“அம்மா பொண்ணுங்க தன்னோட சொந்த காலில் நிக்கணும் அதுக்கு வேலைக்குப் போகணும்.. ஆனா நான் அதுக்காக மட்டும் சொல்லல.. மாமா இந்த குடும்பத்துக்காக எவ்வளவு செய்றார் ம்மா.. நமக்காக அவர் இவ்வளவு செய்யணும்னு ஏதாச்சும் இருக்கா.. ஆனாலும் கொஞ்சம் கூட முகம் கோணாம, சலிச்சுக்காம இந்த குடும்ப பாரத்தை சுமக்கிறார். நமக்கு பார்த்து பார்த்து செய்றார். என்னால முடிஞ்ச அளவுக்கு கொஞ்ச நாளாவது இந்த குடும்ப கஷ்டத்துல பங்கெடுத்துக்கணும்மா..”
“நீ இப்படி சொல்ல கேக்கறதுக்கு சந்தோஷமா இருக்கு.. ஆனா நீ இன்னும் ரெண்டு வருஷம் படிச்சிட்டு அப்புறம் வேலை கிடைச்சு அந்த சம்பளத்தை எடுத்துட்டு வந்து கொடுத்தா அதை மாமா வாங்கிப்பார்னா நினைக்கிற..
அப்படியிருந்தா நான் வேலைக்கு போயிருக்க மாட்டேனா.. மாமா நம்மல பாரமா நினைச்சிருந்தா ஒருவேளை அப்படி வாங்கலாம்.. ஆனா அவரோ அண்ணியோ அப்படி நினைக்கிறவங்க இல்ல..
நீ சம்பாதிச்சு கொண்டு வந்து கொடுக்கிற காசை நீயே வச்சுக்கம்மான்னு ஒரு பைசா கூட வாங்காம உன்கிட்டேயே கொடுத்திடுவாரு.. ஒருவேளை நீயா அதை சேர்த்து வச்சு உன்னோட கல்யாணத்துக்காக கொடுத்தா கூட வேண்டாம் என்னால செலவை பார்த்துக்க முடியும்னு சொல்வார்.
அப்படியே நீ கட்டாயப்படுத்தி பணத்தை கொடுத்தாலும் நீ ஒரு ரெண்டு வருஷம் வேலைக்கு போவீயா? அதுல எவ்வளவு உனக்கு பணம் கிடைக்கும்.. இந்த காலத்துல ஒரு கல்யாணத்துக்கு எவ்வளவு செலவாகுது தெரியுமா? சிம்பிளா நடத்தணும்னா கூட அதுக்கு வேண்டிய பணத்தை நம்மால கொடுக்க முடியாது. மாமா தான் எல்லாம் ஏற்பாடு செய்யணும்..
இந்த காலமே இப்படின்னா இன்னும் 4வருஷம் போனா எவ்வளவு செலவாகும்னு யோசி.. இப்போல்லாம் படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளை தேடறதுக்குள்ள எத்தனை கஷ்டம் தெரியுமா?
மாமா இதெல்லாம் முகம் கோணாம தான் செய்வார். ஆனா அதுக்காக அவர் தான் இருக்காரேன்னு அவர் மேல எல்லாம் பார்த்தையும் சுமத்திட்டு அமைதியா இருக்க முடியுமா?
நம்மால முடிஞ்சது அவருக்கு ரொம்ப சிரமத்தை கொடுக்காம இருக்கிறது தான்.. அதுக்கு தான் இந்த சம்மந்தத்தை பேசி முடிக்கலாம்னு நான் சொன்னேன். இவங்க இவ்வளவு வரதட்சணை வேணும்னு கறாரா இருக்கவங்க இல்ல.. நல்ல குடும்பம், நல்ல மனுஷங்க.. உன்னோட விருப்பத்துக்கு மதிப்பு கொடுப்பாங்க.. இதை வேண்டாம்னு விட்டுட்டா, நாளைக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையை தேட எத்தனை சிரமம் தெரியுமா? மாமாக்கும் நல்ல வரனா பார்த்து உனக்கு முடிக்கணுமேன்னு மனசுக்குள்ள கவலை வந்துடும்..
அதனால இதெல்லாம் புரிஞ்சிக்க பாரு.. நான் என்ன இந்த வரனையே உனக்கு கல்யாணம் செய்து வச்சிடணும்னா சொல்றேன்.. முதலில் அவங்க வந்து உன்னை பார்க்கடும், அப்புறம் அவங்களுக்கும் பிடிக்கணும், நம்ம எல்லோருக்கும் பிடிக்கணும்.. அதுக்குப்பிறகு தான் மத்ததெல்லாம் பேசுவோம்.. அதனால நல்லா யோசிச்சு சொல்லு.. அம்மா உன்னை கட்டாயப்படுத்தல.. ஆனா நம்ம சூழ்நிலையை புரிஞ்சு நடந்துப்பேன்னு நினைக்கிறேன்..” என்று அவர் சொல்லி முடிக்கவும் அருள் முற்றிலும் குழம்பிப் போனாள்.
குழப்பத்தின் முடிவில் அவள் புரிந்துக் கொண்டது இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்வது தான், இத்தனை பேசியும் அவள் பிடிவாதமாக திருமணம் வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும், அதனால் நேராக புகழேந்தியிடம் சென்று அவள் இப்போது திருமணத்திற்கு சம்மதிப்பதாக சொல்லிவிட்டாள்.
