தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 16 - சித்ரா. வெ
மதுரிமா வெளியூரில் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வரும்போது நடுநிசி ஆகியிருந்தது. பொதுவாக படப்பிடிப்பிலிருந்து நேராக அவள் வீட்டிற்கு தான் செல்வாள். ஆனால் மாலை புவனா அவளை அலைபேசியில் அழைத்து “பார்ட்டி முடிந்ததிலிருந்து தேவி இன்னும் சகஜநிலைமைக்கு வரவில்லை. எப்போதும் அமைதியாக அமர்ந்து எதையோ யோசித்தப்படி இருக்கிறாள்.
ரூபினி வீட்டில் ஒரு பிரச்சனை என்று பாலாவும் அந்த வேலையாக அலைந்துக் கொண்டிருக்கிறான். அதனால் படப்பிடிப்பு முடிந்ததும் நீ நேராக இங்கே வீட்டுக்கு வந்தால் நன்றாக இருக்கும்” என்று சொல்லியிருந்தார். அவளுக்கும் அது சரியென்று படவே சரி என்று சொல்லியிருந்தாள். அதனால் நேராக இங்கே வந்தவள், குறிப்பிட்டு இந்த நேரத்திற்கு வருவேன் என்று புவனாவிடமோ யாதவியிடமோ எதுவும் கூறவில்லை. ஆனால் காரில் கிளம்பியதும் பாலாவிற்கு மட்டும் தகவல் சொல்லியிருந்தாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அதனால் புவனாவும் யாதவியும் உறங்கியிருக்க, அவள் வீட்டிற்குள் நுழையும்போது பாலா உறங்காமல் விழித்திருந்தான். ஆனால் அவள் வரவை கூட உணராமல் ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தான்..
“என்னண்ணா.. அண்ணி வீட்டு ப்ராப்ளம் பத்தி யோசிச்சிட்டு இருக்கியா?” என்று கேட்டப்படி அவனது யோசனையை மதுரிமா கலைத்தாள்.
ரூபினி வீட்டு பிரச்சனையை தான் விபாகரன் தீர்த்து வைப்பதாக சொல்லிவிட்டானே அதனால், “பெரிய பிரச்சனை இல்லம்மா.. சீக்கிரம் சரியாகிடும்.. விபா எல்லாம் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டான்..” என்று அவன் சொன்னதும், விபாகரனது பெயரை கேட்டதில் அவள் முகம் மலர்ச்சியானது.
அவளது முகமலர்ச்சி அவனை ஏதோ செய்தது. சொல்லப்போனால் அவள் வரும்போது அவன் அவளைப்பற்றிய சிந்தனையில் தான் இருந்தான்.
மதுரிமாவிற்கு விபாகரனை வரனாக பார்க்கலாம் என்று பாலா முன்பு யோசித்து, அதை தன் அன்னையிடமும் சொல்லியிருந்தானே, அவளது திரை உலக வாழ்க்கையை நினைத்து அதிகம் அலட்டிக் கொள்ளாமல் தனிப்பட்ட முறையில் அவளை அதிக மகிழ்ச்சியோடு விபாகரனால் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து தான் பாலா இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தான்.
இருந்தும் எதுவும் முடிவாகாமல் தங்கையிடம் பேசக் கூடாது என்பதால், அன்னையிடம் மட்டும் சொல்லி அன்று விபாகரன் வீட்டிற்கு மதுரிமாவையும் அழைத்துச் சென்றிருந்தான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
ஆனால் அதுதான் தவறோ என்று இப்போது பாலா யோசித்துக் கொண்டிருந்தான். அவனாக எதுவும் சொல்லாமலே விபாகரன் குறித்து தன் தங்கையின் மனதில் ஒரு சலனம் வந்ததை அவனால் உணர முடிந்தது. பார்ட்டியில் மதுவின் பார்வை விபாகரனையே சுற்றிக் கொண்டிருந்ததையும் அவளும் அவன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்ததையும் அவன் கவனித்திருந்தான்.
அப்போது அது குறித்து அவன் மகிழ்ச்சியடைந்தான். தன் முடிவை தன் தங்கை மறுக்க போவதில்லை என்பதில் நிம்மதியடைந்தான். ஆனால் இப்போது அவனால் அப்படி மகிழ்ச்சியடைய முடியவில்லை.
விபாகரனுக்கும் யாதவிக்குமான சம்பந்தம் குறித்து அவனுக்கு யோசனையாக இருந்தது. அதை சாதாரண ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. வெறும் அன்பு மட்டுமே விபாகரனை யாதவிக்காக இந்த அளவுக்கு யோசிக்க வைத்திருக்காது என்பது அவனது புரிதல். யாதவி மீது விபாகரனுக்கு இருக்கும் அன்பு, காதலை தவிர வேறு மாதிரி கற்பனை செய்ய முடியவில்லை.
வேறு மாதிரி அன்பாக, அதாவது நட்பு இல்லை சகோதர பாசமாக இருந்தால் நேற்று பார்ட்டியில் யாதவியை பார்த்த போதே விபாகரன் அவளை தனக்கு தெரிந்தவளாக காட்டிக் கொண்டிருப்பான். ஆனால் அவளை தெரியாத மாதிரியும் நடந்து, கூடவே அவளுக்காக ஒரு சின்ன விஷயம் ஆகினும் தன் மாமியாருக்கு இப்படி ஒரு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறான் என்றால், யாதவி மீது அவனுக்கு இருக்கும் அன்புக்கு என்ன பெயராக இருக்கும் என்பதை கொஞ்சமே கொஞ்சமாக கனிக்க முடிந்தது.
ஆனால் உண்மையில் இருவருக்கும் இருக்கும் சம்பந்தம் என்ன என்பதை இருவரில் ஒருவராவது வெளிப்படையாக சொல்ல வேண்டும், நடுவில் சாத்விக் வேறு இருக்கிறான். அவர்கள் விஷயம் என்ன என்பது தெரியும் வரை, யாதவியின் விஷயம் குறித்து குழப்பமாக இருப்பதால், நடந்தவைகளை மதுரிமாவிடம் தெரியப்படுத்திவிட்டால், அவளும் அவர்கள் விஷயம் குறித்து யோசித்து பார்ப்பாள் என்ற முடிவுக்கு பாலாவுக்கு வந்திருந்தான்.