தொடர்கதை - காணாய் கண்ணே - 11 - தேவி
கிருத்திகா என்னதான் உறங்காமல் இருந்தாலும், அன்று முழுதும் சுற்றிய அலுப்பும், ஒட்டக சவாரியும் உடலைக் களைப்புறச் செய்து விட, தன்னை அறியாமல் நள்ளிரவிற்கு மேல் ஆழ்ந்து உறங்கி விட்டாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகள் தொடர்ந்தன.
மகாராணா பிகானர் சென்ற முதல் நாள் முழுதும் ஓய்விலும் , வேடிக்கையிலும் கழித்து இருக்க, மறுநாள் பொழுது புலரும் போதே கவசங்களோடு தயாராகிவிட்டார்.
பதினைந்தாம் நூற்றாண்டு பாரத நாடு மிகப் பெரிய இன்னலை சந்தித்து இருந்த நேரமது. மொகலாயர்களின் தொடர் படையெடுப்பு இங்குள்ள ராஜ்யங்களை ஆட்டம் காண வைத்து இருந்தது.
நம் நாட்டு மக்களின் வீரத்தாலும், விவேகத்தாலும் போரில் வெற்றி அடைந்து இருந்த போதும், நம் நாடு இயற்கை செல்வங்களை இழந்து தவித்து இருந்த நேரம். மக்களும், மன்னர்களும் இழந்த செல்வங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இருந்தனர். அதே சமயம் முஹலாயர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது.
அன்றைய டெல்லி மாகாணத்தை ஆண்டு கொண்டு இருந்த ஹெமு விக்ரமாதித்யாவை அதிகமான படை பலம் மற்றும் இங்கிருந்து தோற்று ஓடிய மொஹாலயர்களின் இணைந்த பலத்தாலும் முறியடித்த முஹலாய பேரரசர் அக்பர், அந்தப் போரின் நினைவாக ஒரு தூண் எழுப்பியிருந்தார்.
இந்திய மன்னர்கள் போரில் வழி இல்லாமல் எதிரி நாட்டு அரசனைக் கொன்று இருந்தாலும், அவர்களுக்கு உரிய மரியாதை குறைக்க மாட்டார்கள். ஆனால் அக்பர் அந்த ஹெமு மன்னனை கொன்றதோடு உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசியது , இங்குள்ள மன்னர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது.
அக்பர் படைப் பிரிவினர் சித்தூரை கைப்பற்றியதும், அதன் அரசர் உதய் சிங்கையும் , அவர் வாரிசுகளையும் காக்கும் பொருட்டு மக்கள் அவர்களைத் தப்புவித்து இருக்க, அவர்கள் ஆரவல்லி மலைக் குன்றுகளில் அடைக்கலமாகினர். போரில் இறந்த வீரர்களின் மனைவிகள் உடன்கட்டை ஏறும் விதமாக ஒரே சமயத்தில் இருபத்தி ஓராயிரம் பெண்கள் தீக்குளித்தார்கள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
ஆரவல்லி குன்றின் அடிவாரத்தை நகரமாக மாற்றி உதய்பூர் என்ற நகரத்தை உருவாக்கி அதை ஆண்டு வந்தார் ராஜா உதய்சிங் . அவரின் வாரிசுகளில் ரானா பிரதாப் சிங் மூத்தவர். அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஷக்தி சிங்.
மக்கள் எல்லோரும் ராஜா உதய்சிங்கிற்கு பிறகு ரானா பிரதாப் மன்னராக வருவதை விரும்பவே, அவரே ராஜாவாக முடிசூடிக் கொண்டார்.
முஹலயர்களின் படை பலமும், அவர்களின் போர் முறையும் இவர்களுக்கு அச்சத்தைத் தரவே, சிறு நில மன்னர்கள் எல்லாம் அவருக்கு பணிந்து போயினர்.
ராஜபுத்திரர்களும் சிறு சிறு பிரிவாக பிரிந்து இருக்க, ஒரு சிலர் அக்பருக்கு பணிந்து சென்றாலும், பெரும்பாலனவர்கள் அக்பரை எதிர்க்கவே செய்தனர்.
ஆனால் போர் ஒன்று தொடங்க முடியாத படி நிலைமை இருக்கவே, அவர்கள் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யும் முயற்சியில் இருந்தனர். ராஜபுத்திரர்களின் அண்டை நாடான பிகானர், ஷெகாவத் பிரிவினர் எல்லோருமே அவர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்தனர். ராஜபுத்திரர்கள் போர் பயிற்சி பெற, அவர்களுக்குத் தேவையான குதிரைகள், ஒட்டகங்கள், யானைகள் எல்லாம் சேர்த்து வைக்கும் இடமாக இந்தப் பகுதிகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.
அதோடு ஒரே இடத்தில் எல்லாவற்றையும் சேர்க்காமல், அங்கே அங்கே பிரித்து வைத்து இருப்பதால் அவற்றைப் பார்வையிடுவதோடு , வீரர்களை உற்சாகப்படுத்துவதும் சேர்ந்து நடக்கும்.
ராஜபுத்திரர்களை ஒன்றிணைக்கும் வேலையை மகாராஜா ரானா பிரதாப் சிங் மேற்கொண்டார்.
அவரைப் பற்றித் தெரிந்து இருந்த பிகானர் தலைவரும், அவரின் உபதளபதிகளும் அன்றைய விடியல் பொழுதிலேயே வந்து நின்று விட்டனர். இவர்களோடு ப்ரித்விராஜ்ஜும் வந்து விட, எல்லோருமாக போர்ப் பயிற்சி நடக்கும் இடத்திற்குச் சென்றனர்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
சித்தூர் ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் மேவார் என்றைழைக்கப் பட்டனர். அவர்களே பின்னாளில் உதய்பூரில் வசித்ததால், தங்களை மேவார்கள் என்று அழைத்துக் கொண்டனர். ராணாவின் வீரர்கள் அனைவரும் மேவார் வீரர்கள் என்றழைக்கப் பட்டனர்.
காண்டா (khanda) எனப்படும் இருப் பக்கமும் கூராக்கப்பட்ட வாள் ராஜபுத்திரர்கள் உப்யோகித்தனர். அதில் பயிற்சி செய்வது மிகவும் கடினம். ஒரே வாளால் உடைக்க, பிரிக்க, அழிக்க முடியும். இதைப் பயிற்சி செய்தால் எதிரிலிருப்பவர் காயங்களில் இருந்து தப்பிக்க இயலாது.
வீரர்கள் ரானாவைப் பார்த்தவுடன் “ஜெய் பவானி” என்றுக் குரல் கொடுக்க, அவரும் பதிலுக்கு “ஜெய் பவானி: என்று பதில் கொடுத்தார்.
இரண்டிரண்டு வீரர்களாக பிரிந்து வரிசையாக நின்று பயிற்சி செய்தனர். அங்கே அங்கே வீரர்களைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே சென்றார்.
ஒரு பக்கம் முழுதும் இவ்வாறு இருக்க, இன்னொரு புறமோ யானைகளும், ஒட்டகங்களும் பயிற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டு இருந்தன. யானைகளுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படும். அவைகளை பாலைவனத்தில் பழக்கச் சிரமம் என்பதால், குறைந்த அளவே இருந்தன.