தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 03 - ஸ்ரீ
“அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாறேன்
முன்னாழகில் நீயும் சீதை
பின்னிலாகில் ஏறும் போத
பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்டா கரஞ்சேனே
ரெக்க கட்டி பறந்த ஆளு
பொட்டிக்குள்ள அடஞ்சேனே “
அந்த வார இறுதியில் நிச்சயதார்த்தப் புடவை எடுத்துவிட்டதாய் ஸ்ரீகாந்தின் தாய் மதுவின் அம்மாவிற்கு அழைத்துக் கூறினார் அளவு ஜாக்கெட்டை வாங்கி வராததால் ப்ளௌசை கொரியர் அனுப்பி வைப்பதாகவும் மதுவிற்கு பிடித்தமாதிரி தைத்து வைத்துக் கொள்ளுமாறும் கூறினார்.
அவர் கூறியபடியே அடுத்த இரண்டு நாட்களில் கொரியர் கைக்கு கிடைத்து விட பிரித்து பார்த்தவளின் முகம் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அங்கிருந்தே சமையலறையிலிருக்கும் தாய்க்கு குரல் கொடுத்தாள்.
“ ம்மா என்ன கலர் மா இது நல்லாவே இல்ல பிளவுஸ் இப்படினா புடவை எப்படி இருக்குமோ தெரியல.. எனக்கு பிடிக்கவே இல்லை மா..”
“அவங்க தான் உனக்கு என்ன கலர் பிடிக்கும்னு கால் பண்ணி கேட்டாங்க இல்ல சொல்லாம இருந்தது உன் தப்பு இப்ப வந்து அவங்கள தப்பு சொல்ற அவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி தான் எடுத்திருப்பாங்க வாய மூடிட்டு ஒழுங்கா கொண்டுபோய் தைக்க கொடுத்துட்டு வா”
“அதானே நீ எப்ப தான் எனக்கு சப்போர்ட் பண்ணி பேசி இருக்க..என்னவோ போ எனக்கு புடிக்கல புடிக்கல புடிக்கல”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“எல்லாம் உங்க அப்பாவ சொல்லணும் ஒரேடியா செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கார்”
துணியை தைக்க கொடுத்துவிட்டு வந்தவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். வைரவன் வந்ததும் மறுபடியும் பஞ்சாயத்தை ஆரம்பித்திருந்தாள்.
“அப்பா ஸ்ரீகாந்த் வீட்ல எடுத்த புடவை எனக்கு பிடிக்கவே இல்லை நல்லாவே இல்ல எப்படிப்பா கட்ட முடியும்”
“மது கண்ணா நான் வேணா சம்பந்தி கிட்ட பேசி பார்க்கட்டுமா வேற புடவை எடுத்துக்கலாமானு கேட்கலாமா”
சமையலறையிலிருந்து வேகமாய் வந்த மரகதம்,”நான் எதாவது திட்டிற போறேன் ரெண்டு பேரும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க அப்பாவும் பொண்ணும் நிச்சயத்துக்கு எடுத்த புடவையை வேண்டாம்னு சொல்லுவீங்களா? இதை தான் கட்டியாகணும் உங்க பொண்ணு செல்லம் கொஞ்சிகிட்டு மாமியார் வீட்ல எல்லாம் இருக்க முடியாது.. அப்புறம் உங்க பொண்ண நீங்களே வச்சுக்கோங்கனு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க ஒருநாள் தானே கட்டினா ஒண்ணும் ஆகிடபோறதில்ல கட்ட சொல்லுங்க”
அதன்பின் மகளை சமாதானப்படுத்தி சாதாரணமாக்குவதற்க்குள் ஒரு வழி ஆகிவிட்டிருந்தார் வைரவன்.
அப்படி இப்படியாய் நிச்சயதார்த்தமும் வந்தது காலை முதலே மரகதம் காலில் ரெக்கை கட்டி கொண்டு பறக்க மதுவோ தலை அலங்காரம் பார்லர் என பிஸியாக இருந்தாள் மாலை 5 மணி அளவில் மாப்பிள்ளை வீட்டாரும் சொந்த பந்தங்களோடு வந்துவிட வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பின் மாலை சிற்றுண்டி முடிந்து நிச்சயதார்த்தம் நல்லபடியாக ஆரம்பித்தது.
பெரியவர்கள் நிச்சயதார்த்த பத்திரிகையை வாசித்து தட்டை மாற்றிக்கொண்டனர்.மணமக்களுக்கு புது உடை கொடுத்து மாற்றிவர சொல்ல மதுவும் ஸ்ரீகாந்தும் தனித் தனி அறைக்குச் சென்று மாற்றி வந்தனர்.
அதன் பின் இருவரையும் நாற்காலியில் அமரவைத்து பெரியோர்கள் விபூதியிட்டு ஆசீர்வாதம் செய்து தங்களது பரிசுப் பொருள்களை அவர்களுக்கு அளித்து வாழ்த்தினர்.அதன்பின் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து மதுவிற்காக கொண்டு வந்திருந்த தங்க நெக்லஸ் செயினை ஸ்ரீகாந்தின் தங்கை மதுவிற்கு அணிவித்தாள்.
மதுவின் அண்ணன் முறையில் இருந்தவர் மாப்பிள்ளைக்காக வாங்கிய கைச் செயினை அவனுக்கு அணிவித்தார். அதன்பின் போட்டோ ஏற்பாடுகள் செய்து முடித்து அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.
மதுவோடு அமர்ந்து ஸ்ரீகாந்த் உணவு உண்ண கிடைத்த தனிமையில் மெதுவாய் அவளிடம்,”லுக்கிங் குட் மது..இந்த புடவை உனக்கு ரொம்ப நல்லா சூட் ஆய்டுச்சு..என் செலெக்ஷன் தான்..”
“ஓ..ரொம்ப நல்லாயிருக்கு”,என்றவள் புன்னகைக்க அதற்குள் ஸ்ரீகாந்தின் தாய் அவளருகில் வந்து பேச ஆரம்பித்திருந்தார்.