கு புரியல.. நான் என்ன சொல்லணும்னு நீ நினைக்கிற..”
“சரி வெளிப்படையாவே கேட்கிறேன்.. உனக்கு சார்லஸ் மேல ஏதாச்சும் இன்ட்ரஸ்ட் இருக்கா..”
“என்ன உளர்ற இலக்கியா.. நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் இல்ல.. நாம அமுதனை பார்த்து பழகினது ஒரு மாசம் கூட இருக்காது.. அதோட அதை விட்டுடணும்.. அதுக்குப்பிறகு அந்த நட்பை தொடருவது கூட வேண்டாம்னு சொல்லியிருக்கேன்.. அதுக்குப்பிறகும் இப்படி கேட்டா என்ன அர்த்தம்?”
“அது முன்ன.. ஆனா இப்போ சார்லஸ் நம்ம குடும்பத்துக்கு தெரிஞ்சவர் தானே..”
“ஆனாலும் நான் அதே டிஸ்டன்ஸை தானே ஃபாலோவ் பண்றேன் அது தெரிஞ்சும் நீ இப்படி கேட்கலாமா?”
“அதுல தான் எனக்கு சந்தேகமே மச்சி.. யாரோ ஒருத்தர் கூட நீ சகஜமா பழக அவசியம் இல்ல.. ஆனா சார்லஸ் கதிர் மாமாவுக்கு நல்லா தெரிஞ்சவங்கன்னு உனக்கே தெரியும்.. அப்புறமும் நீ இப்படி தள்ளிப் போறது தான் எனக்கு டவுட் கிளப்புது.. யாரோ ஒருத்தர்க்கிட்ட நான் இப்படித்தான்னு நீ நடந்துக்கிறது வேற.. ஆனா இத்தனை நாள் சார்லஸ் கூட வெளிய போனப்பிறகும் அவங்களை நீ இன்சல்ட் பண்றன்னா என்ன அர்த்தம்? உன்னோட மனசுக்குள்ள என்னவோ இருக்குது தானே..”
“இதை வச்சு நீயா கற்பனையை வளர்த்துக்காத.. என்னோட மனசுக்குள்ள எதுவும் இல்ல.. அமுதங்க்கிட்ட நடந்துக்கிட்டதுக்கு காரணமும் அம்மா தான்..”
“அத்தையா.. என்ன சொல்ற மச்சி..”
“ஆமா அம்மா தான் காரணம் என்றவளுக்கு கலை சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது.
அன்று அமுதன் வெளியில் அழைத்ததும் அனைவரும் கிளம்ப தயாரான போது, அருள்மொழியை மட்டும் அழைத்த கலையரசி,
“அருள் இதுவரை மகி, அறிவோட வெளிய போன போது இருக்க மாதிரி இப்போதும் இருக்கக் கூடாது.. சார்லஸ் தம்பி என்னத்தான் உங்க கதிர் சித்தப்பாக்கு தெரிஞ்ச ஆளா இருந்தாலும் நம்மல பொறுத்த வரை வெளி ஆள் தான்.. அதனால் அறிவு, மகிக்கிட்ட நடந்துக்கிறது போல அந்த தம்பிக்கிட்டேயும் நடந்துக்க கூடாது சரியா? அறிவு, மகின்னா அது வேற, ஆனா அந்த தம்பி வெளிநாட்டுல இருந்து வந்திருக்கு.. அதனால நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கணும்.. பார்க்கிறவங்க கண்ணுக்கு ஏதும் தப்பா தெரியுற மாதிரி நடந்துக்கக் கூடாது சரியா?” என்று கூறினார்.