அருள் இப்போது திருமணத்திற்கு சம்மதம் சொன்னது கலையரசியின் வற்புறுத்தலால் தான் என்பதை புகழேந்தியால் மட்டுமல்ல, அனைவராலும் புரிந்துக் கொள்ள முடிந்தது. கலை இந்த சம்பந்தத்தை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார் என்பதும் முன்பே தெரிந்த விஷயம் என்பதால் அதற்கு மேலும் யாரும் மறுப்பு தெரிவிக்காமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி, ஞாயிறன்று அனைவரும் வீட்டில் இருப்பர் என்பதால், அன்று அருள்மொழியை பெண் பார்க்க வரும்படி தகவல் கூறினர்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அன்னைக்காக ஒத்துக் கொண்டாலும் மனதில் இப்போதே திருமணம் என்பதில் அருள்மொழிக்கு கவலையாக தான் இருந்தது. அவளுக்கு பிடித்து தான் திருமணம் என்று கலை சொல்லியிருந்தாலும், அதன்பின் அன்னையை மீறி அவளால் மறுப்பும் சொல்ல முடியாது என்பதால் அதுவே அவளது கவலைக்கு காரணமாக இருந்தது.
அவள் சரியில்லை என்பதை புரிந்துக் கொண்டாலும் கலை எதற்கும் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்பதால் மற்றவர்களால் எதுவும் பேச முடியவில்லை.
ஆனால் இலக்கியா கொஞ்சம் வாய் துடுக்காக பேசிவிடுவாள் என்பதால், நேராக கலையரசியிடம் சென்று,
“கலை அத்தை.. அருள் நீங்க சொல்றதுக்கெல்லாம் தலை ஆட்றாங்கிறதால நீங்க இப்படி அவளை கட்டாயப்படுத்தக் கூடாது..” என்றதும் கலைக்கு கோபம் வந்துவிட்டது.
“அருளோட நல்லதுக்கு தான் நான் செய்வேன். சில விஷயங்களில் பசங்க புரிஞ்சுக்காம வேண்டாம்னு சொன்னா.. அதுக்காக அவங்களை கட்டாயப்படுத்துறதா அர்த்தமா? ஏதாவது உளறாத இலக்கியா..” என்றார்.
“நான் உளறுவதா நீங்க நினைக்கலாம் அத்தை.. ஆனா அருள் நீங்க சொல்றதுக்காக மட்டும் தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிறா.. மத்தப்படி அவளுக்கு இந்த கல்யாணத்துல துளி கூட இஷ்டமில்ல..” என்று அவள் கூறவும்,
“இப்போதைக்கு அப்படித்தான் இருக்கும்.. ஆனா கல்யாணம் ஆனா அப்புறம் அம்மா நமக்கு நல்லது தான் செஞ்சுருக்காங்கன்னு புரியும்.. அதனால இதோட இந்த பேச்சை விடு.. ஞாயிற்றுக் கிழமை அத்தனை பேர் முன்னேயும் ஏதாவது உளறி வைக்காத.. அன்னைக்கு எல்லாம் சுமூகமா முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. எல்லோரும் எடுத்து சொன்னா அருளும் புரிஞ்சுப்பா..” என்று சொல்லிவிட்டு சென்றார்.
இனி எதுவும் செய்ய இயலாது என்பதால் இலக்கியாவும் அமைதியாகிவிட்டாள். இத்தனை நேரம் இவர்கள் இருவரும் பேசியதை எதைச்செயாக வீட்டுக்கு வந்த சுடரொளி கேட்டாள்.
மேலோட்டமாக அவர்கள் பேசிய விஷயத்தில் அவள் புரிந்துக் கொண்டது இது தான், அதாவது அருள்மொழிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. கலை பெரியம்மா தான் அவளை கட்டாயப்படுத்துகின்றனர்.
ஞாயிறன்று அனைவரும் கூடி அவளை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முயற்சி செய்யப் போகின்றனர். ஆனால் அது நடக்கக் கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டவள், அதற்கு என்ன செய்ய என்று யோசிக்க ஆரம்பித்தாள். அதாவது இது மகிக்கும் அவளுக்குமான திருமணப் பேச்சு என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால் இவர்கள் இருவரின் திருமணம் பற்றி வீட்டார் கலந்து பேச ஞாயிறு என்று ஒருநாளை ஏன் முடிவு செய்ய வேண்டும்? சாதாரணமாக அனைவரும் கூடி இருக்கும் நேரத்திலேயே இதையெல்லாம் பேச மாட்டார்களா? குறிப்பிட்டு ஞாயிறு என்றால் வேறு ஏதோ இருக்கிறது என்று அவள் புரிந்துக் கொள்ள வேண்டாமா? ஆனால் அவள் அதையெல்லாம் புரிந்துக் கொள்ளும் மனநிலையிலும் இல்லை. மற்றவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளவும் தோன்றவில்லை. இதெல்லாம் நடக்கக் கூடாது என்று அவளே ஒரு திட்டம் போட்டு அனைத்தையும் குளறுபடி செய்தாள்.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}